text
stringlengths 11
513
|
|---|
கடைசிப் பாராவை " அம்பு , இந்தப் பட்டுப்புடவையை நீ பார்த்தால் என் கையிலீருந்து அதைப் பிடுங்கி உன் நெஞ்சோடு சேர்த்துக்கொண்டு ,எனக்கு , ஐயோ எனக்குஎன்று குதிப்பாய். சந்தேகமே வேண்டாம். ராதையின் அழகையும் கண்ணனின் வேணுகானத்தையும் குழைத்து இதைப் படைத்திருப்பவனைக் கலைஞன் என்று நான் கூசாமல் அழைப்பேன். வண்ணக் கலவைகளில் இத்தனை கனவுகளைச் சிதறத் தெரிந்தவன் கலைஞன்தான் " என்று முடித்திருந்தாள். அந்தக் கடிதத்தைத் தபாலில் சேர்க்கும்போது அதனுள் வினையின் விதைகளும் அடங்கியிருந்தன என்பதை ரத்னாபாய் ஊகித்திருக்கவில்லை.
|
அம்புவிடமிருந்து வந்த பதிலில் , “ ரத்னா , உனது ஆங்கிலம் ! எத்தனை தடவை அதை வியந்தாயிற்று ! வியந்தததைச் சொல்லத் தெரியாமல் விழித்தாயிற்று ! ஒன்றாய்த்தானே படித்தோம் ? எங்கிருந்து கிடைத்தது உனக்கு மட்டும் இப்படி ஒரு பாஷை ? கடிதங்கள் மனப்பாடம் செய்யபடுவதுண்டோ ? செய்கிறேன். சில சமயம் மறு பாதியை அவர் திருப்பிச் சொல்லுகிறார். பரதநாட்டியம் மனக்கண்ணில் வருகிகிறது. உன் பாஷையின் நளினத்தை உணரும்போது. நானும் கல்லூரி ஆசிரியை , அதுவும் ஆங்கிலத்தில். நினைக்கவே வெட்கமாக இருக்கிறது... ஆமாம் அப்படி என்ன அதிசயம் அந்தப் புடவையில்
|
? வாங்கி வை எனக்கும் ஒன்று. அதே மாதிரி. என் சக ஆசிரியைகளுக்கு இரண்டு. வெட்கப்படட்டும் அவர்களும் என எண்ணி உன் கடிதத்தை காட்டப்போக- பயப்படாதே. முழுவதுமல்ல ; சில பகுதிகளைத்தான். இப்படி ஒரு கோரிக்கை வந்து சேர்ந்தது. தொந்தரவுதான் உனக்கு " என்று எழுதியிருந்தாள். " தொந்தரவுதான் ” என ரத்னாபாய் கடிதத்தைப் படித்து முடித்ததும் முணுமுணுத்தாள். “ அம்பு , என் கண்ணே. என் நினைப்பதைவிடவும் பெரிய தொந்தரவு ” என்று கற்பனையில் அம்புவின் வாட்டசாட்டமான முழு உருவத்தையும் இடது கைவிரல் நுனிகளால் அடிக்கொருதரம் மூக்குக்கண்ணாடியின் இரு
|
ஓரங்களையும் தொட்டு அசைத்துக்கொள்ளும் அவளுடைய தன்னுணர்வற்ற செய்கையோடு கண்முன் நிறுத்திச் சொன்னாள். " சிக்கலான பொறி , சிக்கலான பொறி " என்று அவள் வாய் ஆங்கிலத்தில் முணுமுணுத்தது. மில்டன் நழுவி விட்டிருந்தான். ஒவ்வொரு தடவை உணவுக்குப் பின்னும் இப்போதெல்லாம் இப்படி ஒரு நழுவல் இன்னும் பதினேழு வயது முடியவில்லை. அதற்குள் இந்தப் பழக்கம். வசதியாக புதுப்பெட்டிக்கடையும் பக்கத்திலே வந்தாயிற்று. ஆமாம்... எங்கிருந்து காசு ? பப்பாவிடமிருந்து திருடிக்கொள்வான் போலிருக்கிறது. பப்பா , மம்மியிடமிருந்து திருடிக்கொள்ளும்போது இதில்
|
என்ன தப்ப ? ரோஸியும் மேரியும் தையல் வகுப்புக்குப் போயிருந்தார்கள். இருவருக்குமே படிப்பு வரவில்லை. பள்ளிக்கூடத்தில் ரத்னாபாயின் டீச்சரின் பிள்ளைகளா என்ற கேலியை வாங்கிக் கட்டிக்கொண்டதுதான் மிச்சம். ஒவ்வொரு வருடமும் 365 அக்காவும் தங்கையும் மாறி மாறித் தோற்றுக் கொண்டிருந்தார்கள். " அவமானம்.. அவமானம் " என்று ரத்னாபாய் ஆங்கிலத்தில் முணுமுணுத்தாள் , “ என் குழந்தைகளா இவை ? இல்லை. இல்லவே இல்லை. ஜாண்சனின் குழந்தைகள். வேட்டைக்காரனின் குழந்தைகள் , வலிக்கிற பல்லை , ஊசிபோட்டு உணர்வு இழக்கச் செய்யாமல் , வலியோடு
|
பிடுங்குகிறவனின் குழந்தைகள். அவனுடைய சதாரத்தச் சிவப்பேறிய கண்களும் , முரட்டுக் கைகளு , கைகளிலும் மார்பிலும் கரடிக்கு முளைத்திருப்பதுபோல் கருமயிறும்.... கடவுளே , ஏன் என் மனத்தில் வசையைப் புகுத்துகிறாய் ? " என்று வாய்விட்டு அரற்றினாள் ரத்னாபாய். ஏன் இவ்வாறு துரதிர்ஷ்டம் பிடித்துப்போனேன் ? அம்மா சொல்வாள் உலகம் வயிறெரிந்துவிட்டது என்று... ரத்னாபாயைச் சிறுவயதில் அவளுடைய தாயார் மீராபாய் டீச்சர் வெளியே அழைத்துச் செல்லும்போது , அவளைப் பார்த்த ஒவ்வொரு ஆணும் பெண்ணும் வயிறெரிந்துவிட்டார்களாம். ரத்னாபாயின் அழகு
|
அவர்களிடத்தில் தாங்க முடியாத பொறாமையை ஏற்படுத்திற்றாம். மீராபாய் டீச்சரின் வாதம் இது. அம்புவுக்குப் பதில் எழுத எத்தனை நாட்கள் கடத்துவது ? மீண்டும் கடிதம் வந்துவிட்டது. " மறந்துவிட்டாயா ரத்னா ? லீவுதானே ? மசக்கையோ ? டூவா.... ? " ரத்னாபாய் எழுந்திருந்து மாடிக்குச் சென்றாள். மொட்டை மாடியில் தரையில் ஒரு கிழவர் உட்கார்ந்து கொண்டிருந்தார். வழுக்கைத்தலை. அழுக்குத் துண்டால் கன்னங்களைச் சுற்றி கழுத்தில் கட்டிக்கொண்டிருந்தார். கன்னம் வீங்கிய வீக்கத்தில் கண்கள் இடுங்கிப் புதைந்துகிடந்தன. முகம்ஜிவ் ஜிவ்வென்று சிவந்து
|
கிடந்தது. ரத்னாபாய் எதிர்ப்பட்டதும் கிழவர் சாத்தியிருந்த மாடி அறைக் கதவைச் சுட்டிக்காட்டிகவனிக்கச் சொல்லுங்கள்என்று சமிக்ஞை காட்டினார். ரத்னாபாய் முகம் கோபத்தில் கடுகடுத்தது. விரல் நுனியால் மிகுந்த நாடுக்குடன் கதவைச் சுண்டினாள். கதவு திறக்கப்படவில்லை. பலமாகத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தாள். நோயாளிகளை உட்கார்த்தும் நாற்காலிக்குப் பக்கத்தில் , பல்லை ராவும் கருவியின் பெரிய இரும்புச் சக்கரத்தினடியில் தலை வைத்து லுங்கி விலகிக் கிடக்க அலங்கோலமாகத் தரையில் கிடந்தான் ஜாண்சன். “ அசிங்கம் , வெட்கமாய் இல்லையா ? " என்று
|
கத்தினாள் ரத்னாபாய். " காலால் உதைப்பேன் " என்றாள். லேசாக ஒரு முனகல் கேட்டது. “ எனக்குக் கொஞ்சம் பணம் வேணும். அவசரம். பத்துப் பதினைந்து நாட்களில் திருப்பிக் கொடுத்துவிட முடியும் ” என்றாள். மீண்டும் முனகல் எழுந்தது. “ உங்களிடம் ஒரு உதவியை நாடி வந்திருக்கிறேன். எனக்குப் பைத்தியம். எப்பொழுதாவது நீங்கள் எனக்காக உங்கள் சுண்டு விரலை அசைத்திருக்கிறீர்களா ? " என்று ஆங்கிலத்தில் பேசினாள். நாடகத்தில் ஒரு கதாபாத்திரம் பேசுவதுபோல் இருந்தது. வெளியே கிழவர் தன் இருப்பிடத்தை விட்டு எழுந்திருந்து கதவுக்குப் பின்னால் வந்து
|
நிற்பதாக ரத்னாபாய்க்குத் தோன்றிற்று.சாத்தியிருக்கும் கதவுக்குப் பின்னால் ஏன் இவ்வாறு நிகழ்ந்திருப்பதாக எனக்குத் தோன்ற வேண்டும். அதிக உணர்வுகள் வேலை செய்வதாலா ? கற்பனையின் திமிரினாலா ? என்னுடைய நுட்பமும் , நகாஸும் , பதவிசும் , லளிதமும் 366 முரட்டுத்தனத்தால் சூறையாடப்பட்டு விட்டதா ?கதவைத் திறந்து பார்க்கிறபோது கிழவர் அங்கு நின்று கொண்டிருந்தால் , தனது காரியங்கள் சுமாரான வெற்றிக்குத் திரும்பும் என்றும் , அப்படியில்லாத வரையிலும் இப்போது இருப்பதுபோலவே இருக்கும் எனவும் கற்பனை செய்து கொண்டு கதவைத் திறந்தாள். கிழவர்
|
இருந்த இடத்திலேயே உட்கார்ந்து கொண்டிருந்தார். ரத்னாபாய் மீண்டும் உள்ளே நுழைந்து , " நான் சொல்வது காதில் விழுகிறதா ? " என்று உரக்கக் கத்தினாள். மீண்டும் முனகல் கேட்டது. முகம் லேசாகத் திரும்பியதும் கடைவாயில் எச்சில் வழிவது தெரிந்தது. " மிருகம். மிருகம். மிருகத்திலும் கேவலம் " என்று அவள் வாய் முணுமுணுத்தது. சிறு சுவர் அலமாரியைத் திறந்து இரண்டு மாத்திரைகளை ஒரு புட்டியிலிருந்து எடுத்துக்கொண்டு கிழவர் முன்னால் வந்தாள். “ இதை விழுங்கிவிட்டு உட்கார்ந்து இரும் " என்று சொல்லிவிட்டுப் படியிறங்கிக் கீழே வந்தாள். இப்போதே
|
போய் , காரியத்தை முடித்துவிட்டால் என்ன என்று ரத்னாபாய்க்குத் தோன்றியது. இன்று இரவு எப்படியும் அம்புவுக்குப் பதில் எழுதவேண்டும் என்பதும் , அந்த அந்த இடத்திற்கு என்ன என்ன வார்த்தைகளை உருவாக்கவேண்டும் என்பதும் அவள் மனதில் உருவாகியிருந்தன. வாசல் கதவைச் சாத்திவிட்டு உள்ளே வந்தாள் ரத்னாபாய். மாடியிலிருந்து ரேழிக்கு வரும் மாடிப்படிக் கதவையும் சாத்தினாள். இப்போது உள்ளே ஒரே இருட்டாகிவிட்டது. விளக்கைப் போட்டாள். இரண்டு கைகளிலும் சோப்பை நுரைத்துக் கைவளையல்களைக் கழற்றினாள். முகத்தைக் கண்ணாடியில் பார்த்தாள். முன் நரையை
|
உள்ளே தள்ளிக் கருமயிரை மேலே இழுத்துவிட்டாள். " காலம் குதிரை மீது ஏறிவந்து என்னைத் தாக்குகிறது " என்று ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டாள். “ இருபத்தைந்து வருடங்களுக்கு முன் நான் ஒரு பேரழகி என்பது உங்களுக்குத் தெரியுமா ? " என்று ஒரு சபையைப் பார்த்து கேட்பதுபோல் கற்பனை செய்துகொண்டு கேட்டாள். வளையல்களைக் கைப்பையில் வைத்துக்கொண்டு தெருவில் இறங்கினாள். இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் , ரத்னாபாய் தன் தாயார் மீராபாயுடன் தெருவழியாக நடந்து செல்வது இளைஞர் உலகில் ஒரு முக்கியமான சம்பவம். இந்த வாய்ப்பை எதிர்பார்த்து
|
அவர்கள் ஏமாறுவது , எதிர்பாராத நேரங்களில் கிடைத்துவிடுவதும் இளைஞர் உலகின் முக்கியமான செய்திகள்.என்னுடைய பொக்கிஷம் எப்படி ?என்று பெருமிதம் வழியும் முக பாவத்துடனும் ,என் பொக்கிஷத்தை எப்படி உங்களிடமிருந்து காப்பாற்றப் போகிறேனோ ?என்ற கவலை தெரியும் முகத்துடனும் மீராபாய் ரத்னாபாயுடன் இடைவெளிவிடாமல் நடந்து போவாள். தன் பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்ளச் சில டாக்டர்களும் இன்ஜினியர்களும் முன்வந்துள்ளனர் என்றும் , தான் இன்னும் எந்த முடியும் எடுக்கவில்லையென்றும் மீராபாய் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள். இது உண்மையா இல்லையா
|
என்பது தெரியாது. ஆனால்ம் தபாலில் ரத்னாபாய்க்குக் காதல் கடிதங்கள் வந்தன. அக்கடிதங்களை ரத்னாபாயின் தாயாரே தபால் சேவகனிடமிருந்து பெற்று , படித்து , சந்தோஷப்பட்டு அவற்றை மறைவாக வைத்துக்கொண்டாள். 367 எங்கள் ஊரில் அந்தக் காலத்திலிருந்த பெரிய வீட்டுப் பிள்ளைகளில் அநேகர் அவளுக்குக் காதல் கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள். ரத்னாபாய் ஒரு ஆங்கிலப் பிரியை என்ற செய்தி அப்போதே அடிபட்டுக் கொண்டிருந்ததால் , ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த கடுமையான ஆங்கில வார்த்தைகளை எல்லாம் தாங்கள் எழுதிய காதல் கடிதங்களில் திணித்து ,
|
அதற்குமேல் தங்களுக்குத் தெரிந்த ஆங்கிலக் கவிதைகளையும் சேர்த்திருந்தார்கள். இவ்வாறு காதல் கடிதங்களை எழுதியுள்ள பையன்களின் எந்தப் பையனைத் தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனமானது என மீராபாய் டீச்சர் தனது மனத்தில் ஓயாமல் கணக்கு போட்டு வந்தாள். அவள் மனத்தில் தன் பெண்ணுக்குத் தெரியாத பெரிய பிரச்சினையாக இது வளர்ந்து வந்திருந்தது. நாள் போகப்போக இந்தப் பிரச்சினையின் தீவிர நிலை தளர்ந்தது. இதற்குக் காரணம் , ரத்னாபாய்க்குக் காதல் கடிதங்கள் எழுதிய பையன்களில் அநேகர் தங்கள் படிப்பை முடித்துக்கொண்டு தங்கள் மாமன் மகளையோ அல்லது
|
அத்தை பெண்ணையோ அல்லது தாய் தகப்பன் தேடிச் சேர்த்த வேறு உறவுப்பெண்ணையோ கட்டிக்கொண்டு பம்பாய் , கல்கத்தா என்று மறைந்தார்கள். இந்த இளைஞர்களில் யாரையாவது , விடுமுறை நாட்களில் எங்கள் ஊர் திரும்பும்போது மனைவி சகிதம் மீராபாய் டீச்சர் பார்த்துவிட்டால் , அன்று இரவு ரத்னாவிடம் , " அந்த மயில் வீட்டுக்காரர் பிள்ளை அவன் பெண்டாட்டியைக் கூட்டிக்கொண்டு போகிறான் , பார்த்தேன். இதைவிட அவன் ஒரு கருங்குரங்கைக் கட்டிக்கொண்டிருக்கலாம் ! வெட்கம் கெட்ட பயல் " என்று திட்டுவாள். “ அம்மா , அவர் பெண்டாட்டி எப்படி இருந்தால் நமக்கு என்ன ?
|
எனக்கு வம்பு பிடிக்காது " என்பாள் ரத்னாபாய். “ உன் புத்திக்குத்தான் யாரும் உன்னைக் கட்டிக்கொள்ள வரவில்லை " என்று கொதிப்பாள் தாயார். “ அது உன்னுடைய பிரச்சினை அல்ல ; என்னுடையது " என்று ஆங்கிலத்தில் பதில் சொல்லுவாள் ரத்னாபாய். ரத்னாபாய்க்கு அவளுடைய நெருங்கிய தோழிகள் பலரைப்போல் ஆங்கிலம் எடுத்து எம்.ஏ. சேர முடியாமல் போயிற்று. " நாங்கள் படித்து எதற்குடீ ? நீ அல்லவா படிக்க வேண்டும் " என்றார்கள் தோழிகள். “ கடன்காரங்க கத்துவதை நீ ஏன் பொருட்படுத்த வேண்டும் ? கத்துவாங்க ; நீ படி. நான் படிக்க வைக்கிறேன் உன்னை " என்றாள்
|
மீராபாய் டீச்சர். பிடிவாதமாய் பி.டி. படித்து ஆசிரியை ஆனாள் ரத்னாபாய். எம்.ஏ. படிக்க முடியாமற்போனதுதான் எனது கேடு காலத்தின் ஆரம்பம். இந்த ஆங்கில வாக்கியத்தைப் பல தடவை ரத்னாபாய் பின்னால் சொல்ல நேர்ந்தது. ரத்னாபாய்க்கு வயதாகிக்கொண்டிருப்பது இப்போது அவள் முகத்தில் தெரிந்தது. “ என்ன , ஏதாவது பார்த்தாயா ? " என்று தெரிந்தவர்கள் கேட்பதைச் சகித்துக்கொள்ள முடியாமல் மீராபாய் டீச்சர் வெளியே போவதைக் குறைத்துக்கொண்டாள். இந்த விசாரிப்புகளில் லேசான பரிகாசம் கலந்திருப்பதையும் இப்போது அவளால் உணர முடிந்தது. " எந்த
|
டாக்டருக்கும் அதிருஷ்டம் அடிக்கவில்லையா இன்னும் ? " என்று மீராபாயிடம் சக ஆசிரியைகள் கேட்டுக்கொண்டிருந்தனர். “ எனது திருமணத்தை ஒரு சமூகப் பிரக்ஞையாக்கிவிட்டாய். இது நீ எனக்கு இழைத்த மாபெரும் தீங்கு " என்றாள் ரத்னாபாய் தன் தாயாரிடம். “ இப்போதெல்லாம் நீ பேசுவதே எனக்குப் புரியமாட்டேன் என்கிறது. நீ வேறு யாரோ மாதிரி பேசுகிறாய் " என்றாள் மீராபாய் டீச்சர். 368 அநேகமாக ஒவ்வொரு நாளும் ரத்னாபாய் பள்ளிக்கூடம் போகும் வழியில் ஜாண்சனைப் பார்ப்பது வழக்கம். பல் ஆஸ்பத்திரி முன்னால் லுங்கியைக் கட்டிக்கொண்டு அவன் சந்தோஷமாக
|
நின்றுக் கொண்டிருப்பான். காலையில் அவள் பள்ளிக்குப் போகும்போது , அவன் தன்னுடைய பழைய மாடல் குட்டிக்காரைக் கிளப்ப முயன்று கொண்டிருப்பான். நாலைந்து கூலிச் சிறுவர்கள் பின்னாலிருந்து தள்ளுவார்கள். கார் கிளம்பியது அத்தனை சிறுவர்களும் கார் கதவைத் திறந்துகொண்டு உள்ளே சாடி ஏறி விழுவார்கள். கார் ஒரு ரவுண்டு சுற்றிவிட்டு வந்து ஆஸ்பத்திரி முன் நிற்கும். “ அந்தச் செய்கை - அதில் நான் கண்ட எளிமை - அந்த ஏழைச் சிறுவர்களும் உங்களை அன்னியோன்னியமாக பாவித்த விதம் - அதற்காக உங்களை நேசித்தேன் " என்று ஆங்கிலத்தில் , திருமணம் முடிந்த
|
அன்று இரவு ஜாண்சனிடம் சொன்னாள் ரத்னாபாய். “ உன்னைவிடவும் அழகாக இருக்கிறது உன் ஆங்கிலம் " என்றான் ஜாண்சன். ஜாண்சனுடன் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ளுவது சாத்தியமில்லை என்பது ஒரு சில வாரங்களிலேயே ரத்னாபாய்க்குத் தெரிந்து போயிற்று. அன்றாடம் அவன் குடித்தான். கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் நண்பர்களுடன் வேட்டைக்குச் சென்றான். மனைவி , வீடு எனும் உணர்வுகள் அவன் ரத்தத்தில் கிஞ்சித்தும் கிடையாது என்பது ரத்னாபாய்க்கு உறுதியாயிற்று. " நான் ஒரு பொறுக்கி. என்னை நீ கட்டுப்படுத்த முடியாது. நீ சீமாட்டி என்றால் உன்
|
அம்மாவிடம் போய் இரு " என்று குடிவெறியில் கத்துவான் ஜாண்சன். " நீர் ஒரு எளிமையான மனிதர் என்று நினைத்து நான் ஏமாந்து போய்விட்டேன். வாழ்க்கை எவ்வளவு பயங்கரம் " என்றாள் ரத்னாபாய். " உன் ஆங்கிலத்தை நான் வெறுக்கிறேன் " என்று கத்துவான் ஜாண்சன். அன்று பேங்கில் அவள் எதிர்பாராத செய்தி கிடைத்தது. புதன்கிழமை மட்டும்தான் தங்கத்தின் பணம் கடன் கொடுப்பார்களாம். ரத்னாபாய் ஜவுளிக்கடைக்குச் சென்றாள். பட்டுச்சேலைகளை எடுத்து வைத்துவிட்டு , கையிலிருக்கும் சிறு தொகையை முன்பணமாகக் கொடுத்துவிட்டுப் போனால் , பின்னால் பேங்கிலிருந்து
|
பணம் பெற்று பாக்கியை அடைத்து , சேலைகளையும் எடுத்துச் சென்றுவிடலாம் என்று எண்ணினாள். கடைப்பையன்கள் முன்னால் வந்து நின்றதும் , “ அன்று நான் எடுத்துக்கொண்டு போன மாதிரி சேலை வேண்டும் " என்றாள். அவள் மனம் குறுகுறுத்தது. “ கடவுளே , எதற்காக இப்படி நான் சொல்கிறேன் ? எனக்கும் புத்தி பேதலித்து விட்டதா " என்று மனதிற்குள் முணுமுணுத்துக் கொண்டாள். பையன்கள் விழிக்க ஆரம்பித்தார்கள். ஒவ்வொருவராய் வந்து அவளைப் பார்த்துவிட்டுப் போனார்கள். “ யார்ரா அண்ணைக்குக் கொடுத்தது ? ” என்று முதலாளி அதட்ட ஆரம்பித்தார்.நான் எடுக்காத சேலையை
|
எப்படி இவர்கள் காட்ட முடியும் ? இதற்கு மேலும் இவர்களை தண்டிப்பது என்னைப்போன்ற ஒரு ஸ்திரீக்கு அழகல்லஎன்று ரத்னாபாய் ஆங்கிலத்தில் நினைத்துக்கொண்டே , “ நல்லதா எதையாவது காட்டுங்கப்பா ? " என்றாள்.எனக்கு புத்தி பேதலித்துவிட்டது. கற்பனையே நிஜம் என்று நம்ப ஆரம்பிக்கிறேனா ?பையன்கள் பட்டுச்சேலையை எடுத்துவர அறைக்குள் சென்றார்கள். பேரில் 369 " உண்மையில் அப்படி எழுதியிருக்க வேண்டிய அவசியமில்லை. அதிலும் என் அருமை அம்புவுக்கு " என்று ரத்னாபாய் மனதிற்குள் சொல்லிக்கொண்டாள். அகஸ்மாத்தாய்ப் படிக்க நேர்ந்தது அந்த ஆங்கிலக்
|
கவிதையை. அற்புதமான கவிதை. ஒவ்வொரு வார்த்தையும் வைரத்தோட்டில் கற்கள் பதித்த மாதிரி இருந்தது. அதில் சில வார்த்தைகள் ரத்னாவிடம் ஏதோ விதமான மயக்கத்தை ஏற்படுத்திற்று. அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒரு பட்டாடையை வருணித்தால் வர்ணனை மிக அற்புதமாய் அமையும் என்று அவளுக்குத் தோன்றிற்று. அந்த வருணனையை அன்றே அப்போதே அம்புவுக்கு எழுதுவதை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை. " பொல்லாத பொறிதான் அது ” என்று ரத்னாபாய் முணுமுணுத்தாள். “ அது சரி , எடுக்காத சேலையை எடுத்ததாக நான் ஏன் சொல்லுகிறேன். எதற்காக ? ரத்னா , சொல்லு , எதற்காக
|
? " என்று ரத்னா கேட்டுக்கொண்டாள். சேலைகளை கவுண்டரில் பரப்பிவிட்டார்கள். " எதைத் தேர்ந்தெடுப்பது ? அம்பு , உனக்கு எது பிடிக்கும் ? உன் சிநேகிதிகளுக்கு எது பிடிக்கும் ? உன் சிநேகிதி ஆங்கிலத்தில் ஒரு மேதை ; ஒப்புக்கொள்கிறோம். ஆனால் புடவை தேர்ந்தெடுப்பதில் அவள் ஒரு அசடு என்று அவர்கள் உன்னிடம் சொல்லும்படி ஆகுமா ? அல்லது ஆங்கிலத்தில் வெளிப்பட்ட ருசி புடவைத் தேர்வில் அழுத்தம் பெறுகிறது என்பார்களா ? பின்வாக்கியத்தை அவர்கள் சொல்லவேண்டுமெனில் நான் தேர்ந்தெடுக்க வேண்டிய சேலை எது ? எனக்கு ஏன் இன்று ஆங்கில வார்த்தைகள்
|
அதி அற்புதமாய் ஓடிவருகின்றன ? அம்புவுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதுவதற்கான வேளை நெருங்கிவிட்டதா ? " மூன்று சேலைகளைத் தேர்ந்தெடுத்தாள் ரத்னாபாய். புதன்கிழமை காலையில் மீதிப்பணம் தந்து எடுத்துக்கொள்வதாய்க் கடைமுதலாளியிடம் சொல்லி , சிறிது முன்பணமும் கொடுத்துவிட்டு வெளியேறினாள். அன்று இரவு ரத்னாபாய் அம்புவுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினாள். அதன் கடைசி பாராவில் " சேலைகள் எடுத்து அனுப்பி விட்டேன். உனக்கும் உன் சிநேகிதிகளுக்கும். நீயும் உன் சிநேகிதிகளும் அதைக் கட்டிக்கொண்டு கல்லூரி முன்னால் ( அதன் வெளிச்சுவர் , கல்லால்
|
எழுப்பப்பட்டது ) நிற்பதாய் கற்பனையும் பண்ணியாயிற்று. ஒன்று சொல்லி விடுகிறேன். நீ உன் சேலைக்குப் பணம் அனுப்பினால் எனக்குக் கெட்ட கோபம் வரும். எனக்குத் தரவேண்டியது உன் புகைப்படம் , அந்தப் புடவையில். ஐயோ ! என் சிநேகிதிக்கு என்னால் நஷ்டம் என்று இளைத்துப்போய்விடாதே. இங்கு பிள்ளைகள் தோற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். பல்வலிக்கும் குறைவில்லை " என்று எழுதியிருந்தாள். தான் எழுதிய கடிதத்தை ஏழெட்டுத் தடவை படித்துப் பார்த்தாள் ரத்னா. அவளுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. " பாஷை ஒரு அற்புதம். கடவுளே உனக்கு நன்றி " என்றாள்.
|
" இல்லாவிட்டால் எனக்கு வேறு எதுவுமில்லை " என்றாள். மீண்டும் கண்ணாடி முன் நின்று சிறு அபிநயத்துடன் அந்தக் கடிதத்தைப் படித்தாள். புதன்கிழமைக் காலையில் பேங்குக்குப் போகவேண்டும் என்ற சிரத்தையே ரத்னாபாய்க்கு ஏற்படவில்லை. 370 விகாசம் - சுந்தர ராமசாமி அம்மா கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தாள். நான் கட்டிலை ஒட்டிக் கீழே படுத்துக்கொண்டிருந்தேன். பிந்தி எழுந்திருப்பதை நானும் அம்மாவும் வழக்கமாக்கிக் கொண்டிருந்தோம். நாங்கள் சிறிது போராடிப் பெற்றிருந்த உரிமை இது. சூரியோதயத்திற்கு முன் குளியலை முடித்து விடும் தர்மத்தை
|
யுகாந்திரங்களாகக் காப்பாற்றி வரும் குடும்பம். நாங்களோ நோயாளிகள். அம்மாவுக்கு ஆஸ்துமா. எனக்கு மூட்டுவலி. இரண்டுமே காலை உபாதைகள் கொண்டவை. குதிரை பிடரியை உதறும் மணிச்சத்தம் கேட்டது. வண்டியைப் பூட்டியாயிற்று. அப்படி என்றால் அப்பா கடைச் சாவிக்கொத்தை எடுத்துக்கொண்டுவிட்டார் என்று அர்த்தம். கடிகாரம் எட்டரையை நெருங்கிவிட்டது என்றும் அர்த்தம். இனி செருப்பு அணிதல். கிரீச் கிரீச். படி இறங்கியதும் குடையைப் படக்கென்று ஒரு தடவை திறந்து மூடல். குடையின் அன்றாட ஆரோக்கிய சோதனை அது , கதவு லேசாகத் திறந்தது. இடைவெளியில் பாய்ந்த
|
சூரிய ஒளி கண்ணாடிக்குழாய் போல் உருப்பெற்று உயர்ந்தது. ஒளித்தூணில் தூசி சுழல்கிறது. அப்பா ! கண்ணா , ஒரு கண் , பாதி விபூதிப் பூச்சு , சந்தனப்பொட்டு , அதற்குமேல் குங்குமப்பொட்டு. " டேய் அம்பி , எழுந்திரு " என்றார் அப்பா. நான் கண்களை மூடிக்கொண்டேன். ஆழ்ந்த நித்திரைக்கு வசப்பட்டுவிட்டதுபோல் அசையாமல் கிடந்தேன்.டேய் எழுந்திருடா தடியா. அப்பா கூப்பிடறார் " என்றாள் அம்மா. ஓரக்கண்ணால் அப்பா முகத்தைப் பார்த்தேன். அது அன்பாக இருந்தது. மிருதுவாக இருந்தது. கடுமையான தூக்கத்தைத் தகர்த்துக் கொண்டு வெளிப்படும் பாவனையில்
|
கண்களைத் திறந்தேன். 371 ” டேய் , குளிச்சு சாப்பிட்டுட்டு ஆனைப்பாலம் போ " என்றார் அப்பா. “ போய் ராவுத்தரைக் கையோட கடைக்குக் கூட்டிக்கொண்டு வந்துடு. நான் போய் வண்டி அனுப்பறேன் " என்றார். நான் அப்பா முகத்தையும் அம்மா முகத்தையும் மாறி மாறிப் பார்த்தேன். கடையில் முன் தினம் ராவுத்தருக்கும் அப்பாவுக்கும் நடந்த மோதலைப்பற்றி அம்மாவிடம் சொல்லியிருந்தேன். " அவர் இல்லாம உங்களுக்கு முடியுமா முடியாதா ? ” என்று கேட்டாள் அம்மா. “ எத்தனை வருஷமாச்சு இந்தக் கூத்து ” என்றாள். “ விலகறதும் சேத்துக்கறதும் ” என்றாள். அப்பாவின்
|
முகம் சிவந்தது. மேலும் சிவந்தால் மூக்கு நுனியில் ரத்தம் கசிந்துவிடும் என்று தோன்றிற்று. " ஓணம் வர்றது... நீ கடைக்கு வந்து பில்போடு " என்றார் அப்பா. கோபத்தின் உக்கிரத்தில் உதடுகள் கோணி வலித்துக் காட்டுவதுபோல் வார்த்தைகள் தேய்ந்தன. " இந்த லோகத்திலே ராவுத்தர் ஒருத்தர்தான் பில்போடத் தெரிஞ்சவரா ? ” என்றாள் அம்மா. " வாயை மூடு " என்று கத்தினார் அப்பா. சடேரேன்று என்னைப் பார்க்கத் திரும்பிக்கொண்டே , “ எழுந்திருடா " என்று ஒரு அதட்டல் போட்டார். நான் படக்கென்று எழுந்திருந்து வில் மாதிரி நின்றேன். “ போ , நான் சொன்ன
|
மாதிரி செய் " என்றார். என் காலில் கட்டியிருக்கும் சக்கரத்தை யாரோ இழுத்ததுபோல் வேகமாக வெளியே நகர்ந்தேன். குதிரைவண்டி கிளம்பும் சத்தம் வாசலில் கேட்டது. காலைக் காரியங்களைப் பம்பரமாகச் செய்து முடித்தேன். என்ன சுறுசுறுப்பு ! வழக்கத்திற்கு மாறாக அரை நிஜாருக்குமேல் வேட்டியைக் கட்டி , முழுக்கைச் சட்டையும் அணிந்து கொண்டேன். இரண்டும் சேர்ந்து சற்றுத் தெம்பாக என்னைப் பேசவைக்கும் என்று ஒரு நம்பிக்கை. அப்பாமீது வழக்கமாக வரும் கோபம் அன்று வரவில்லை வருத்தமும் இல்லை. கொஞ்சம் பிரியம்கூட கசிவது போல் இருந்தது. பாவம் , ஒரு
|
இக்கட்டில் மாட்டிக்கொண்டுவிட்டார். முன்கோபத்தில் முறித்துப் பேசிவிட்டார் ராவுத்தரிடம். சிறிது சாந்தம் கொண்டிருக்கலாமே என்று சொல்லலாம். அவர் ஒரு முன்கோபி என்றால் சிறிது சாந்தம் கொண்டிருக்கலாம். முன்கோபமே அவர் என்றால் எப்படி சாந்தம் கொள்ள முடியும் ? இந்த மனப்பின்னல் தந்த குதூகலத்தில் , அம்மா முன் சென்று அவள் முகத்தைப் 372 பார்த்து , “ முன் கோபமே அவர் என்றால் எப்படி சாந்தம் கொள்ள முடியும் ? " என்று கேட்டேன். அம்மா சிரித்தாள். மறுகணம் சடக்கென்று முகத்தைக் கடுமையாக்கிக்கொண்டு , " ரொம்ப இலட்சணம்தான். புத்தியுள்ள
|
பிள்ளை என்றால் ராவுத்தரைக் கூட்டிக் கொண்டு கடைக்குப் போ " என்றாள். தன்நெஞ்சின் மீது வலது கையை வைத்துக்கொண்டு “ அவர் என்ன பேசியிருந்தாலும் அதற்காக நான் வருத்தப்படறேன்னு சொல்லு " என்றாள். நான் போய் குதிரைவண்டியில் ஏறிக்கொண்டேன். ஓணம் விற்பனையை ராவுத்தர் இல்லாமல் சமாளிக்க முடியாது என்றுதான் எனக்கும் தோன்றிற்று. அவர் மாதிரி யாரால் கணக்குப் போடமுடியும் ? மனக்கணக்கில் ஒரு மின்னல் பொறி அவர். அவரும் சரி , வரிசையாக ஐந்து பேர் உட்கார்ந்து காகிதத்தில் கூட்டிக் கழிப்பதும் சரி. மனித மூளையா அது ! அமானுஷ்யம். பில்போடும்
|
பகுதியில் கூடிநிற்கும் வாடிக்கையாளர்கள் பார்த்து வியக்கும் அமானுஷ்யம். ஆச்சரியத்தில் விக்கித்துப் போய் " மனுஷ ஜென்மம்தானா இது ! " என்று பலர் வாய்விட்டு கேட்டிருக்கிறார்கள். “ காதாலே கேட்டேஇப்படி போடுறாரே மனுஷன் ; கண்ணால் பார்க்க முடிஞ்சா எப்படிப் போடுவாரோ ? " என்று கேட்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் ஸ்கூல் படிப்பு மூணாம் கிளாஸ். கடையைப் பெருக்கிப் பாய் விரித்து தண்ணீர் வைக்கும் கோமதியைவிட வருஷம் படிப்புக் குறைவு. அன்று இதமாகத்தான் பேச்சுத் தொடங்கிற்று. “ கடனை இப்படி மேலே ஏத்திண்டே போனா எப்படி ராவுத்தர் ? தொகை
|
ஏகமா ஏறிப்போச்சே " என்றார் அப்பா , தனக்கு வேண்டிய துணிகளையெல்லாம் பொறுக்கித் தன்பக்கத்தில் குவித்து வைத்துக்கொண்டுவிட்டு அதன்பின் கடன் கேட்டது அப்பாவுக்குப் பிடிக்கவில்லை என்று தோன்றிற்று. “ என்னச் செய்யச் சொல்றீங்க ஐயா ? வீடு முழுக்க பொட்டைக. மகன்க கூறில்லே. மாப்பிள்ளைக கூறில்லே. மக நாலு. மருமக நாலு. பேத்திக எட்டு. பேரன்க எட்டு. எத்தனை ஆச்சு ? ஆளுக்கொண்ணு எடுத்தாலும் தொகை ஏறிப் போகுதே " என்றார் ராவுத்தர். ராவுத்தரின் முகத்தை அப்பா கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.இளக்காரம் கொஞ்சம் கூடிப்போச்சு. அத
|
மட்டுப்படுத்திக் காட்டறேன் இப்போஎன்று அவர் தனக்குள் கறுவிக்கொள்வதுபோல் இருந்தது. " கோலப்பா , துணிக்கு பில் போட்டுக் கட்டித் தந்துரு " என்றார் ராவுத்தர். தான் சம்மதம் தருவதற்குமுன் அவரே எடுத்துக் கொண்டு விடுவதா ? அப்பாவின் முகம் சிவந்தது. “ இந்தத் தவா கடன் தர சந்தர்ப்பம் இல்லை " என்றார் அப்பா. குரலில் கடுமை ஏறி இருந்தது. " அப்படீன்னா நம்ம உறவு வேண்டாம்னுதானே ஜையா சொல்றீங்க ? குட்டீ , என்னெ ஊட்ல கொண்டுபோய் சேர்த்துடு " என்று சொல்லிக்கொண்டே எழுந்திருந்தார் ராவுத்தர். கோமதி , ராவுத்தரின் வலது கையைத் தனது இடது
|
தோளில் தூக்கி வைத்துக்கொண்டது. படி இறங்கிற்று. ராவுத்தரும் படியிறங்கினார். கடை சாத்தும்போது ஒவ்வொரு நாளும்வரேன் ஐயாஎன்று அப்பா 373 இருக்கும் திசையைப் பார்த்து ராவுத்தர் கும்பிடுவது வழக்கம். அன்று அவர் விடை பெற்றுக் கொள்ளவில்லை. அதாவது விடைபெற்றுக் கொண்டுவிட்டார். கோமதியைக் கூட்டிக்கொண்டு ராவுத்தர் வீட்டுக்குப் போகலாம் என்று நான் யோசித்தேன். அப்படிச் செய்தால் ராவுத்தர் மனதில் இருக்கும் வெக்கை சற்றுத் தணியும் என்று எனக்குத் தோன்றிற்று. ஆனால் கோமதி வீட்டில் இல்லை. “ ராவுத்தர் வரலேன்னு சொல்லிட்டாரு. இப்பத்தான்
|
போகுது கோமதி கடைக்கு ” என்றாள் அவள் தாயார். தோப்பைக் குறுக்காகத் தாண்டி , சந்து வழியாக நுழைந்து , ராவுத்தரின் வீட்டு முன்னால் போய் நின்றேன். ஓட்டு வீடு. தணிந்த கூரை. முன் முற்றத்தில் வலதுபக்கம் கிணறு. காரைப் பூச்சு இல்லாத கைப்பிடிச் சுவர் இடிந்து கிடந்தது. சுவரிலும் கிணற்றைச்சுற்றித் தளத்திலும் வெல்வெட் பாசி புசுபுசுவென்று. வீட்டின்முன் வெட்டுக் கல் படிகள். நிலையில் சாக்கு விரிப்புத் தொங்கிக் கொண்டிருந்தது. “ அம்பி வந்திருக்கேன் ” என்றேன் நான் உரக்க. ஒரு சிறுமி வெளிப்பட்டாள். இரட்டையில் மற்றொன்று என்று
|
தோன்றிய இன்னொரு சிறுமியும் அவள் பின்னால் வந்தாள். உள்ளேயிருந்து " யாரம்மா ? ” என்று ராவுத்தரின் குரல் கேட்டது. “ நான்தான் அம்பி " என்றேன். “ வா , வா " என்றார் ராவுத்தர். உற்சாகத்தில் கொப்பளிக்கும் குரல். நான் படுதாவைத் தள்ளிக்கொண்டே உள்ளே போனேன். சாணி மெழுகிய தரையில் வஸ்தாத் மாதிரி ராவுத்தர் சப்பணம் கூட்டி உட்கார்ந்து கொண்டிருந்தார். இரு கரங்களும் அந்தரத்தில் உயர்ந்திருந்தன. “ வா , வா ” என்று வாய் அரற்றிக்கொண்டே இருந்தது. நான் அவர் முன்னால் போய் முட்டுக்குத்தி நின்றேன். துழாவிய கரங்கள் என் மீது பட்டன. கண்கள்
|
மலங்க மலங்க விழித்தன. என்றோ இழந்து விட்ட ஜீவ ஒளியை மீண்டும் வரவழைக்க அவை துடிப்பதுபோல் இருந்தன. என் தோள்பட்டையை அழுத்தி என்னைத் தன்பக்கத்தில் இழுத்து உட்கார வைத்துக்கொண்டார் அவர். உணர்ச்சி வசப்பட்டதில் அதிகம் நெகிழ்ந்துவிட்டது போல் இருந்தது. 374 இன்னிக்கு என்ன , வேட்டி கட்டிக்கிட்டாப்ல ! " என்றார். " தோணிச்சு " என்றேன். " என்ன கரை ? " " குண்டஞ்சி. " “ ஐயர் மாதிரியே. பாக்கவும் ஐயர் மாதிரியே இருக்கேன்னு கடைப்பையன்க சொல்வானுக. எனக்குத்தான் கொடுத்து வைக்கல பாக்க. " இப்படிச் சொல்லிவிட்டு என் கன்னம் , கழுத்தும் ,
|
நாடி , வாய் , மூக்கு , கண் , நெற்றி , காது எல்லாம் தடவிப் பார்த்தார். “ எல்லாம் கணக்கா வச்சிருக்கான் " என்று சொல்லிவிட்டுச் சிரித்தார். வந்த விஷயத்தைச் சொல்ல இதுதான் சந்தர்ப்பம் என்று தோன்றிற்று. ஆனால் , கண்ணுக்குத் தெரியாத ஒரு கை மென்னியைப் பிடித்துக்கொண்டிருக்கிறது. நாக்கு புரள மறுக்கிறது. “ அம்மா... ” என்று பேச்சைத் தொடங்கினேன். ராவுத்தர் குறுக்கிட்டு , “ எப்படி இருக்கு அவங்களுக்கு உடம்பு ? " என்றார். “ அப்படியேதான் ” என்றேன். “ நம்மட்ட தூதுவளை கண்டங்கத்திரி லேகியம் இருக்கு. இழுப்புக்கு அதுக்கு மேலே
|
மருந்து இல்லே. ஐயருக்கு புட்டி மேலே இங்கிலீஷ்ல எழுதியிருக்கணும். நம்மகிட்ட இங்கிலீஷ் இல்லே. மருந்துதான் இருக்கு " என்று சொல்லி விட்டுப் பெரிதாகச் சிரித்தார். விஷயத்தைச் சொல்ல இதுவும் நல்ல தருணம். 375 " அம்மா உங்களைக் கடைக்குக் கூட்டிண்டு போகச் சொன்னா. அப்பா ஏதாவது முன்பின்னா பேசியிருந்தாலும் அதுக்காக அம்மா வருத்தப்படறதாகச் சொல்லச் சொன்னா. தப்பா எடுத்துக்கப்படாதாம். தட்டப்படாதுன்னும் சொன்னா ” என்றேன். ராவுத்தரின் முகம் பரவசத்தில் மலர்ந்தது. இரு கரங்களையும் மேலே உயர்த்தி , “ தாயே நீ பெரிய மனுஷி " என்று
|
கூவினார். “ எழுந்திரு , இப்பவே போறோம் கடைக்கு ” என்றார். அந்த வருடம் ஓணம் விற்பனை நன்றாக இருந்தது. படு உற்சாகமாக இருந்தார் ராவுத்தர். தன்னைச் சுற்றி முண்டி மோதும் கடைப் பையன்களை எப்போதும்போல் அனாயாசமாகச் சமாளித்தார். அபிமன்யு தன்னந்தனியாகப் போரிட்டது போல் இருந்தது. துணியின் அளவும் விலையும் காதில் விழுந்த மறுகணம் விடை சொல்கிறது வாய். என்ன பொறி மூளைக்குள் இருந்ததோ அந்த தெய்வத்துக்குத்தான் வெளிச்சம். விடை சொல்ல ஒரு கணம்கூடத் தேவையில்லாத அந்தப் பொறி என்ன பொறியோ ? பதினாறு அயிட்டங்களுக்குப் பெருக்கி வரிசையாக விடை
|
சொல்லி விட்டு , “ அயிட்டம் பதினாறு , கூட்டுத்தொகை ரூபா 1414 , பைசா 25 * என்று கூறும் அந்தப் பொறியை மனித மூளை என்று எப்படிச் சொல்ல முடியும் ? அவ்வளவும் கரும்பலகையில் எழுதிப்போட்டிருந்தால்கூடப் பார்த்துக்கூட்ட எனக்கு அரை மணி நேரம் பிடிக்கும். இங்கோ விடை மின்னல் அடிக்கிறது. ஒரு பிசகு விழுந்ததில்லை அன்று வரையிலும். அம்மா சொல்லியிருந்தாள். முன்னெல்லாம் அப்பா இரவில் கண் விழித்து ராவுத்தரின் விடைகளைச் சரி பார்ப்பாராம். " துள்ளல் கொஞ்சம் கூடிப்போச்சு அந்த மனுஷனுக்கு. ரெண்டு தப்பைக் கண்டுபிடிச்சு ஒரு தட்டுத் தட்டி
|
வைக்கணும் " என்பாராம். ஆனால் , இரவில் கண் விழித்ததுதான் மிச்சம். ஒரு தவறைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை அப்பாவால். ஒரு நாள் ஓர் ஒற்றைக்காளை வண்டி கடை முன்னால் வந்து நின்றது. முன்னும் பின்னும் வெள்ளைப் படுதா போட்டு மூடிக் கட்டிய வண்டி. வண்டிக்குள் இருந்துஓ'வென்று பெண்களின் ஓலம். குஞ்சு குளுவான்களின் கத்தல்கள். " நம்ம வூட்டுப் பொட்டைப் பட்டாளம் இல்லா வந்திருக்கு " என்றார் ராவுத்தர். ராவுத்தரின் வீடு ஏலத்திற்கு வந்து விட்டதாம் ! சாமான்களைத் தூக்கி வீசுகிறானாம் அமீனா. 376 வெளியே " எனக்கு என்ன செய்யணும்னு
|
தெரியலியே , ஆண்டவ ” என்று கதறினார் ராவுத்தர். குழந்தை மாதிரி அழத் தொடங்கி விட்டார். அப்படி அவர் அழுது கொண்டிருந்தபோது , கடைச் சிப்பந்தி கோலப்பன் பில்லுடன் வந்து , * 13 ரூபா 45 பைசா ; 45 மீட்டர் 70 சென்டி மீட்டர் " என்றான். அழுகையை நிறுத்தி விட்டு " எழுதிக்கோ , 614 ரூபா 66 பைசா " என்றார் ராவுத்தர். இப்படிச் சொல்லிவிட்டு அப்பா இருந்த கல்லாப் பெட்டி பக்கம் திரும்பி , “ ஐயா , வட்டியும் முதலுமா ஐயாயிரம் ரூபாய்க்கு மேல் கோர்ட்டிலே கட்டணுமே.... நான் எங்கே போவேன் பணத்துக்கு " என்று கதறினார். ராவுத்தரும் அப்பாவும்
|
குதிரைவண்டியில் வக்கீலைப் பார்க்கச் சென்றார்கள். அடுத்த நாள் ராவுத்தர் கடைக்கு வரவில்லை. செட்டியார் ஜவுளிக்கடையில் அவர் பில் சொல்லிக் கொண்டிருப்பதைத் தன் கண்ணால் கண்டதாகக் கோலப்பன் அப்பாவிடம் சொன்னான். “ என்ன அநியாயம் ! இப்பத்தானே அவருக்காக கோர்ட்ல பணத்தைக் கட்டிட்டு வரேன். காலை வாரிவிட்டுட்டாரே நன்றி கெட்ட மனுஷன் " என்று கத்தினார் அப்பா. கடைக் கோலப்பனுக்கு மிதமிஞ்சிய கோபம் வந்துவிட்டது. " கணக்குப் போடத் தெரியுமே தவிர , அறிவுகெட்ட ஜென்மமில்லே அது " என்றான். “ இதோ போய்த் தரதரன்னு இளுத்துக்கிட்டு வாறேன் "
|
என்று சைக்கிளில் ஏறிச் சென்றான். அப்பா சோர்ந்து தரையில் உட்கார்ந்து விட்டார். அவர் வாய் புலம்பத் தொடங்கிவிட்டது. " ரொம்பப் பொல்லாதது இந்த லோகம் " என்றார். “ பெத்த தாயை நம்ப முடியாது இந்தக் காலத்திலே " என்றார். சிறிது நேரத்தில் கோலப்பன் திரும்பிவந்தான். சைக்கிள் கேரியரில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் ராவுத்தர் ! ராவுத்தரைக் கல்லா முன்னால் கொண்டுவந்து நிறுத்தினான் கோலப்பான். 377 “ புத்தி மோசம் போயிட்டேன் ஐயா ” என்றார்ராவுத்தர் இரு கைகளையும் கூப்பியபடி. “ உம்ம கொட்டம் அடங்கற காலம் வரும் " என்று அப்பா கத்தினார்.
|
" அப்படிச் சொல்லாதீங்க ஐயா.... வேலைக்கு வா , நான் பணம் கட்டறேன்னு சொன்னார் செட்டியார். புத்தி மோசம் போயிட்டேன் ஐயா ” என்றார் ராவுத்தர். " உம்ம கொட்டம் அடங்கற காலம் வரும் ” என்று மீண்டும் சொன்னார் அப்பா. ஆச்சரியம்தான் , அப்பாவின் வாக்குப் பலித்ததுபோல் காரியம் நடந்தது. அந்தத் தடவை கொள்முதலுக்கு பம்பாய் போய்விட்டு வந்திருந்த அப்பா , ஒரு சிறு மிஷினை அம்மாவிடம் காட்டினார். “ இது கணக்குப் போடும் ” என்றார். " மிஷினா ? " " போடும் " என்றார் அப்பா. அம்மா ஒரு கணக்குச் சொன்னாள். அப்பா பித்தான்களை அழுத்தினார். மிஷின்
|
விடை சொல்லிற்று. நான் காகிதத்தை எடுத்துப் பெருக்கிப் பார்த்தேன். “ விடை சரிதான் அம்மா ” என்று கத்தினேன். “ ராவுத்தர் மூளையை மிஷினா பண்ணிட்டானா ? ” என்று கேட்டாள் அம்மா. நான் அன்று பூராவும் அதை வைத்து அளைந்து கொண்டே இருந்தேன். இரவு தூங்கும்போது கூட பக்கத்தில் வைத்துக் கொண்டு தூங்கினேன். ஆகக் கஷ்டமான கணக்குகளை எல்லாம் அதற்குப் போட்டேன். ஒவ்வொன்றுக்கும் விடை சரியாகச் சொல்லிற்று அது. கோமதி சொன்னது நினைவுக்கு வந்தது.தாத்தா எப்படி நிமிட்ல போடறீங்க கணக்கை ?என்று கேட்டதாம் கோமதி.மூளையில் 378 மூணு நரம்பு அதிகப்படியாக
|
இருக்குஎன்றாராம் ராவுத்தர். அந்த அதிகப்படியான நரம்புகள் எப்படி இந்த மிஷினுக்குள் வந்தன ? ஆச்சரியத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கோமதியிடம் கொண்டுபோய்க் காட்டினேன். கோமதியும் மாறிமாறிக் கணக்குப் போட்டுப் பார்த்தது. “ எனக்கும் சரியா வருதே " என்றது. “ தாத்தாவை விட இது பொல்லாதது " என்றது. ஒருநாள் மாலை. ராவுத்தர் விடை சொல்லிக் கொண்டிருந்த நேரம். கோமதி பாவாடையின்மீது கால்குலேட்டரை வைத்து விடைகளைச் சரிபார்த்துக் கொண்டிருந்தது. தன்னையறியாமல் ஒரு தடவை " சரிதான் தாத்தா " என்றது. " நீயா சொல்றது சரின்னு ? ”
|
என்று கேட்டார் ராவுத்தர். “ கணக்குப் போட்டுத்தான் சொல்றேன் தாத்தா " என்றது கோமதி. “ இப்போ போடறேன் சொல்லு " என்று ராவுத்தர் ஒரு கணக்குப் போட்டார். கோமதி விடை சொல்லிற்று. இன்னொரு கணக்கு. அதற்கும் விடை சொல்லிற்று. வெளிறிப் போய்விட்டது ராவுத்தர் முகம் ! " ஆண்டவனே , இந்த மூட ஜென்மத்துக்கு ஒரு சூச்சுமமும் விளங்கலியே " என்று கதறினார் ராவுத்தர். " நான் போடலே தாத்தா. இந்த மிஷின் போடுது " என்றது கோமதி. கால்குலேட்டரைத் தாத்தாவின் கையில் திணித்தது. கால்குலேட்டரை வாங்கிய தாத்தாவின் கை நடுங்கிற்று. விரல்கள் பதறின. அதை
|
முன்னும் பின்னும் தடவிப் பார்த்தார். “ இதா கணக்குப் போடுது ? " என்று திரும்பத் திரும்பக் கேட்டார். “ ஆமா ” என்றது கோமதி. “ நீயே வச்சுக்கோ ” என்று அதைத் திருப்பிக் கொடுத்தார். அதன்பின் அன்று ராவுத்தரால் பேசமுடியவில்லை. அவருக்கு வாயைக் கெட்டிவிட்டது. உடலசைவுகூட இல்லை. ஸ்தம்பித்துப் போய் சுவரில் சாய்ந்து கொண்டிருந்தார். அன்று நானும் கோமதியும் தான் மாறிமாறி பில் போட்டோம். நீண்ட நேரம் கழித்து தாத்தாவின் தொடையை நோண்டி , “ ஏன் தாத்தா பேசமாட்டேங்குறீங்க ? " என்றது கோமதி. அதற்கும் அவர் பதில் சொல்லவில்லை. 379
|
நடைப்பிணம் போல் ஒவ்வொரு நாளும் ராவுத்தர் கடைக்கு வந்து போய்க்கொண்டிருந்தார். சிரிப்பு , சந்தோஷம் , இடக்கு , கிண்டல் , குத்தல் எல்லாம் அவரைவிட்டு உதிர்ந்து போய் விட்டிருந்தன. குரல் இறங்கிப் போய்விட்டது. உடம்புகூட சற்று இளைத்ததுபோல் இருந்தது. அப்பா அவரை பில் போடச் சொல்லவே இல்லை. ஒருநாள் பிற்பகல் நேரம். கடை கலகலப்பாக இருந்தது. முருகன் வெட்டியிருந்த துணிகளுக்கு நான் கணக்குப் போட்டுச் சொல்லிக் கொண்டிருந்தேன். நடுவில் “ இந்தாப்பா நில்லு " என்று குறுக்கிட்டார்ராவுத்தர். முருகன் சொல்வதை நிறுத்திவிட்டு ராவுத்தர்
|
முகத்தைப் பார்த்தான். “ பாப்ளின் என்ன விலை சொன்னே ? " “ மீட்டர் 15 ரூபா 10 பைசா , " “ தப்பு. பீஸை எடுத்துப்பாரு. 16 ரூபா 10 பைசா. " அப்பா எழுந்திருந்து ராவுத்தர் பக்கம் வந்தார். பீஸைப் பார்த்த முருகன் முகம் தொங்கிவிட்டது. “ நீங்க சொன்னதுதான் சரி " என்றான். " பத்து மீட்டர் கொடுத்திருக்கே. பத்து ரூபாய் போயிருக்குமே. ஐயர் முதல அள்ளித் தெருவுல கொட்டவா வந்திருக்கே ? " என்று அதட்டினார்ராவுத்தர். * உங்களுக்கு விலை தெரியுமா ? " என்று கேட்டார் அப்பா. 380 " ஒரு ஞாபகம்தான் ஐயா ” என்றார். " எல்லாத்துக்கும் ? " என்று
|
கேட்டார் அப்பா. " ஆண்டவன் சித்தம் " என்றார் ராவுத்தர். " ஆக சின்ன டவல் என்ன விலை ? " என்று கேட்டார். * 4 ரூபா 10 பைசா. " " ஆகப் பெரிசு ? " என்று " 36 ரூபா 40 பைசா. " அப்பாகேட்டுக்கொண்டே போனார். பதில் வந்துகொண்டே இருந்தது. ஆச்சரியத்தில் விரிந்து போயிற்று அப்பாவின் முகம். நம்ப முடியவில்லை அவரால். நீண்ட பெருமூச்சு விட்டார். பெருமூச்சுக்களை அடக்க முடியவில்லை. " அப்படீன்னா ஒண்ணு செய்யும். பில் பாத்துக்கும் ” என்றார் அப்பா. சொல்லறச்சே விலை சரியாயிருக்கான்னு " முடிஞ்ச வரையிலும் பார்ப்பேன் ஐயா " என்றார் ராவுத்தர்.
|
இப்படிச் சொல்லிவிட்டுத் தலையைத் தூக்கி " ஐயா , மின்சாரக் கட்டணம் கட்டிட்டேளா ? இன்னிக்குத் தானே கடேசி நாள் " என்றார். 381 " ஐயோ , கட்டலியே ! " என்று சொன்ன அப்பா , “ கோலப்பா ” என்று கூப்பிட்டார். " இன்னிக்கு அவன் வரலியே ஐயா " என்றார் ராவுத்தர். “ உமக்கு எப்படித் தெரியும் ? " என்று கேட்டார் அப்பா. " ஒவ்வொருத்தருக்கும் ஒரு குரல் இருக்கு. ஒரு மணம் இருக்கு. இன்னிக்கு அவன் குரலும் இல்லே , மணமும் இல்லே. " இப்படிச் சொல்லிவிட்டு , “ முருகா ” என்று கூப்பிட்டார் அவர். முருகன் வந்தான். " நேத்து இவன் ஒரு வாடிக்கைக்கு
|
ரெட்டை வேட்டி இல்லைன்னு சொன்னான். கண்டியுங்க ஐயா " என்றார் ராவுத்தர். “ என்ன சொல்றீர்னு புரியலையே " என்றார் அப்பா. " ஐயா , பத்து வேஷ்டிக்கு விலை போட்டு வச்சீங்க. ஏளு வேட்டிதானே வித்திருக்கு. மீதி மூணு ருக்கணுமில்லே ? " என்றார். அப்பாவேஷ்டியை எடுத்துக்கொண்டு வரச் சொன்னார். மூன்று சரியாக இருந்தது. ராவுத்தர் தன் குரலைச் சற்றுக் கோணலாக மாற்றிக் கொண்டு , " முருகப் பெருமானே , இருக்கறத இல்லைன்னு சொல்லி ஆளை நைசா அனுப்பி வைக்கிறீரே... வியாபாரத்துக்கு உக்காந்து இருக்கோமா , இல்ல தர்மத்துக்கு உக்காந்து இருக்கோமா ? ”
|
என்று கேட்டார். 382 அன்று மாலை பில்போடும் பகுதியிலிருந்து அப்பாவின் பக்கம் போய் உட்கார்ந்துகொண்டார் ராவுத்தர். * உங்க பக்கத்துலே இருந்தா இன்னும் கொஞ்சம் உபயோகமா இருப்பேன் ஐயா " என்றார். அதன்பின் “ உங்க மின்விசிறியே சித்த கூட்டி வைச்சா அடியேனுக்கும் கொஞ்சம் காத்து வரும் " என்றார் , அப்பா மின்விசிறியைக் கூட்டிவைக்கச் சொன்னார். " வருமானவரி முன்பணம் கட்ட நாள் நெருங்குதே ஐயா. ஆடிட்டரெ பாக்க வேண்டாமா ? " என்று கேட்டார் ராவுத்தர். “ பாக்கணும் ” என்றார் அப்பா. கடை சாத்தும் நேரம். " ஐயா , அம்மாவுக்கு மருந்து
|
வாங்கணும்னு சொன்னீங்களே... வாங்கிட்டீங்களா ? " என்று கேட்டார். " வாங்கறேன் ” என்றார். சாத்திய கடையின் பூட்டுக்களை இழுத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் அப்பா. “ ஐயா , தாயாருக்கு திதி வருதுன்னு சொல்லிட்டிருந்தீங்களே. முருகன் கிட்ட சொன்னா போற பாதையிலே புரோகிதர்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிடுவானில்லே " என்றார். " சொல்றேன் " என்றார் அப்பா. 383 கடைச் சிப்பந்திகள் ஒவ்வொருவராகக் கலைந்து போய்க் கொண்டிருந்தார்கள். கோமதி , தாத்தாவின் கையைத் தூக்கித் தோளில் வைத்துக்கொண்டு நகரத் தொடங்கிற்று. “ தாத்தா , இனிமே கணக்குப் போட வரவே
|
மாட்டீர்களா ? ” என்று கேட்டது அது. " இப்போ இப்ராஹிம் ஹசன் ராவுத்தர் கணக்கு மிஷின் இல்லே. மானேஜர். ஆண்டவன் சித்தம் ” என்றார்ராவுத்தர். 384 புயல் - கோபி கிருஷ்ணன் அதிகாலையிலிருந்தே பலத்த மழை. சென்னை அருகே புயலாம். தொழிற்சாலை நேரம் முடிந்து , தள்ளிப்போட முடியாத ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி சக ஊழியர் குதரத் உல்லா பாட்சாவுடன் பேச , அவரது இல்லத்திற்குச் சென்று , பேசி முடித்துவிட்டு , சுமார் ஒன்பது மணியளவில் தன் வீட்டை நோக்கிப் புறப்பட்டான் ஏக்நாத். நைந்துபோன , பித்தான்கள் என்றைக்கோ தெறித்து , அவை இல்லாத
|
நிலையில் , ஸேஃப்டி பின்களைப் போட்டு ஒருவாறாக மழைக்கோட்டை அணிந்து கொண்டு , தொப்பி தொலைந்துபோய் வெகு மாதங்கள் ஆகியிருந்தும் , அதை வாங்காதிருந்த அசிரத்தையின் தண்டனையான தலைநனைதலை அனுபவித்துக் கொண்டே வீட்டை நோக்கி நடந்துகொண்டிருந்தான். தொழிற்சாலையில் ஒரு குப்பைக் கூடை அருகே கிடந்த சிறு துண்டு மழைத்தாள் ஒன்றை எடுத்து பத்திரப்படுத்தி வைத்திருந்தான். வழியில் ஒரு கடையில் புதிதாக சந்தையில் அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தநௌசிகரெட் ஒரு பாக்கெட்டையும் ஒரு வத்திப்பெட்டியையும் வாங்கி மழைத்தாளில் சுற்றி வைத்துக்கொண்டான்.
|
இரண்டு மெழுது வர்த்திகளையும் வாங்கிச் சட்டைப் பையில் போட்டுக் கொண்டான். நல்ல நாட்களிலேயே அடிக்கடி தடைப்படும் மின்சாரம் மழையில் சீராக இயங்கும் என்று சொல்வதற்கில்லை. குழந்தைக்கு இரு தினங்களாக வெதுவெதுப்பான ஜூரம். மருந்துக்கடை ஒன்றில் மாத்திரை இரண்டை வாங்கினான். ஜூரத்தால் அவதிப்படும் குழந்தையை ஏதோ ஒரு வகையில் சந்தோஷப்படுத்தி உற்சாகத்துடன் இருக்கச் செய்ய வேண்டும் என்று தோன்றவே , ஒரு கடையில் காட்பரீஸ் மில்க் சாக்கலெட் ஒன்றை வாங்கினான். சிகரெட் ஒன்றைப் பெட்டியிலிருந்து கவனத்துடன் உருவி மழைச் சொட்டுக்களிலிருந்து
|
அதை அரைகுறையாக ஒருவாறு காத்து கைகளைக் குவித்துப் பற்ற வைத்துவிட்டு நடந்து கொண்டிருந்தான். வீட்டை அடைய இன்னும் ஒரு டொக்குச் சந்தையும் , ஒரு நீண்ட சந்தையும் , இரண்டு சிறு சந்துகளையும் கடக்க வேண்டும். வழியில் ஒரு மளிகைக் கடை. வீட்டில் காப்பிப் பொடி. சர்க்கரை காலையில் கொஞ்சம்தான் மீதம் இருந்தது. ப்ரூ ரீஃபில்பேக் காப்பிப் பொட்டலம் ஒன்றையும் 250 கிராம் சர்க்கரையையும் கொடுக்குமாறு கடைப் பையனிடம் சொல்லிவிட்டு சிகரெட்டை உறிஞ்சி புகையை வெளித்தள்ளிக் கொண்டிருந்தான். அருகில் ஒரு நடுவயது மாமி. அவள் முகம் கோணினாள். " ஸாரி
|
மாமி " மன்னிப்புக் கோரி , கால்வாசிதான் புகைத்திருந்த சிகரெட்டைக் கீழே போட்டு நசுக்கினான். 385 வீட்டின் மிக அருகாமையில் வந்ததும் நேற்று நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. அவன் வீட்டுக்கு நான்கு வீடு தள்ளி ஒரு வீட்டின் முன் கிட்டத்தட்டத் தெருவின் முழு அகலத்தையும் அடைத்தபடி ஒரு பெரிய கோலத்தை ஒரு பெண்மணி போட்டுக் கொண்டிருந்தாள் லயித்து. ஏகநாத் கவனமாகக் கோலக்கோடுகள் , புள்ளிகள் முதலியவைகளைத் தவிர்த்து , ஏடாகூடமாகக் கால் வைத்ததில் கீழே சாயப்போய் , ஒருவாறு சுதாரித்துக்கொண்டு , கோலத்தின் மேல் கால் பாவாமல்
|
சிரத்தையுடன் தாண்டி நடந்து கடந்தான். மணி தோராயமாக 9.30 , " காலைலே வீட்டெ விட்டுக் கௌம்பினா வீட்டு ஞாபகமே இருக்கறதில்லை ஒங்களுக்குக் கொஞ்சங்கூட. நான் ஒருத்தி இருக்கேங்கற நெனெப்பே ஒங்களூக்குச் சுத்தமா மறந்தாச்சுன்னுதான் தோண்றது. நீங்க சீக்கிரம் வரணும்னு நான் வேண்டாத தெய்வங்க இல்லெ " ஸோனா பொரிந்து தள்ளினாள். “ ஆனா , இண்ணெக்கி என்ன விசேஷம் ? நான் சீக்கிரம் வரணும்னு சாமிங்களை வேண்டிக்கற அளவுக்கு எனக்கு என்ன திடீர் முக்கியத்துவம் ? ” இது ஏக்நாத். “ ஒண்ணுமில்லெ , சொல்றேன். " " என்ன வீட்டுக்காரம்மா ஏதாவது கத்தினாளா
|
? " " இல்லெ. " " மளிகைக்காரன் பாக்கிக்காக வந்து கேட்டுக் கத்தினானா ? " " இல்லெ. " " வேறென்ன சொல்லேன். ஸோனாவின் முகத்தில் கலவரமும் பரபரப்பும் அவசரமும் குடிகொண்டிருந்ததை ஏகநாத்தால் கண்டுகொள்ள முடிந்தது. கணவனைச் சந்தோஷத்திலாழ்த்தும் செய்தி போன்ற எதுவுமில்லை என்று அவனால் ஊகிக்க முடிந்தது. சராசரிகளுக்குச் சந்தோஷம் என்பதே ஒரு அரிதான விஷயம். அது அவனுக்கு ஒரு அனுபவபூர்வமான நிஜம். " நீங்க மொதல்லெ கைகால் அலம்பிண்டு வாங்க. வெளியே போக வேணாம். இந்த மழைச் சனியன் வேறெ நின்னு தொலைய மாட்டேங்கறது. " ஸோனா சொன்னபடி
|
சமையற்கட்டின் முன்பகுதியில் முகம் , கைகால் அலம்பிக்கொண்டு , தலையைத் துவட்டிக்கொண்டு ஏகநாத் நாற்காலியில் அமர்ந்து கொண்டான். ஸோனா ஏகநாத்தின் மனைவி. பெயரைப் போலவே தங்கமானவள். மணமான புதிதில் ஏகநாத் அவள் பெயரை மனதில் அசைபோட்டுப் பார்த்திருந்தான். ஸோனா - தங்கம். இன்னொரு அர்த்தம் உறங்குதல். நம் மனநிலைகளின் அதீதங்களினாலோ பிறத்தியான் பிசகாக நடந்து கொள்வதினாலோ அவன்மீது ஏற்படும் கசப்புணர்வு அறவே மறந்து அடுத்த நாள் அவன் தோள்மீது கைபோட்டு அன்னியோன்னியமாயிருக்க உதவும். தீவிர வெறுப்புகள் தொடராமல் தடைபோடக் கைகொடுக்கும் ஒரு
|
அற்புதமான இயற்கை ஔஷதம். ஸோனாதான் எவ்வளவு ரம்மியமான ஆரோக்கியமான பெயர் ! குழந்தைக்கு ஸிந்தியா என்று பெயரிட்டிருந்தான். ஜனித்தவுடன் முதலில் தன் சிசுவைப் பார்த்ததும் உடனே அவன் நினைவில் நிழலாடியது நீல ஆகாயத்தின் மையத்தில் ஒரு முழு நிலா. சந்திர தேவதையின் பெயரையே அவளுக்கு சூட்டிவிட்டான். 386 ஸிந்தியா : " டாடீ , எனக்கு இன்னா கொண்டாந்தே ? " " ஒனக்காடா கண்ணா , ஒரு மத்திரெ , ஒனக்கு ஜொரமில்லெ ? அப்பறம் ஒரு சாக்கலெட் " " இன்னா டாடீ எனக்கு ஸ்வீட்டு , இன்னெக்கி எனக்கு பெர்த் டேவா ? " அவளுக்கு எப்பொழுதாவது அரிதாக இனிப்பு
|
கொண்டு கொடுக்கும் சமயமெல்லாம் அவள் கேட்கும் கேள்வி. சாக்கலெட்டை இரண்டு விள்ளல் கடித்துவிட்டு ஸிந்தியா வாந்தி எடுத்துவிட்டாள். " இப்பொ ஸ்வீட் ஒண்ணு இல்லேன்னு இங்கெ யார் அழுதா ? ” ஸோனா வெடித்தாள். “ என்ன நடந்திச்சு , சொல்லு. காப்பி போடு. சாப்பிட்டிட்டே கேக்கறேன். " " ஒங்களுக்குக் காப்பிதான் முக்கியம். என்னோட அவஸ்தெயெப் பத்தி ஒங்களுக்கென்ன அக்கறை ? ” வாந்தியை வாருகாலால் தண்ணீர்விட்டுக் கழுவிக்கொண்டே ஸோனா எரிந்து விழுந்தாள். “ சரி , காப்பிகூட அப்புறம் போட்டுக்கலாம். விஷயத்தெச் சொல்லு. தேவதூதன் ஒண்ட்டே வழியிலே
|
சந்திச்சுப் பேசி ஆசியெல்லாம் வழங்கிட்டுப் போனான்ற அற்புத நிகழ்ச்சியெலாம் நீ சொல்லப் போறதில்லெ.அல்ப விஷயம் ஏதாவது சொல்லப் போறே. அதுக்கு ஏன் இவ்வளவு எரிச்சல் ? சொல்லேன். " " என்னெ எதுக்கு வேலைலெ சேத்து விட்டீங்க ? " " புதுஸ்ஸா இதிலெ சொல்றதுக்கு என்னா இருக்கு ? சமூகத்தெப் பத்தி நீ தெரிஞ்சுக்கணும். நாலு பேரோட நீ பழகணும். அப்பொதான் உலகம்ன்னா என்னான்னு ஒனக்குப் புரியும். ஒன்னோட வாழ்க்கை புருஷன் , கொளந்தெ , அடுப்படி , வீட்டுச்சுவர் இதுக்குள்ளேயே முடிஞ்சுவிடக் கூடாதுன்னுதான். இப்பொ ஏன் அதெத் திரும்பக் கேக்கறே ? ” “
|
என்ன நடந்ததுன்னு தெரிஞ்சா நீங்க இந்த மாதிரிப் பேச மாட்டீங்க. " “ நானென்ன யேசுநாதரா , பார்க்காமலேயே எல்லாத்தெயும் தெரிஞ்சுக்க ? சொன்னாத்தானே தெரியும் ? " “ இன்னெக்கி நர்ஸிங் ஹோம்லெ அந்த தியேட்டர் டெக்னீஷிய ராஸ்கல் கோவிந்தன் டியூட்டி ரூம்லெ நர்ஸுப் பொண்ணுகள்ட்டெ அம்மணமா போஸ் கொடுத்துண்டு நிக்கிற வெள்ளெக்காரச்சி ஒருத்தி ஃபோட்டோவைக் காட்னான். அந்த நாலும் சிரிச்சி கொளெஞ்சி நெளியறதுக. வெக்கங்கெட்ட ஜன்மங்க. " " இதுக்கு ஏன் இவ்வளவு கத்தல் ? கோவிந்தன் ஒண்ட்டெ ஒண்ணும் காட்டலியே ? " 387 அந்தக் கண்றாவி வேறெ
|
நடக்கணும்ன்னு ஒங்களுக்கு ஆசையோ ? " “ நீ இண்ணெக்கி நல்ல மூட்லெ இல்லே. கொஞ்சம் தண்ணி சாப்பிட்டு அமைதியா இரு. “ அந்த டாக்டர் கெழம் - பேரம் பேத்தி எடுத்தாச்சு. ஹார்மோன் இன்ஜெக்ஷன் போட்டுண்டு ஹெட் ஸ்டாஃப் - அதுக்கு ஊர்லெ ரெண்டு பசங்க படிச்சிண்டிருக்கு அதோட ராத்திரியிலே குடும்பம் நடத்தறானாம். ” என்ன பதில் சொல்வதென்று புரியாத நிலையில் ஏகநாத் சிகரெட் ஒன்றைப் பற்றவைத்துக் கொண்டான். " ஒங்களுக்கென்ன , ஸ்மோக் பண்ணினா எல்லாம் தீந்து போச்சு. நான் இங்கெ கெடந்து குமுறிண்டிருக்கேன். நர்ஸிங் ஹோம்லேருந்து Creche- க்கு வந்து
|
ஸிந்தியாவெ அழச்சிண்டு மழைலெ நனைஞ்சு வீட்டுக்கு வந்திண்டிருந்தேன். கொட்ற மழைலெ கொடெ இருந்தும் ஒண்ணுதான் இல்லாட்டியும் ஒண்ணுதான். ரோட்லெ ஆள் நடமாட்டம் இல்லெ. ஒரு ஆள் பாண்ட்ஸ் , ஷர்ட் போட்டுண்டு கையிலே ஒரு சிகரெட்டோட காரிலே உட்கார்ந்துண்டு ஜன்னக் கதவையெல்லாம் ஏத்தி மூடி வச்சிண்டு சுட்டு வெரலெ வளைச்சி , “ மேடம் , ஒரு நிமிஷம் இங்கெ வர்றீங்களா ? ” ன்னு கூப்பிட்டது. யாரெக் கூப்பிட்றான்னு திரும்பிப் பார்த்தா , “ மேடம் , ஒங்களெத்தான். ஒரு நிமிஷம் கிட்டெதான் வாங்களேன் ” ன்னது.சில நேரங்களில் சில மனிதர்கள் சினிமாவில்
|
ஸ்ரீகாந்த் லக்ஷ்மியை காரிலெ லிஃப்ட் கொடுத்து அனுபவிச்சுட்டு எறக்கி விட்டுப் போனது ஞாபகம் வந்தது. பயந்து நடுங்கிண்டு விறுவிறுன்னு நடந்து வீட்டுக்கு வந்தேன். ” ஸோனா தொடர்ந்தாள். “ வந்து அரை மணி நேரமாகல்லெ. ஒரு வாரத்துக்கு முன்னாலெ காலி செஞ்சுண்டு போனாங்களே , அந்த பார்வதி வீட்டுக்காரன் வந்தான்.எப்படீம்மா இருக்கே ? கொளந்தெ சௌக்கியமா ?ன்னு கேட்டுண்டே உள்ளாரெ வந்து சேர்லெ ஒக்காந்துக் கிட்டான்.இங்கே இருக்கறப்போ அந்த மனுஷண்ட்டெ பேசினதுகூட கிடையாது. காபி சாப்பிட்றீங்களான்னு கேட்டேன். சரின்னது. போட்டு டேபிள்ல்லெ
|
வச்சேன்.வேணாம். சும்மா தமாஷுக்குத்தான் கேட்டேன் அப்படின்னான். என்ட்டெ என்ன தமாஷ்ன்னு நெனெச்சிண்டிருக்கறப்போவாங்களேன் , இளமை சுகம் சினிமாவுக்கு ரெண்டு டிக்கட் வச்சிருக்கேன். சேர்ந்து போகலாம்'ன்னது. எனக்கு ஒதறல் எடுத்துப் போச்சு. ஸிந்தியவெத் தூக்கிண்டு , அந்தப் பக்கத்து போர்ஷன் பொண்ணு குமுதினி இல்லெ , அதான் நைன்த் படிக்கறதே , அதைக் கூப்பிட்டேன். நல்லகாலம் வந்தது. கொஞ்ச நேரம் அந்த ஆள் அப்படியே ஒக்காந்திண்டிருந்தான்.நான் அப்பொ போயிட்டு இன்னொரு நாளெக்கி வர்றேன். நான் இப்பொ ஏன் போறேன் தெரியுமா ? நான் இப்பொ ஒங்களோட
|
தனியா இருக்கேன். 388 ஒங்க வீட்டுக்காரரு இப்போ வந்தா நம்மளை என்னன்னு நெனைச்சிக்கிருவாரு ? ” ன்னு சொல்லிட்டே எழுந்தது. குமுதினிப் பொண்ணு கன்னத்தெத் தட்டிக் கொடுத்துட்டே ஏறக்கட்னது. அந்தப் பொண்ணு சொல்றது , அந்த மனுஷன் நல்லவனாம். குடிச்சுட்டு வந்ததுனாலெ இப்படி நடந்துக்கிட்டதாம். " ஸோனா இன்னும் முடிக்கவில்லை. " இந்த இழவெல்லாம் முடிஞ்சாவிட்டு கொடெயெ எடுத்துண்டு ஸிந்தியாவெத் தூக்கி இடுப்பிலெ வச்சிண்டு அரைக்கக் கொடுத்த மாவெ வாங்கிவரப் போனேன். ஒரு வீட்டுத் திண்ணைலெ ரெண்டு கேடிப் பசங்க.குட்டி
|
ஷோக்காயிருக்கில்லெஅப்படீன்னு கமெண்டு அடிக்குதுங்க. " ஸோனா கொட்டித் தீர்த்தாள். விசும்பிக்கொண்டே ஸிந்தியாவுக்குச் சோறு ஊட்டிப் படுக்க வைத்தாள். ஸோனாவுக்கு காரணமாகச் சாப்பிடத் தோன்றவில்லை. ஏகநாத்துக்குத் துக்கம் மனம் பூராவும் வியாபித்திருந்த நிலையில் சாப்பாட்டுச் சிந்தனைக்கே இடம் இல்லாமல் போயிற்று. படுக்கையில் கிடந்தார்கள். ஸோனா ஏகநாத்திடமிருந்து ஏதோ ஒரு பதிலை எதிர்பார்த்தாள். " சமூகம் இண்ணெக்கி ஒன்கிட்டெ அதனோட விஸ்வரூபத்தைக் காட்டியிருக்கு , அவ்வளவுதான். தூங்கு. எல்லாம் சரியாப் போகும் " என்றான். அமைதியின்மை "
|
உலகத்தெத் தெரிஞ்சுக்கணும்னீங்க. புரிஞ்சுகிட்டவரைக்கும் சகிக்கல. " அவள் கண்களில் கசிந்த நீரைத் துடைக்கக்கூடத் திராணியில்லாமல் கிடந்தான் ஏகநாத். ஏகநாத் பாவமே செய்யாத புண்ணிய ஆத்மா அல்ல. இருப்பினும் , அசிங்கமாகவோ , அநாகரிகமாகவோ , கொச்சையாகவோ , பச்சையாகவோ , விரசமாகவோ நடந்துகொண்டதாக அவனுக்கு நினைவில்லை. அப்பா பண்ணின பாவம் பிள்ளையின் தலைமேல் விடியும் என்று சொல்லக் கேட்டிருக்கிறான். கணவன் செய்த பாவம் மனைவி தலைமேல் விடியும் என்று எந்தப் பெரியவரும் சொன்னதாகக் கேள்வி இல்லை. மேலும் சமீபத்தில் , ஒரு மாமி மனம் கோணாமலும்
|
, ஒரு பெண்மணி உளம் நோகாமலும் அவன் அனுசரணையுடன் நடந்து கொண்டிருந்திருக்கிறான். இதற்குச் சன்மானம் கிடைக்கா விட்டாலும் , கேடாவது விளையாவது இருந்திருக்கலாம். கடைசியில் ஒன்றும் செய்யத் தோன்றாமல் , “ சாக்கடையில் உழலும் பன்றிகள் " என்று சற்று உரக்கவே கத்தினான். ஏகநாத்தால் இயன்றது அவ்வளவே. 389 இருளப்ப சாமியும் 21 கிடாயும் - வேல. ராமமூர்த்தி இருளாண்டித் தேவரை உப்பங்காற்றுசிலு சிலுஎன உறக்காட்டியது. முளைக் கொட்டுத் திண்ணைக்கு என்று ஒரு உறக்கம் வரும். நெஞ்சளவு உயரமான திண்ணை. நடுவில் நாலு அடுக்கு சதுரக் கும்பம். தப்பித்
|
தவறி கால் பட்டுவிட்டால் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டும். நாலு கல்தூணில் நிற்கும் ஒட்டுக் கொட்டகை. கிழக்குப் பாதையோரம் தரையோடு முளைத்த பத்ரகாளி , இளவட்டஙக்ள் பத்ரகாளிக்குப் பயந்து இரவு நேரங்களில் தப்பிலித்தனம் பண்ணுவதில்லை. இந்த விஷ த்தில் பெரியாளுகள் ரொம்பக் கண்டிஷன். எளவட்ட முறுக்கிலே எவளோடயாவது போறவன்... கம்மாக்கரை , கிணத்தடி , படப்படிப் பக்கம் போயிறுங்க. தப்பி நடந்தா... காளி கண்ணைக் கெடுத்திடும்என்பார்கள். மற்றபடி பகம் பூராவும் வெட்டுச் சீட்டு , ரம்மி , தாயக்கட்டம் , ஆடுபுலி ஆட்டம் நடக்கும்.
|
தென்புறம் இருளாண்டித் தேவர் படுத்திருந்தார். அவர் தலைமாட்டில் கந்தையாத் தேவர். வட ஓரம் ஏழு பேர் ரம்மி , ஏழு பேரில் இருளாண்டித் தேவர் மகன் , மகள் புருஷன் , கந்தையாத் தேவர் மகன் , தம்பி மகன் ஆடிக் கொண்டிருந்தார்கள். மேலப்புறம் வெட்டுச் சீட்டு , கிழக்கே பத்ரகாளி பார்வையில் தாயக் கட்டம். இருளாண்டித் தேவரின் கால்மாட்டில் ஆடுபுலி ஆட்டம். எல்லோரும் ஒண்ணுக்குள்ளே ஒண்ணு சொந்தம் , தகப்பன் , மகன் , மாமன் , மச்சினன் , சீட்டுப் பிடிக்க கை பழகாத சின்னப் பயலுகளுக்கு நிறைகுளத்தம்மன் கோயில் ஆலமரத்தில் காக்கா குஞ்சு
|
விளையாட்டு. ஊர்க் கிணறுகள் அத்தனையும் குட்டப்புழுதி ஆகிவிடும். குதியாட்டம்தான். ருளாண்டித் தேவரின் இடதுகை மடங்கி தலைமாட்டில் பாந்தப்பட்டிருந்தது. இரண்டு தொடை இடுக்கிலும் வலது கையைக் கொடுத்திருந்தார். தொடை இடுக்கில் கிடந்த தழும்புகள் மேடு தட்டிக் கிடந்தன. கவுல்பட்டியில் ஆடு திருடப்போய் பிடிபட்டு பெருநாழி போலீஸார் கம்பியைக் காய வைத்து இழுத்தத் தழும்பு. பெருநாழிக்கு மேற்கே நாலாவது மைலில் கவுல்பட்டி. தெலுங்கு பேசுகிற ரெட்டிமார் ஊரு. வண்ணான் குடிமகனைத் தவிர்த்து எல்லோரும் ரெட்டிமார்கள் தான். சம்சாரிகளுக்கான
|
எல்லாக் கோப்புகளும் உள்ள ஊர். வீட்டு வீட்டுக்கு உழவு மாடு. கிடை கிடையாக ஆடு , ஊரைச் சுற்றி பெரும்பெரும் படப்புகள். வாய் அகன்ற மண்பானை போல் ஊரணி. மாட்டுக்கும் மனுசருக்கும் 390 அதுதான் குடிதண்ணீர். யாரும் கால் , முகம் கழுவக் கூடாது. கட்டு செட்டான ஊர். களவுக்கு இடங்கொடுக்காத ஊர். பத்து பேர் எதிர்த்து வந்தாலும் அடித்து விரட்டுகிற வீரன் இருளாண்டித்தேவர். அன்றைக்குக் கவுல்பட்டி களவுக்குப் போனவர்களில் யாரும் குறைந்த ஆளில்லை. முருகேசத் தேவர் , ஒத்தையிலே நின்னு ஊரையே அடிக்கிற தாட்டியன். அதே மாதிரி கந்தையாத் தேவர் ,
|
நாகுத்தேவர் , கருப்பையாத் தேவர் , முத்துத்தேவர் , சுந்தரத்தேவர் , குருசாமித் தேவர் எல்லாரும் வீரவான்கள். இத்தனை பேரும் கம்பு கட்டி நின்றால் எந்தப்படையும் பின்வாங்கும். அன்றைக்குச் சாமத்துக்கு மேலே எல்லாரும் கிளம்பி வைரவன் கோயில் பொட்டல் ஆலமரத்தடிக்கு வந்து சேர்ந்தார்கள். பின் நிலாக் காலம். ராத்திரி ஒரு மணிக்கு மேலே தான் நிலா கிளம்பும். ஆலமரம். பாறையில் வேர்ப்பிடித்து உச்சியில் நின்றது. ஆலமரத்துப் பட்சி உத்தரவு கொடுத்தால்தான் களவுக்குக் கிளம்புவது வழக்கம். ஆந்தை வலமிருந்து இடம் பாய்ந்தால் நல்ல சகுனம். போகிற
|
இடத்தில் ஆபத்தில்லை. இடமிருந்து வலம் ஆகாது. வீட்டுக்குத் திரும்பிவிட வேண்டும். எல்லோர் கையிலும் வேல் கம்பு. கனத்த செருப்பு , கருப்புப் போர்வை , குத்துக்காலிட்டு காத்திருந்தார்கள். வெகுநேரம் கழித்துகீச்ச்....என்ற சத்தத்தோடு ஆந்தை வலமிருந்து இடம் பாய்ந்தது. இருளாண்டித் தேவர் எழுந்தார். “ வைரவன் உத்தரவு கொடுத்துட்டாரு ஒரு குறையும் வராது. எல்லாரும் கௌம்புங்க ". கிளம்பினார்கள் , பத்துப் பேருக்கு மேல் இருக்கும். நிலா கிளம்பி விட்டது. நாலு மைலும் வண்டிப்பாதை. ரெண்டு பக்கமும் முள்ளுக்காடு. இருளாண்டித்தேவர் முன்னால்
|
போனார். பேச்சும் சிரிப்புமாக நடந்தார்கள். வனாந்தரம். இருட்டு. ய வது கொஞ்சம் பலத்து பேசினாலோ , சிரித்தாலோ இருளாண்டித்தேவருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. 391 இடையிலே ரெண்டுமூணு ஓடைக்காடு. முழங்காலுக்கு வண்டல் இறக்கியது. செருப்புகளைக் கையில் எடுத்துக் கொண்டு ஓடைகளைக் கடந்தார்கள். மணிப்பத்தா ஓடையைத் தாண்டி பத்து எட்டு நடந்திருப்பார்கள். வண்டிப்பாதையின் இந்தத் தடத்துக்கும் அந்தத் தடத்துக்கும் சரியாக ஒரு பாம்பு புழுதியைக் குடித்துக்கொண்டு படுத்திருந்தது. தொடைக்கனம். முன்னே போன இருளாண்டித்தேவர் ரெண்டு எட்டு
|
இடைவெளியில் பாம்பைப் பார்த்துவிட்டு நின்றார். நாகம் தலை தூக்கிச் சீறுமுன் , வேல்கம்பால் தலையில் ஒரு குத்துக் குத்தி முள்வேலிக்குள் தூக்கி எறிந்துவிட்டு நடந்தார். கவுல்பட்டி ஊரணிக்கரையைச் சுற்றி பெரும் பெரும் புளிய மரங்க்ள் பேயாய் நின்றன. நிலா வெளிச்சத்தில் ஊரணி புளியமரங்கள் தட்டுப்பட்ட உடனே இருளாண்டித்தேவர் உதட்டில் விரல் வைத்துஉஸ்... உஸ்...என்று எச்சரித்தார். செருப்புச் சத்தம் கேட்காதபடி பொத்தி பொத்தி நடந்து முன்னேறினார்கள். ஊர்க்கிட்டே அண்ட முடியாது. வீட்டு வீட்டுக்கு நாய் கெடக்கும். ராஜபாளையத்துக்கோம்பை
|
நாய்கள். துரத்திப் பிடித்தால் தொடைக் கறியை தோண்டி எடுத்துவிடும். குளிருக்குக் குன்னிப் படுத்திருக்கும் அனாதைக் கிழவி மாதிரி ஊர் உறங்கிக் கொண்டிருந்தது. ஊரை தெற்கே விட்டு , ஊரணிக்கு வடக்காக நடந்தார்கள். ஆட்டுக்கிடை ஊருக்கு வெளியே மந்தைக் காடுகளில்தான் கெடக்கும். " யோவ்.... குருசாமித் தேவரே.... எட்டி நடங்க... " ஊரணிக்கு வடக்கே நாலு புஞ்சை கடப்புக்கு ஆட்டுச் சத்தம் கேட்டது. இருளாண்டித்தேவர் வலது கையை லாத்தி காட்டினார். எல்லோரும் வடக்காக எட்டி நடந்தார்கள். சுந்தரத்தேவருக்கு இருமல் முட்டியது. நெஞ்சுக்குள்
|
அமுக்கினார். “ கந்தையாத்தேவரே.... செருப்பு சத்தம்.... " கந்தையாத் தேவர் பொதுமலாய் நடந்தார்... 392 எல்லா ஆடுகளும் படுத்துக்கிடந்தன. ஒரு ஆடு புர்ர்ர்ர்.... ர்.... ர்... எனத் தும்மியது. தென்கோடியில் ஒரு கயிற்றுக்கட்டில். உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை தெரியாமல் போர்த்திக்கொண்டு கிடைக்காரன் படுத்திருந்தான். கட்டிலில் ஒரு வேல்கம்பு சாத்தி இருந்தது. கட்டிலுக்கடியில் நாய். சுருட்டிப்படுத்திருந்தது. நேய் படுத்திருக்கு. " அடுத்த புஞ்சைப் பொழியில் எல்லாஅரும் பதுங்கி உட்கார்ந்தார்கள். வேல் கம்புகளைக் கிடத்தி விட்டு
|
போர்வைகளை இறுக்கிப் போர்த்தினார்கள். வேட்டியைத் தார்ப்பாய்ச்சிக் கட்டிக்கொண்டார்கள். " தெற்கயும் மேற்கயும் யாரும் போகாதீங்க. வடக்க பாதிப்பேரும் கிழக்கப் பாதிப்பேரும் போகணும். சுருக்கா முடியணும். " வேல்கம்பை கையில் எடுத்துக் கொண்டார்கள். இருளாண்டித் தேவரோடு சேர்ந்து பாதிப்பேர் கிழக்கேயும் , முருகேசத் தேவரோடு பாதிப்பேர் வடக்கேயும் பிரிந்தார்கள். பச்சைப் பனை ஓலையைக் கிழித்ததுபோல் குட்டி ஆடுகள் சிணுங்கின. சின்னச் சின்ன சத்தங்களோடு ஆடுகள் கிடந்தன. கிடைக்காரனும் , நாயும் அசையவில்லை. நல்ல தூக்கம். நிலா
|
வெளிச்சத்தில் ஆடுகளின் நிறம் தெரியும் அளவுக்கு நெருங்கி விட்டார்கள். சுந்தரத்தேவர் மறுபடியும் இருமலை நெஞ்சுக்குள் அமுக்கினார். புர்ர்....... ர்என்று ஒரு ஆடு தும்மியது. பத்தடி நெருக்கத்திலேயே நின்று அவரவருக்குத் தகுதியான ஆடுகளை இனம் குறித்தார்கள். கிடாயாக இருந்தால் கறி நல்லா இருக்கும். பெருத்த கிடாயாக இருந்தால் தோளில் போட்டுக் கொண்டு நாலு மைல் தூரம் ஓட வேண்டும். இருளாண்டித் தேவரின் சைகைக்காக காத்திருந்தார்கள். கட்டிலில் படுத்திருந்த கிடைக்காரன் புரண்டு படுத்தான். நாய் அசையவில்லை. கிழக்கே இருந்து இருளாண்டித்
|
தேவர் துண்டை வீசினார். அவரவர் குறித்து வைத்திருந்த கிடாய்களை நெருங்கி இடது கையால் வாயை இறுக்கிப் பிடித்தார்கள். வலது கையால் குரல்வளையைகடக்என நெறித்து ஒதுக்கி விட்டார்கள். கிடாய்கள் 393 கால்களை உதறிய சத்தந்தான் லேசாய் கேட்டது. கத்த முடியவில்லை. கைக்கு இரண்டு கால்களைப் பிடித்துத் தூக்கி , துண்டைப் போர்த்துவதைப் போல் தோளில் போட்டார்கள். கிடைக்காரனுக்கும் , நாய்க்கும் நல்ல தூக்கம். இடது கையால் ஆட்டுக் கால்களையும் வலது கையில் வேல் கம்பையும் பிடித்துக் கொண்டுலொங்கு... லொங்குஎன ஓடக் கிளம்பினார்கள். மூன்றாவது
|
புஞ்சைப் பொழியைக் கடந்தால்தான் வண்டிப்பாதை. முருகேசத் தேவர் முன்னால் ஓடிக் கொண்டிருந்தார். தோளில் கிடந்த ஆட்டின் சூடு , இந்தக் குளிர்ந்த நேரத்தில் எல்லோருக்கும் இதமாக இருந்தது. வண்டிப்பாதைக்கு வந்து விட்டார்கள். யாரும் வாய் திறக்கவில்லை. ஓட்டம் குறைந்துஓட்டமும் நடையுமாகப் போனார்கள். முத்துத்தேவரின் கழுத்தில் கிடந்த கிடாயின் குரல்வளை சரியாக நெறிபடவில்லை.ம்மே... ம்மேய்... ம்மேம்... என்று கத்தக் கிளம்பி விட்டது. முத்துத்தேவரின் பிடி தவறியது. கிடாய் துள்ளவும் பிடியை விட்டு விட்டார். கீழே குதித்த கிடாய் , “ ம்
|
மே... மே... மேம்... ய்.. என்று கத்தித் தீர்த்து விட்டது. முத்துத்தேவர் சுதாரித்து , கிடாயின் குரல்வளையை கடித்துத் துப்பினார். கிடாய் சத்தம் நின்றது. லொள்... லொள்... லொள்... * இராஜபாளையத்தைக் கோம்பை கிளம்பி விட்டது. கிடை ஆடுகள் எல்லாம் கத்த ஆரம்பித்தன. கிடைகாரன் போர்வையைச் சுருட்டி வீசிவிட்டு வேல் கம்பை கையில் எடுத்துக் கொண்டு ஊரைப் பார்த்துக் கத்தினான். “ ஏய்..... கள்ளன்... கள்ளன்.... ஓடியாங்க... " இருளாண்டித் தேவரோடு சேர்ந்து எல்லோரும் வண்டிப்பாதையில் கெதியாய் ஓடினார்கள். முத்துத்தேவர் கடைசியாக வந்தார்.
|
வாயில் ஆட்டு ரத்தம் ஓடிக் கொண்டிருந்தது. முதல் புஞ்சைப் பொழியை நாய் தாண்டி விட்டது. ஊர் எழுந்து கொண்டது. 394 ஹூ ,,. ஹுவெனக் கூச்சல். சுந்தரத் தேவருக்கு மூச்சு இரைத்தது. எல்லோரும் வேல் கம்பு இருந்த வலது கையில் செருப்பைக் கழற்றி எடுத்துக்கொண்டு ஓட்டமெடுத்தார்கள். மணிப்பத்தா ஓடை வண்டலுக்குள் சதக்.. பொதக்.. என மிதித்து வெளியேறி ஓடினார்கள். நாய் ஒரு புஞ்சைக் கடப்பில் வந்து கொண்டிருந்தது. ஊர்ச்சனங்கள் கம்புகளோடும் ஆயுதங்களோடும் வண்டிப் பாதையில்திமு திமுஎன ஓடி வந்தனர். வேய் ரா.... வேய் ரா... " நாய் , வண்டலைக்
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.