text
stringlengths 11
513
|
|---|
பரீட்சைக் காலத்தில் என் இமைகளையும் வயிற்றையும் காவு கொள்ளவே அப்போது எனக்கு மருந்தாகப் புகட்டப்பட்டவை என்பதை நான் தெரிந்து கொண்டேன். நான் பின்தொடர்ந்து கொண்டிருந்த பசுவோ என்னைப் பற்றின பிரக்ஞையே இல்லாததாக ஒரு போதும் என்னைத் திரும்பிப் பார்க்காது தனக்கு விருப்பப்பட்ட இடங்களில் இருந்தும் படுத்தும் விழுந்தும் புரண்டும் ஓய்வெடுத்துக்கொண்டது. கண்களைத் திறந்தபடி உறங்கியது. மறைப்புகள் ஏதுமற்ற தன் தூய நிர்வாணம் முழுவதும் அமிழும்படி நீர்நிலைகளில் மூழ்கி எழுந்தும் மண்ணால் தன்னை மூடிக்கொண்டும் பிறகு அதை உதிர்த்து
|
வெளிப்படுத்திக்கொண்டும் புளகாங்கிதமடைந்தது. குளிர்பருவத்தில் வெளிச் சுவாசத்தைத் தன்னுடல் மேல் செலுத்தித் தகிப்பைத் தக்க வைத்துக்கொண்டது. கோடைப் பருவத்தில் உட்சுவாசம் இறங்கும் வழியை நாக்கால் தடவி ஈரப்படுத்திக் காற்றைக் குளிரச் செய்து தன்னுள் செலுத்திக் 526 கொண்டு மிகுதி வெப்பத்தை உடலைச் சிலிர்த்து வெளியே சிதறடித்தது. மனிதப் பிறவியால் சாதிக்கவியலாத பசுவின் இவ்விதமான செய்கைகள் என் அறிவைக் கேலி செய்து என்னைத் தொடர்ந்து அவமானப்படுத்திக்கொண்டேயிருந்ததால் விரைவில் பரீட்சையை முடித்துக்கொண்டு இருப்பிடம் திரும்பும்
|
ஏக்கம் என்னை அரிக்கத் துவங்கி விட்டது ( மேலும் குருமகளின் நினைவு நானறியாமல் என்னுள் இடந்திரும்பும் அவாவைக் கொழுந்து விட்டெரியச் செய்துகொண்டிருந்ததென்பதை திருமணத்திற்குப் பிறகே அறிந்துகொண்டேன். ). எனவே பசுவின் செயல்களுக்கு அவசர அவசரமாக வார்த்தையுருக் கொடுத்துப் பரீட்சையை வலுக்கட்டாயமாக அதன் முடிவிற்குக் கொண்டு வரும் மதிகெட்ட செய்கையைச் செய்யவும் நான் துணிந்தேன். நிர்வாணமாகத் திரியும் பசுவின் கண்முன் கனவாகத் தெரியும் வெல்லமும் அரிசியும் தேங்காயும் புல்லும் வைக்கோலும் மட்டுமல்லாது காற்றும் சீதோஷ்ணமும்
|
காட்சிகளுமேகூட உணவாகவே தெரிகின்றன என்று நான் எண்ணத் தலைப்பட்டேன். அது தன் முன் எதிர்படும் எந்தப் பொருளையும் முகர்ந்து பார்த்தும் நக்கிப் பார்த்துமே அடையாளங் கண்டுகொள்வதாகவே பரீட்சைக் காலத்தின் முதல் வசந்தத்தின் போது எனக்குத் தோன்றியது. நான் என் முன்னே சென்ற பசுவைப் பிடித்து அதன் நாசித் துவாரங்களில் கயிற்றைச் செலுத்தி இறுக்கி அதன் முடிச்சை பிடித்தபடி திமிருடன் அதன் முன்பாக நடந்து சென்று என் குருவை அடைந்தேன். பெரும் தவறைச் செய்கிறேன் என்பதை எனக்குக் காட்டாது அப்போது வயதும் என் கண்களைக் கட்டிவிட்டது. மிருகங்கள்
|
இந்த உலகைத் தங்கள் உணவாகக் காண்பதாகவும் எந்தப் பொருளையும் அவற்றின் கனவுகள் ருசியாகவே காட்டுவதாகவும் அவரிடம் இறுமாப்புடன் அறிவித்தேன். அப்படி அறிவித்த கணத்தில் என் குருவின் கண்கள் இருண்டு குழியில் விழுந்து அவர் உடலும் தன்னிலை தவறி அவர் என்னை வரவேற்ற முன்முற்றத்தின் கோலமிட்ட தரையிலேயே மூர்ச்சையுற்று விழுந்தபோதுதான் அவசரப்பட்டுவிட்டேன் என்பதை நான் தெரிந்து கொள்ள சந்தர்ப்பம் வாய்த்தது. என் தோல்வி என் ஆசானை மரணத்தில் கொண்டு சேர்த்துவிடும் அளவு விஷமுள்ளது என்பதை அறிந்த மாத்திரத்தில் நான் என்னையே வெறுக்கத்
|
துவங்கினேன். குருவின் மகளும் பின்னாளில் எனக்கு மனைவியுமாய் ஆன இந்தப் பெண் தன் தகப்பனைத் தேடி வாசலுக்கு வருவதற்கு முன் நான் பசுவின் மூக்கைப் பிணைந்திருந்த கயிற்றையும் கௌபீனத்தையும் கழற்றி நான் வந்து போனதன் அடையாளமாக நிலத்தில் வீசியெறிந்துவிட்டு பதிலுக்கு என் குருவின் மூர்ச்சை தெளிவதற்குள் நான் வெற்றியுடன் திரும்பி விடும் பிரதிக்ஞையை என்னுடன் எடுத்துக்கொண்டு சற்றும் தாமதிக்காமல் அங்கிருந்து வெளியேறினேன். பருவ காலங்களின் ஒரு சுழற்சிக்குள்ளாகவே பூர்த்தியாகியிருந்திருக்க வேண்டிய கல்வி என் மதியீனத்தாலும்
|
அகம்பாவத்தாலும் அவசரத்தாலும் மேலும் ஒரு சுழற்சிக்குள் சிக்கிக் கொண்டு அல்லலுறும்படியாகி விட்டது. மேலும் இப்போது நான் என்னை மனிதனென்று உறுதிப் படுத்தும் வண்ணம் என் லிங்கத்தைத் தொங்கவிடாது மறைத்துத் தொடைகளுடன் பிணைத்திருந்த ஒட்டுத் துணியையும் துணியிருக்கும் தைரியத்தில் பிற மனிதர்களோடு நான் பகிர்ந்து கொள்ள வைத்திருந்த சொற்ப வார்த்தைகளையும் இழந்துவிட்டேன். என்னை வழி நடத்திச் சென்ற மிருகத்தோடு நானும் கூடவே வார்த்தைகளும் பேதங்களுமற்ற உலகினுள் இவ்வாறு முற்றாகப் பிரவேசித்தேன். அதே 527 சமயத்தில் அவ்வுலகிற்கு வெளியே
|
இருந்து அதை அறியும் வார்த்தைகளையும் மனிதனென்கிற பிரக்ஞையுடன் நான் சிருஷ்டித்துக் கொண்டே இருக்க வேண்டியிருந்தது. உண்மையான பரீட்சை இப்போதுதான் துவங்குகிறது என்பதை என் முழு நிர்வாணம் எனக்கு உணரக் காட்டியது. முன்பு கௌபீனத்தை அவிழ்க்க மறுத்தபோது என் ஆசான் முணுமுணுத்த வார்த்தைகளையும் அப்போது என்னால் தெளிவாகக் கேட்க முடிந்தது. மிருகங்களின் கனவுகளில் பிரபஞ்சம் குழப்பமான நிறங்களிலும் மணங்களிலும் காணக் கிடைக்கிறது என்பதை நான் என் முதல் பரீட்சையில் அறிந்தேனென்று சொன்னேனல்லவா. இப்போது அவை குறிப்பிட்ட தருணங்களில் சில
|
குறிப்பிட்ட நிறங்களும் வாசனையும் கொள்வதை என்னால் கண்டுகொள்ள முடிந்தது. பசு தன் உணவை மெல்லும் போது அதன் கனவுகள் சிவந்ததும் இருண்டதுமான நிறத்தைக் கொள்வதை நானும் ஒரு விலங்காக என் கனவில் காணுமளவிற்கு சின்னாட்களில் முன்னேறினேன். கண்கள் முழுகும் வரையில் முகத்தை நீரில் அமிழ்த்தி அது நீரருந்தும் போதும் காற்றிற்கு எதிராக முகத்தை நிமிர்த்தி சுவாசத்தை அது சுத்தம் செய்து கொள்ளும் போதும் மழையாலும் மட்கிய பொருள்களாலும் சிறு பூச்சியினங்களாலும் புரட்டப்பட்ட சேற்றில் தன்னுடலை வீழ்த்திக்கொள்ளும் போதும் உண்ணிகளை கொத்திப்
|
பிடுங்கச் சிறு பறவைகளுக்குத் தன் உடலைக் கொடுக்கும் போதும் பசுவின் கண்களில் இவ்வுலகம் சிவந்து இருண்ட நிறங் கொள்வதாகவே இருந்தது. இதோடு கூட என் வியப்பு அதிகரிக்கும்பைட்யாக அந்தக் கனவுகளிலிருந்து ஆசுவாசங் கொள்ளச் செய்யும் கதகதப்பான சீதோஷ்ணம் ஒன்று வெளிக் கிளம்பிக் கொண்டிருப்பதையும் நான் அனுபவித்தேன். அந்தச் சீதோஷ்ணம் இவ்வுலகின் எந்த மூலையிலும் கேட்கக் கிடைக்காத கனத்த அமைதியை என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. மேலும் அது எனக்கு ஏற்கனவே பரிச்சயப்பட்ட ஒன்றாகவும் சாபத்தால் என் நினைவிலிருந்து பிறகு அகன்று மறைந்து
|
போனதாகவும் தோன்றி என்னை வதைத்தது. மிருகங்கள் தங்கள் கனவில் இப்பிரபஞ்சத்தை அதை நான் என்னவாகத் வார்த்தைகளாக அறிந்துகொண்டேதான் இருக்கிறேனென்பது விலங்கோடு விலங்காய் மாறிப் போயிருந்த எனக்குத் தெரிந்தது. பாஷைக்குள் பிடிபடும் வண்ணம் அந்தக் கனவை அறியத் தரும் ஒரு உபகரணத்தை நான் எப்படியும் கண்டுபிடித்துவிடுவேன் என்று நம்பினேன். அந்தச் சந்தர்ப்பமும் விரைவிலேயே வாய்க்கத்தான் செய்தது. ஆனால் நடந்தது என்னவென்றால் அந்த உபகரணம் தான் தன் கருவியாக என்னைத் தன் வழியில் கண்டுபிடித்தது. என்னைக் கண்டுபிடித்த அந்த உபகரணம் பத்தினிப்
|
பெண்ணின் விழிகளையொக்கும் கருத்த நிறமுள்ள ஒரு காளைமாடு. ஊரென்றோ நகரமென்றோ அடையாளம் புலப்படாத ஒரு பிரதேசத்தின் வழியே நானும் என் முன்னே வழக்கம் போலப் பசுவும் நடந்து சென்றுகொண்டிருந்த போது திடீரென எங்களிருவருக்கும் நடுவே பருத்த உருவமும் திரண்டு மதர்த்த இரட்டைத் திமில்களும் உயர்ந்து வானைக் கிழித்துக்கொண்டிருந்த கொம்புகளும் பரந்த தொடைகளும் சிவந்த கண்களும் உமிழ்நீர் பெருகி வடிந்து கொண்டிருந்த வாயுமாக அந்தக் காளை தோன்றியது. நான் என்னை நிதானித்துக்கொள்வதற்குள் பசுவை என் பார்வையிலிருந்து மறைந்து நின்ற அந்தப்
|
பிரம்மாண்டமான ஆண் மிருகம் விரைத்து நீண்டிருந்த தன் பிறப்புறுப்பால் என்னைத் தொட்டுத் தாக்கி அப்பால் தள்ளி விட்டது. பிறகு இடியொன்று மரத்தின் மீது வீழ்வது போல அது பசுவின் மேல் தன் முன்கால்களை ஏற்றி வீழ்த்தி அதைத் தனது உடலுக்குள்ளாக இழுத்தது. கண்மூடித் திறப்பதற்குள் இவையாவும் நடந்து முடிந்துவிட்டன. பசுவின் உடல் சுருங்கித் கண்டுகொண்டிருக்கின்றனவோ 528 தன்னிச்சையாகக் காளையின் கால்களின் நடுவே பதுங்கிக் கொள்வதையும் அதன் கனவுகள் வெகுவேகமாக செந்நிற இருளைத் தீட்டுவதையும் நான் விழுந்த நிலையிலேயே கண்டேன். அதன்
|
பின்புறத்தின் மீது ஏறி நின்று கொண்டிருந்த காலையின் கண்களிலிருந்தும் அதே செவ்விருட்டு நிறக் கனவு பீறிட்டு வெளியில் சிதறிக்கொண்டிருந்தது. இப்போதும் அந்தக் கனவுக்குள்ளிருந்து எனக்குப் பழக்கப்பட்டு மறந்து போன தட்பவெப்பம் என்மேல் கவிந்தது. குருவை மூர்ச்சையடையச் செய்த என் வயதின் மமதையை வென்று அப்போது பொறுமையாய் நிகழ்பவைகளைப் பார்த்துக்கொண்டிருப்பவனாய் மட்டுமே நான் விழுந்து கிடந்தேன். இதன் பயனாக என்னைப் பசுவிடமிருந்து பிரிக்கும் வண்ணம் நடுவே புகுந்ததென்று எண்ணியதால் ஒரு கணம் என் கோபத்திற்கு இலக்கான காளை உண்மையில்
|
வெற்றியுடன் என்னைப் பிணைக்கும் கண்ணியாகவே அப்படி நிற்கக் கடவுளால் அனுப்பப்பட்டது என்பதை நான் சற்று நேரத்தில் கண்ணீருடன் தெரிந்து கொண்டேன். விலகி நெருங்குவதாக அல்லாமல் அமிழ்ந்து வெளிப்படும் இயல்பினதான மிருகங்களின் கனவுலகமே உண்மையான பிரபஞ்சமென்று பறை சாற்றும்படியாக அவ்வுலகிற்குரிய செங்குத்தான அசைவை லயப்பிசகின்றி பசுவின் பின்புறத்தில் நிகழ்த்திக் கொண்டிருந்த காளை நெடுநேரம் கழித்து மீண்டும் தன் பளுவைத் தரையதிரும் வண்ணம் கீழே இறக்கிய பின்பு செந்நிறம் நீர்த்துப் பழைய ஸ்திதியை அடைந்திருந்த தன் கண்களைத் திருப்பி
|
என்னைக் கனிவுடன் பார்த்தது. அப்போது என் பயணக்காலம் முழுவதிலும் என்னைத் திரும்பியே பார்த்திராத அந்த வெண்ணிறப் பசுவும் முதன் முறையாக அன்பின் நீர் ததும்பும் விழிகளோடு என்னைப் பார்த்தது. அது தன் இடத்திலேயே அசையாது பின்னும் நின்றிருக்க காளை என்னருகே வந்து படுத்துக் கிடந்த என்மேல் தன் கதகதப்பான சுவாசத்தைப் பாய்ச்சியும் உடல் முழுவதையும் தன் நாக்கால் சுழற்றி நக்கியும் என்னோடு வார்த்தைகளற்ற உலகைச் சேர்ந்த பிரகிருதியின் பாவ பாஷையில் பேசியது. பிறகு அது தோன்றியதைப் போலவே உட்சுருங்கிக் காற்று வெளியில் மறைந்துபோனது. அதன்
|
பேச்சை அறிவு புரிந்துகொள்ளும் முன்பே உடல் புரிந்து கொண்டதன் அடையாளமாக என் லிங்கம் என்னிலிருந்து புறப்பட்டு என் யத்தனமின்றியே பசுவை நோக்கி நீண்டது. அந்த அளவில் நான் மிகப் பெரும் உவகையுடன் கதறியழுதபடி எழுந்து எனக்குத் தன் பின்புறத்தை மலத்திவாறே காத்துக் கொண்டிருந்த பசுவை நோக்கிப் பாய்ந்தேன். அதன் முதுகின் மேல் என் கைகளை ஊன்றி எழும்பிக் காளையின் மதநீர் வடிந்து கொண்டிருந்த புழையினுள் என் லிங்கத்தை நுழைத்தேன். அது என் ஆகிருதியிடமிருந்து விடுபட்டதான தன்னிச்சையுடன் என் மொத்த உயரத்தையும்விடக் கூடுதல் நீளங்கொண்டதாக
|
பசுவின் உடலினுள் அதன் தசையையும் திசுக்களையும் நிணத்தையும் குருதியையும் மென்நரம்புகளையும் தீண்டி வழுக்கியபடி வளர்ந்தது. மிருகங்கள் தங்கள் உடலின் ஒவ்வொரு மயிக்கண்களாலும் எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கும் இப்பிரபஞ்சத்தின் உண்மையான தோற்றத்தை இறுதியில் பசுவின் உடலினுள் என் லிங்கத்தின் கண்களால் இவ்வாறாக நான் தரிசித்தேன். விலங்குகளின் கனவுகள் முழுவதிலும் நிறைந்து கனவாகவே ஆகியிருக்கும் இருண்டு சிவந்த நிறமும் சீதோஷ்ணமும் கிறக்கமூட்டும் மணமும் நீரினுள் ஆழ்ந்ததைப் போன்ற நிசப்தமும் உண்மையில் பெண் விலங்கின் கருவறையே
|
என்னுள் உண்மை தாங்கவொணாத பரவசத்திற்கிடையில் அப்போது என் நெற்றிப்பொட்டில் வெடித்தது. பசுவின் கனவுகளூடு பயணப்பட்ட வழியில் நானும் அவ்வப்பொழுது நான் ஜனித்த இடத்தைத் தான் இப்பிரபஞ்சமாக கண்டிருக்கிறேனென்னும் தெளிவும் என் அறிவு வெடித்த வெளியில் சிதறியது. 529 மனிதன் வார்த்தைகளால் தன்னிடமிருந்து பிரித்துத் தனியானதாக உருவாக்கிக்கொண்ட உலகத்தில் உலோக அரண்மனைகளையும் ஓலைக் குடிசைகளையும் ஓட்டுவீடுகளையும் தோற்கூடாரங்களையும் எழுப்பித் தலைமுறைகளின் ஞாபகத்திலிருந்து தொலைந்துபோன தன் பிறப்பிடத்தைப் போலி செய்து
|
திருப்திப்பட்டுக்கொண்டிருக்க விலங்குகள் பிரபஞ்சம் முழுவதையும் தங்களின் பிறப்பிடமாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றன என்பதை நான் பசுவினுள் துடித்துக்கொண்டிருந்த என் ஞானக்கண்ணால் கண்டேன். இப்படி ஒரேசமயத்தில் திடீரென நான் பெற்ற ஞானோயத்தால் மகிழ்ச்சியும் அதே சமயத்தில் திடீரென நான் பெற்ற ஞானோதயத்தால் மகிழ்ச்சியும் அதே சமயத்தில் மனிதர்களின் மடைமையை எண்ணி அளவிலாத் துக்கமும் மேலிட்டவனாக பெண் மிருகத்தின் கருவறையிலிருந்து என்னைப் பிரித்துக்கொள்ள மனமின்றி நெடுநேரம் அதனுள் என்னை லிங்கமாக மாற்றிக்கொண்டவனாய் தோய்ந்து
|
கிடந்தேன். அப்போது நாங்கள் எங்கள் பயணத்தை முடித்துக்கொண்டு வந்த வழியே திரும்பும் காலம் கனிந்தது. இம்முறை பசு தன் மகத்துவத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஒரு சாதாரண விலங்காக எனக்குப் பின்னே என்னை வாத்ஸல்யத்துடன் தன் நாவால் நக்கியபடி பின் தொடர்ந்து வந்து என்னைப் பெருமைப்படுத்தியது. குருகுலத்தின் வாசலில் நான் காலடி எடுத்து வைத்த கணத்திலேயே தன் நீண்ட மூர்ச்சை தெளிந்து எழுந்த என் ஆசான் வாசலுக்கு ஓடோடியும் வந்து என்னை வரவேற்றார். என் உடல் முழுவதிலும் படிந்திருந்த சகதியையும் என் மீதிருந்து புறப்பட்டு திசைகளை
|
நனைத்துக்கொண்டிருந்த நிணத்தின் வாசனையையும் தளராது விரைத்த நிலையிலேயே இருந்த லிங்கத்தையும் எனக்குப் பின்னே பசு நின்றுகொண்டிருந்ததையும் பார்த்த கணத்திலேயே நான் பரீட்சையில் வென்றுவிட்டேனென்று உரக்க அறிவித்த அந்த ஞானி என்னைத் தன்னுடலுடன் ஆரத் தழுவிக்கொண்டார். என்னை உள்ளே வரும்படி அழைத்தார். அவருடைய மகளும் சற்று நேரத்தில் எனக்கு மனைவியாகப் போகிறவளுமான இங்கே என்னருகே அமர்ந்திருக்கும் இந்தப் பெண் உள்ளேயிருப்பதையும் நான் அம்மணமாக இருப்பதையும் எண்ணிப் பார்த்து நான் உள்ளே நுழையத் தயங்கிய போது யாசகனைத் தவிர வேறு
|
யாருக்கும் வாசலில் நிற்க வைத்து வஸ்திரமளிப்பதென்பது அப்படி அளித்தவரை நரகத்தில் கொண்டு சேர்க்கும் பாவ காரியமாகப் போகும் என்னும் சாஸ்திர விதியை எனக்கு ஞாபகப்படுத்திய க்ரூ சொன்னார். மேலும் வளர்ந்த மனிதனைத் தவிர வேறெந்த உயிரின் நிர்வாணமும் ஒரு பெண்ணை வெட்கமடையச் செய்வதில்லை. அவிழ்த்த உன் ஆடைகளைத் திரும்பத் தொடும் கணம் வரை நீயும் மனிதனில்லை. குருவின் இந்த மொழிகளால் நான் தைரியமுற்றவனாக உள்ளே நுழைந்து குருவின் பெண்ணிடம் லஜ்ஜைப் படாமல் வஸ்திரங்கள் வாங்கிக்கொண்டு குளித்து முடித்து ஆகாரமுண்டு களைப்பு நீங்கியவனாக என்
|
குருவின் முன் தாழ்ந்த ஆசனத்தில் உட்காரப் போகும் போது அவர் என்னைத் தடுத்து நிறுத்தித் தனக்குச் சமமாக இடப்பட்டிருந்த ஆசனத்தில் என்னை அமரச் செய்து கையில் தாம்பூலத்தையும் தேங்காயையும் பொதிந்து அதன்மீது நீரை வார்த்து தன் பெண்ணை எனக்கு வெற்றியின் பரிசாக அளிப்பதாக அறிவித்தார். பிறகு தன் காது குளிர என் பிரயாண அனுபவங்களைச் சொல்லும்படி என்னைக் கேட்டுக் கொண்டார். என்னைத் தன் மாப்பிள்ளையாக அவர் அறிவித்த 530 கணத்திலேயே தன்னை என் முன் காட்டிக்கொள்வதைத் தவிர்த்து விட்ட வெட்கத்தால் சிவந்து தகித்துக்கொண்டிருந்த முகத்தையுடைய
|
இந்தப் பெண்ணும் கதவுகளுக்குப் பின்னிருந்தபடியே என் பிரயாண அனுபவங்களைக் கேட்டுக்கொண்டிருந்தாள். பசுவின் பின்னே புறப்பட்ட முதல் தினத்திலிருந்து பசு பின் தொடரத் திரும்பி வந்த கடைசி தினம் வரையில் எனக்கேற்பட்ட விசித்திர அனுபவங்களை விலாவரியமாகச் சொல்லி என் குருவின் காதுகளையும் மனதையும் குளிர்வித்தேன் என்று தனது பால்யகால நினைவுகளையும் சாதனைகளையும் இவ்விதமாகத் தன் கதை மூலம் நினைவு கூர்ந்த என் முதிர்முப்பாட்டனார் தொடர்ந்து பேசுகிறார் ; கனவு என்கிற அதிசயமான உலகிற்கு சர்வசாதாரணமாகச் சென்று வர ஆசீர்வதிக்கப்பட்ட
|
விலங்குகளில் மனிதனைத் தவிர பிற யாவுமே பிரபஞ்சத்தைத் தங்களுடைய இருப்பிடமாகவே ( அதாவது பிறப்பிடமாகவே ) காண்கின்றன என்பதைத் தெரிந்து கொண்ட எனக்கு சில வேளைகளில் சுயநலமும் மமதையும் மிக்க மனிதப் பிறவிகளால் இந்த இருப்பிடங்கள் மிருகங்களிடமிருந்து பலவந்தமாகப் பறித்துக்கொள்ளப்பட்டு அவை விரட்டியடிக்கப்படும்போது பொதுவாக என்ன நடக்கிறதென்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று தோன்றவில்லை. அதற்குள் என் குருகுலவாசம் முடிந்து என் மனைவியுடன் இந்த நகரம் நோக்கி வந்துவிட்டேன். எந்தக் கல்வியும் குறைபாடுள்ளதாக முடிந்து போக இப்படி
|
பூர்த்தி செய்யப்படாமல் கவனத்திலிருந்து விடுபட்டுப் போகும் கேள்விகளே காரணமாக அமைந்துவிடுகின்றன. என் மனதில் ஒருபோதும் நான் கேட்டுக்கொண்டிராத இந்தக் கேள்விக்கான பதிலை அதை அப்படி இத்தனைக் காலமும் பொருட்படுத்தாதிருந்துவிட்டதை நினைத்து நான் வெட்கத்தில் புழுங்கிச் சாகும் வணம் ராஜன் மகளின் படுக்கையறையிலிருந்து பெற்றேனென்பதுதான் நான் சொல்லிக்கொண்டு வரும் இந்தக் கதை. அந்த வகையில் கனவுகளின் மீதான என் இரண்டாம் பிரயோகத்தில் என்னையுமறியாமல் மீந்து போன தேடலின் தொடர்ச்சியாகவும் இந்தக் கதை அமைகிறது. அப்படியானால் என்
|
பரீட்சையில் நான் கடந்து செல்ல வேண்டிய நிலை இன்னொன்றும் இருக்கிறது. எனில் அது என் குருவையும் நான் கடந்து செல்ல என்னை நிர்பந்திப்பது அல்லவா , கவனக்குறைவால் நாம் கற்றுக்கொள்ளத் தவறிவிட்ட பாடங்களையும் எழுதத் தவறிவிட்ட பரீட்சைகளையும் காலம்தான் எப்படி எதிர்பாராத இடங்களிலிருந்து எதிர்பாராத நபர்கள் மூலமாக நமக்கு அறியக் கொடுத்து விடுகிறது. நம் ராஜன் ஆண்வாரிசு ஒன்றை வேண்டித் தன் வாழ்நாள் முழுவதையும் யாகங்களிலும் தான தர்மங்களிலும் செலவிட்டுக் கொண்டிருக்கிறார். அவர் விரும்பியது அவருக்குக் கிடைக்க ஆண்டவன் அருள்
|
பாலிக்கட்டும். அதே சமயத்தில் அவர் தன் பெண்ணை இருபத்திரண்டு ஆண்களுக்குச் சமமான மனோதிடமும் உடல் வலிமையுள்ளவனாகவும் வளர்த்து வந்திருக்கிறார். அவர் நம்பிக்கை வீண் போகாமல் ராஜனின் பெண்ணும் ஆய கலைகள் அனைத்தையும் கசடறக் கற்றுணர்ந்திருக்கிறாள். அவளை என் மாணவி என்று சொல்லிக்கொள்வதில் உண்மையிலேயே நான் பெருமைப்படுகிறேன். ஸ்பரிசத்தாலன்றிப் பார்வையால் எதிரியின் புலன்களைச் செயலிழக்கச் செய்யும் அற்புதமான கலையை என்னை அறியச் செய்தவள் அவள்தான். அதைச் சொல்லிக் கொள்வதில் எனக்கு வெட்கமோ தயக்கமோ கிடையாது. அவள் பார்வை மனிதர்களின்
|
531 மூர்க்கத்தையும் புழுபூச்சிகளின் இயக்கங்களையும் தாவரங்களின் சுவாசத்தையும் கூட கட்டுப்படுத்தும் பேரழகும் ஒளியும் கொண்டது. உயிரற்ற ஜடப் பொருட்களின் நிலையைக் கூட கட்டுப்படுத்தும் கலை அவள் கூடப் பிறந்த அதிசயமாக இருக்கிறது. அவள் என்னிடம் வர்மக்கலையை பயின்றுகொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு நாள் தன் பார்வையின் மகத்துவச் சொடுக்கால் கடிகையின் மணற் பொழிவைத் தடுத்து நிறுத்தி விட்டாள். அன்று என் நித்ய கடமைகளும் உணவு வேளையும் படிக்கும் ஏடுகளின் அளவும் உறக்க அளவும் தலைகீழாக மாறிப் போய்விட்டன. இந்த நகரத்திலும் பிற
|
தேசங்களெதிலும் அவளுடைய பிரகாசத்திற்கு நிகராக ஜொலிக்கும் ஆண்மகன் எங்குமே கிடையாதென்று நான் நிச்சயமாகச் சொல்லுவேன். இத்தகைய அபூர்வப் பெண்ணுக்குள்ளும் கூட அவளையுமறியாமல் வாட்டிக்கொண்டிருந்த ஏக்கம் ஒன்று இருந்து வந்தது. இத்தனை திறமைகள் வாய்க்கப் பெற்றவளாக தான் இருந்தும் நிகரில்லையென்று அனைவராலும் போற்றிப் புகழப்படுகிறவளாக தான் இருந்தும்கூட தகப்பன் தன் சுக்கிலத்தின் இன்னொரு துளிக்கு இவள் ஈடானவள் அல்ல என்கிற எண்ணத்தினாலன்றோ ஆண்வாரிசு வேண்டி தொடர்ந்து யாகங்கள் செய்துவருகிறாரென்கிற எண்ணம் அந்தப் பெண்ணின் மனதை
|
அவளையுமறியாமலேயே வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது. இருபத்திரண்டு ராஜன்களுக்குரிய கல்வியைத் தன் யவ்வனப் பருவத்துக்குள் கரைத்துக்குடித்திருந்த அவளுக்கோ தன் மனதை அரித்துக்கொண்டிருந்த குறை இன்னதென்று தெளிவாக விளங்கிக்கொள்ள முடியவில்லை. பெண்ணால் சாதிக்க முடியாத ஏதோ ஒன்று ஆண் பிறப்பிடம் விஞ்சி நிற்கிறதென்பதாக ஒரு பிரமை அவளை முழுவதும் ஆட் கொண்டுவிட்டது. இந்தப் பிரமை இரவுகளில் தூக்கத்தினுள் தூக்கமின்மையாகவும் பகல்களில் வித்தைகளினுள் மயக்கமாகவும் மாறி அவளை அலைக்கழித்து வந்தது. கிட்டத்தட்ட இதே சமயத்தில்தான் யவ்வனமும்
|
ராஜன் மகளின் கன்னியுணர்வுகளை உண்மையில் துயரம் மிக்கதும் கிலிகொள்ளச் செய்வதுமான ஒரு காட்சியை முன்னிறுத்தி மலர்த்திவிட்டது. இதில் வியப்படைய ஏதுமில்லை. ஒரு கன்னிப் பெண்ணின் இணை தேடும் உணர்வுகள் எப்போது எங்கே யாரால் அல்லது எதால் தட்டி எழுப்பப்படும் என்பதை யாராலும் சொல்ல முடியாதென்கிறது காம சாஸ்திரம். ஒரு பூவின் விகசிப்பு அல்லது தென்றலின் வருடல் அல்லது இரவின் தனிமை அல்லது யாழின் இசையொலி அல்லது ஒரு சக பெண்ணின் ஸ்பரிசம் போதும் இவைகளல்லது ஒரு சிறு பறவையின் மரணம் நோயால் பொலிவிழந்த உடல் கண்ணீர் குமுறும் கண்கள் என்று
|
இவைகூட ஒரு புஷ்பவதியின் இணை தேடும் வேட்கை அவளுக்குள் கிளந்தெழக் காரணமாய் அமைந்து விடக்கூடும். யவ்வனம் என்பது ஒரு பருவமாக மட்டுமன்றி அந்தக் காலத்தில் அவளுடைய பார்வையாகவும் அமைந்துவிடுகிறது. அது அவளைத் தீண்டும் எதையும் ஆண் தன்மை உடையதாக மாற்றிக் காட்டி அவலை மகிழ்விக்கிறது. மேலும் கனவுகளுக்குச் சற்றும் குறையாத வினோதத் தன்மையையும் புதிர்க் குணத்தையும் யதார்த்தத்தில் ஏற்றி விளையாடிக்கொண்டே இருக்கிறது. இதனால் யவ்வன ஸ்தீரிகளுக்கு கண்ணெதிரே நிகழக் கண்ட உண்மை சிலசமயம் கனவின் மிச்சமாகவும் கனவின் வினோதம் பல சமயங்களில்
|
கண்ணெதிரே நடந்த உண்மை போலவும் எண்ணிக் குழம்பும் மயக்கம் உண்டாகிறது. ராஜனின் பெண் விஷயத்திலும் ஒரு நம்பற்கரிய நிஜம் கனவுக்கு ஒப்பான புகைப் பரிமாணத்துடன் நிகழ்ந்து அவளைக் குழப்பிவிட்டுவிட்டது. இது மாதிரியான நிஜம் லட்சத்தில் ஒரு பெண்ணின் கண்முன் லட்சத்தில் ஒரு தடவைதான் தோன்ற முடியும். ஆக தகப்பனின் யாகங்களால் விளைந்த 532 வியாகூலமும் யவ்வனப் பருவத்தின் இணை தேடும் விருப்பமும் பல மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் இரவு கண்ட காட்சியால் ஒன்றோடொன்று கலந்து குழம்பிப் போய்விட்டன என்பதுதான் ராஜன் மகளைப் பற்றிக் கொண்ட வினோதமான
|
நோய். அந்தக் காட்சியை அவள் பார்த்தது தூக்கமும் விழிப்புமற்ற மயக்க நிலையில் ஒரே ஒரு நாள் இரவில்தான் , ஆனால் அது நடந்து கொண்டிருந்ததோ ராஜ குடும்பத்தின் பல தலைமுறைக் காலமாக. அதன் பன்னிரெண்டாம் தலைமுறையில் அது சர்வசாதாரண காட்சியாக இருந்தது. பதின்மூன்றாம் தலைமுறையின் துவக்கத்தில் அது அரிதான காட்சியாகி அத்தலைமுறையின் முடிவுக்குள் எங்கும் காணவே முடியாத காட்சியாகி மறைந்து போனது. அதற்குப் பிறகு அது இந்நகரத்தின் ஞாபகத்திலிருந்து வழக்கொழிந்து போன பண்டைய கதையாக மாறிவிட்டது. அதன் வாசனையோ தலைமுறைகளைக் கடந்து
|
வந்துகொண்டிருந்தது. ராஜ குடும்பத்தின் கோத்திரக் கண்ணியைப் போலவும் அதன் குருதியோட்டத்தைப் போலவும் அந்த வாசனை ஒவ்வொரு காலகட்டத்தினூடாகவும் ரகசியமாகக் கடத்தப்பட்டுக்கொண்டே வந்தது. ராஜதானியின் அத்தனை தெருக்களிலும் யார் கண்களுக்கும் புலப்படாத புகை வடிவமாக அந்தக் கதை புலியும் முயலும் ஒரே நீர்ச்சுனையில் அருகருகே நீர் அருந்தி மக்களோடு மக்களாகக் கலந்து வாழ்ந்து வந்த அந்தப் பண்டைய கதை நகரத்தின் புழுதியோடு புழுதியாகச் சுழன்று சுவர்களெங்கும் படர்ந்து ஊடுருவி நிற்கிறது. அது வேறெங்கும் போகவும் முடியாது. என்பதுதான் உண்மை.
|
பதின்மூன்றாம் தலைமுறைக்கு முன்பு வரை பிரசித்தி பெற்றதாயிருந்த பிற தலைமுறைகளின் ரகசியமாம் அந்த அபூர்வக் காட்சியைத்தான் பல மாதங்களுக்கு முன் ஓரிரவில் இளவரசி தன் தூக்கக் கலக்கத்தில் கண்டாள். ஆம். அவள் கண்டது கானகத்தின் விரைக்கும் குளிரில் மரத்துப் போன ஞாபகங்களின் தோலுக்கு இதம் தேடி திறந்திருந்த சாளரத்தின் வழியே தினமும் உள்ளே குதித்து பதின்மூன்றாம் தலைமுறையில் படுக்கையறையாக மாற்றப்பட்ட தன் பழைய கடம்ப விருட்சத்தின் உச்சிக்கிளையில் மாய உருவமாகத் தன்னை மறைத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்த ஒரு காட்டு
|
மிருகத்தின் ஆத்மாவை தன் கானக வாழ்வின் நினைவுகளை உட்கொண்டே உயிர்த்துக்கொண்டிருந்த அது ஒரு கிழட்டு வரிப்புலி. பத்து தலைமுறைக் காலமாக அங்கே துயின்ற எவருடைய கண்களையும் உறுத்தாமல் யாருடைய கனவுகளுக்கும் காரணமாகாமல் அவர்களின் இணைப்பறைக் கட்டிலுக்கடியில் பூர்வ வாசனையுடன் தன் இரவுகளைக் கழித்துக்கொண்டிருந்தது. அந்த கதைப்புலி. மதுரமான தென்றலின் வடிவத்தில் அதை முதன்முதலில் பார்த்தவள் ராஜனின் பெண் தான். அது முக்தியுறும் காலம் அப்போதுதான் கனிந்தது என்பதும் ராஜன் மகளின் கண்களிலிருந்து எதுவும் தப்ப முடியாது என்பதும்தான்
|
அதற்குக் காரணம். பார்வையால் ஜடப் பொருள்களைக் கூட வசியம் செய்யும் அற்புதப்பெண் அவள் , இரவுகளின் நிழலாகவும் பகல்களில் புழுதியாகவும் இந்நகரத்தின் தெருக்களில் திரிந்து பதின்மூன்றாம் தலைமுறை நினைவுகளின் எச்சமாக உயிர் வாழ்ந்து கொண்டிருந்த கதைப் புலியின் புகை வடிவம் அவள் கண்களுக்குப் புலப்படும்படித் தன் ரகசியத்தை இழந்து போனதென்பதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. அந்தப் புலி இனித் திரும்பி அந்தப் படுக்கையறைக்கு வரப் போவதுமில்லை. அமைதியுறாமல் அலைந்து கொண்டிருந்த அதன் ஆயுள் ராஜனின் பெண்ணின் பார்வையில் உறைந்து
|
உடைந்து விட்டது. தலைமுறைக் காலங்களாக அது பெறக் காத்திருந்த முக்தி அதற்கு இந்நேரம் கிட்டியிருக்கும். அரண்மனைப் படுக்கையறையிலிருந்து விரட்டப்பட்ட மூன்றாம் நாள் பின்னிரவின் உறைய வைக்கும் குளிருக்கு 533 தலைமுறைக் காலங்களாகப் பழக்கப் பட்டிராத அந்தக் கதைப்புலியின் ஆத்ம நாளங்கள் சுருங்கி இறுகி அதன் ஞாபகத் துடிப்பைக் கவ்விப் பிடித்து இயங்க விடாமல் நிறுத்தியிருக்கும். ஆனால் சபையோரே கிழட்டுவரிப்புலி ஒன்றல்ல. இன்னும் ஓராயிரம் காட்டு விலங்குகள் இந்த ராஜ்ஜியமெங்கும் சாமான்யர்களின் சுவாசத்தில் கதைகளாக மனிதர்களோடு
|
மனிதர்களாகப் புழங்கிய பொன்னான நாட்களின் வாசத்தை விட்டகல முடியாமல் புகை வடிவமும் பாகு போல் இனித்த மனதும் கொண்டவைகளாகச் சுற்றியலைந்து கொண்டிருக்கின்றன. இந்நகரத்தைத் தங்கள் கனவுகளில் உருவாக்கிச் சுழற்றிக்கொண்டிருக்கின்றன. இதை இங்கே செவிமடுத்துக்கொண்டிருப்போரையும் அவர்களின் மூதாதையர்களையும் இனி பிறக்கப் போகும் வாரிசுகளையும் தங்களின் பளிங்கு விழிகளால் ஆர்வத்துடனும் வாஞ்சையுடனும் ஏக்கத்துடனும் உற்றுப் பார்த்தபடி படுக்கையறைச் சுவர்களுக்குள் தங்களை மறைத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றைத் தூல உருவமாகக் கண்டு அவற்றுக்கு
|
முக்தியளிக்கும் பார்வையொளி கொண்ட பெண் மகவுகள் இந்த ராஜ்ஜியம் எங்கிலும் பிறந்து செழிக்கட்டும் என்று ராஜன் முன்னிலையிலேயே நான் ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். இன்று சாளரத்திலிருந்து தென்றலாக உள்ளே குதித்த கிழட்டுப்புலியின் ஆவியுரு அதுவரையில் மொட்டாக இருந்த ராஜன் பெண்ணின் இணை தேடும் உணர்வுகளை மலர்த்தி விட்டது. ஆணுக்கென்று தனி அம்சமொன்று இருக்கக்கூடுமென்று தன்னையுமறியாமல் நம்பிப் பழக்கப்பட்டுவிட்ட அவள் அது என்ன என்பதையும் அன்று தான் கண்டுவிட்டதாக எண்ணிக்கொண்டாள். காதலில் கனவு காண்பதற்கான சாமர்த்தியமும் தைரியமும்
|
ஒரு ஆணுக்கன்றி பெண்ணுக்குக் கைகூடுவதல்ல என்ற விழிப்பும் துயிற்பும் கலந்த மயக்கத்தில் அவள் மனது பிதற்றவாரம்பித்துவிட்டது. நிலவின் மங்கிய ஒளியோடும் தென்றலின் மணத்தோடும் இறகின் எடையின்மையோடும் புகையொத்த உருவமாகக் கிழட்டுப்புலி சாளரத்தின் வழியே உள்ளே குதித்த காட்சி ஆண்மையின் குத்தீட்டிப் பாய்ச்சலாக அவள் மனதில் பாய்ந்து பதிந்ததென்று கனவுகளின் ஊற்றுக்கண்ணை ஆய்ந்தறியும் பாடப்பகுதி எனக்குப் போதித்தது. அந்த வினாடியில்தான் அவள் யவ்வனத்தின் பார்வை திறந்துகொண்டது. அந்த அளவில் காட்சிகளின் கனவுத்தன்மையும் கனவின் ஸ்தூல
|
கணங்களும் அவளோடு விளையாடத் துவங்கிவிட்டன. அவள் தான் கற்பனை செய்து கொண்ட ஆண்மை தன்னைக் கிளர்த்தும் முகமாகத் தன் கண்களை மூடிக்கொண்டு அந்நிலையிலேயே கனவுகளின் வினோத உலகிற்குள் ஆழ்ந்துபோனாள். அப்போது அவள் தன் தகப்பனின் ஆண்மகவுக்கான யாகங்கள் வெற்றி பெற வேண்டுமென்று தன் மனதார வாழ்த்தினான். தான் விழித்திருக்கிறோமா உறங்குகிறோமா என்பதிலேயே நிச்சயமற்றவளாக இவ்வாறு ராஜனின் பெண் மலர்த்தப்பட்ட பெண்மையின் துடிப்போடு அதைச் சாந்தி செய்யும் ஆண்மையின் பாரம் தன் மீது கவிந்துகொள்ளப்போவதை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். ஆனால்
|
உள்ளே நுழைந்த கிழட்டுப்புலி ராஜன் பெண்ணின் படுக்கையை நோக்கிச் செல்வதற்கு பதிலாக சபையோரே இணைப்பறையை நோக்கிச் சென்று வாயில் திரையை விலக்கியபடி உள்ளே போய் மறைந்து விட்டது. படுக்கையறையை விடச் சிறியதும் அடைசல்களுடையதும் சாளரங்களற்றதும் அதனாலேயே படுக்கையறையை விட அதிகக் கதகதப்பு உடையதுமான இணைப்பறைக்குள் புகுந்து 534 தோழிப் பெண்ணின் கட்டிலுக்கடியில் தன்னைக் குறுக்கிக்கொண்டு நித்திரை செய்யும் வழக்கம் உடையது அந்த மாயப்புலி. அன்றும் அதுவே நடந்தது. தன் இணைக்காகக் கண்களை மூடியபடியே சயனித்திருந்த ராஜனின் பெண்ணும் சற்று
|
நேரத்தில் அந்த அமைதியுடனேயே உறங்கிப் போய்விட்டாள். ராஜனின் பெண் அரைகுறைத் தூக்கத்தில் கண்ட காட்சி ஒரு வரவேற்பறைக் காட்சியின் சாதாரணத்துவத்துடன் அவள் மூளையின் ஞாபகப் பொறியிலிருந்து நழுவி கனவுகளுக்குள் இறங்கிவிட்டது. அதேசமயம் திருப்திப்படுத்தப்படாத விரகம் முழுவதுமாக விழித்துக்கொண்டுவிட்டது. முற்றிலும் விழிப்பு நிலையில் அமைதியுறாத புலியின் ஆன்மாவை அவள் கண்டிருப்பாளேயானால் மீண்டும் கண்களைத் திறந்து அதைத் தேடியிருப்பாள். முற்றிலும் விழிப்பு நிலையிலிருக்கும் ஒரு மனித உயிரின் பார்வையில் படாமல் பரம்பரைகளைத் தாண்டிய
|
அந்தப் புலியேகூட ஒருவேளை தொடர்ந்து தன் இருப்பைக் கதைகளில் மட்டுமே உறுதி செய்தபடி இன்றும் அதே அறையில் பிறரறியா வண்ணம் துன்புறும் ஆன்மாவாகத் தன்னை நீடித்துக்கொண்டிருக்கும். ராஜன் பெண்ணின் வினோதக் கனவுக்குக் காரணமான அந்நிகழ்ச்சியும் அவள் பிரக்ஞையின் மேல் மட்டத்திலேயே உடைந்து சிதறியிருக்கும். இன்று இந்தக் கதைக்கும் என் கீர்த்திக்கும் சந்தர்ப்பமே கிடைத்திருக்காது. அல்லது குறைந்தபட்சம் மறுநாள் காலையில் சாளரத்தின் கீழே தரையில் ஊர்ந்து செல்லும் இரண்டு காலடிச் சுவடுகளை அவள் பார்த்திருக்காவிட்டாலாவது எல்லா யவ்வன
|
ஸ்தீரிகளின் கனவுகளையும் போல அவள் கனவும் தன்னைச் சல்லாபிக்கும் ஆண் இணைக்குக் காத்திருக்கும் வேட்கையுடனாவது முடிந்திருக்கும். ஆனால் முக்தி வேண்டி தலைமுறைக் காலங்களாக அலைந்து கொண்டிருந்த வனவிலங்கின் ஆன்மாவை அமைதிப்படுத்தும்படி விதி அவளுக்குக் கட்டளையிட்டிருந்ததால் மறுநாள் காலையில் படுக்கையறையின் உள்பக்கத்தில் சாளரத்தின் கீழே தரையில் மனிதப் பார்வை பட்ட கணத்திலிருந்தே தன் எடையையும் நிழலையும் திரும்பப் பெறத் துவங்கி விட்ட புலியின் ஒரு ஜதைக் காலடிச் சுவடுகளை ராஜன் மகள் பார்த்தாள். ஒரு பெண்ணின் கனவுகளுக்குள் எந்த
|
உருக்கொண்டும் நுழைந்து சுகிக்கும் தகுதி மிருகங்களில் புலிக்குத்தான் உண்டு என்கிறது மாந்திரீகம். வேறெந்த விலங்கும் தான் மனிதப்பிறவியல்ல என்பதைத் தன் சுவாச அலைவிலேயே காட்டிக் கொண்டு விடும். புலி அப்படிப்பட்டதல்ல. அது மனிதனைப் போலவே கம்பீரமானது. மனிதனைப் போலவே கச்சிதமான அசைவும் உயர்ந்த எண்ணங்களும் போர்க்குணமும் இசையை ரசிக்கும் பெண் மனதும் கொண்டு இலங்குவது. போர்க்களத்தில் வீரர்களின் லட்சியமாகவும் படுக்கையறையில் புஷ்பவதிகளின் கனவாகவும் விளங்குவது புலி. அது தன் முன்னங்கால் சுவடுகள் தரையில் பதிய அனுமதிப்பது இல்லை.
|
விதி வசத்தால் கால்களில் நடக்கும் உயிராக படைக்கப்பட்டுவிட்டபோதிலுங்கூட தன் முன்னங்கால்களை ஒரு ஆயுதமாக மட்டுமே பிறர் கண்களுக்குக் காட்டிக்கொள்ளும் வேட்கையுடையது புலி. இதை வெறும் வேட்டைக்காரர்களும் பாமரர்களும் அறிய மாட்டார்கள். விலங்குகளின் அவய லட்சண சாஸ்திரங்களைக் கற்றறிந்தவன் புலிகளின் குணாம்சத்தை நன்கறிவான். புலி தன் முன்னங்கால்கள் நிலத்தில் பதிந்த தடத்தை அதன் மீது ஊர்ந்து செல்லும் தன் நிழலில் எடையால் அழுத்தி அழித்துவிடும். அதன் நிழல் படராத நாலு அது 535 பின்கால்களின் இரண்டு தடங்கள் மட்டுமேதான் எப்போதும்
|
பிறர் கண்களுக்குக் காணக் கிடைக்கும். அப்படிக் காணக் கிடைத்த ஒரு ஜதைக் காலடிச் சுவடுகளால்தான் ராஜனின் பெண் வெகுவாக ஈர்க்கப்பட்டாள். ஆம் ஈர்க்கத்தான் பட்டாள். அவள் அவற்றைக் கண்டு குழம்பிப்போகவில்லை. அதிர்ச்சியடையவில்லை. நழுவிக் கனவுகளுக்குள் இறங்கிவிட்ட முந்தைய இரவின் காட்சியை அந்தச் சுவடுகள் அவள் நினைவுக்கு மறுபடி கொண்டு வரவுமில்லை. அது மனிதக் காலடிச்சுவடுகள் இல்லையென்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. ஆனால் முன்னெப்போதும் வனவிலங்குகளை அவள் நேரில் கண்டவளில்லையாதலால் வட்ட வடிவமான கால் தடங்களை இன்னதென்று அவளால்
|
விளங்கிக்கொள்ள முடியவில்லை. அவை சுவற்றின் ஓரமாகப் பயணப்பட்ட விதம் மட்டுமே அந்தப் பேதைப் பெண்ணை வியப்பிலாழ்த்தி அவள் கவனத்தைச் சுண்டி இழுக்கப் போதுமானதாயிருந்தது. அந்தக் காலடிச் சுவடுகள் எந்தக் காரணத்துக்காகவும் அறைச் சுவற்றின் அண்மையை விட்டு அப்பால் நகர்ந்து செல்லவில்லையென்பதே அவள் வியப்புக்குக் காரணம். அதன் வழியில் சுவரோரமாகக் குறுக்கே நின்ற ஆளுயர அலங்காரப் பூக்குவளையின் உட்பக்கத் தரையில் அந்தச் சுவடுகள் பதிந்திருந்தன. ராஜன் மகள் தினமும் பார்த்துச் சிங்காரித்துக்கொள்ளும் பளிங்கு ஆடியின் வட்டப் பரப்பின்
|
நடுவில் சுவாசக் காற்றின் ஈரம் உலராத ஆவி அதன் இரண்டு பக்கங்களிலும் படிந்திருந்தது. பெரிய சிமிழ்களுக்குள் ஏற்றி வைக்கப்பட்டிருந்த இரவு விளக்கின் மேல்நுனி இணைப்பறையிருந்த திசை நோக்கியே குவித்து அழுத்தப்பட்டிருந்தது. எந்தப் பொருளையும் ஒரு தடையென்று மதிக்காது அவற்றை ஊடுருவிக் கிடக்கும் அதிசயிக்கத்தக்க சுவடுகளைப் பதிக்கும் பாதங்கள் யாருக்குச் சொந்தமானதாயிருக்க முடியும். காற்றையும் ஒளியையும் தவிர வேறு யாருக்கு இப்படித் தன் அறையினுள் உலாவிச் செல்லும் தைரியமும் லாவகமும் கைவர முடியும். தென்றலோ அல்லது நிலவோதான் தன்
|
அறையினுள் அன்று இரவு அப்படி நடந்து போயிருக்க வேண்டுமென்று ராஜனின் பெண் நினைத்துக்கொண்டுவிட்டாள். அந்த அளவில் அவளுடைய பருவம் நிஜத்தில் அவள் கண்ட காலடிச் சுவடுகளுக்கேற்ப பிரகிருதியின் அம்சங்களைக் குழைத்து ஒரு பேரழகனின் உருவத்தை வரைந்து அவனை அவள் கனவுகளில் நடமாடவும் அனுமதித்துவிட்டது. அவன் தன்னைக் கூடாமல் விலகிப் போனதற்கான ஒரு காரணத்தையும் அவள் ஆழ்மனம் கற்பித்துக்கொண்டுவிட்டது. அவள் துயரத்தின் பளுவும் தாபத்தின் வெம்மையும் பீறிடும் சில பாடல் வரிகளை இயற்றியிருக்கிறாள். அந்தப் பாடல் வரிகள் கால்சுவடுகளைப் பார்த்த
|
கணத்திலேயே ராஜன் மகளின் மனதில் எழுந்திருக்க வேண்டும். வினோதச் சுவடுகளைப் பார்த்த மாத்திரத்தில் பயந்துபோய் அலறி மற்றவர்களையும் கலவரப்படுத்தாமல் அவற்றை ஆராயப் புகுந்தது அவளுடைய பிறவி விவேகத்தின் சிறப்பைக் காட்டுகிறதென்றால் அவற்றால் ஈர்க்கப்பட்டு அவள் உடனே இயற்றிய பாடல் வரிகளோ வித்தைகளில் அவளுக்கிருந்த பாண்டித்யத்தைக் காட்டுகிறது. தான் இயற்றிய வரிகளின் சந்த நயத்திலும் கற்பனை வளத்திலும் தானே ஈர்க்கப்பட்ட ராஜனின் பெண் பிறகு எப்போதுமே அவற்றை முணுமுணுத்துக்கொண்டிருக்கத் தலைப்பட்டாள். இதை நான் எப்படி அறிந்தேனென்றால்
|
என்னிடம் வித்தை கற்றுக்கொள்ள வந்த நாட்களிலும்கூட அந்தப் பாடல் வரிகள் அவள் பிரயாசையின்றியே அவள் வாயிலிருந்து பெருகி வழிந்துகொண்டிருந்ததை நான் கண்டிருக்கிறேன். ஆனால் அது அவளை பீடித்திருந்த வினோத நோயின் வெளிப்பாடே என்பதை அப்போது நானும் அறிந்தேனில்லை. தான் இயற்றிய பாடல் வரிகளைத் தன் குரலாலேயே பாடித் தன் 536 செவிகளாலேயே நுகர்ந்து அவற்றையே உண்மையென நினைக்கும் பிரமை வயப்பட்டு அவை தன் கனவுகள் வரை புரையோடும்படி விட்டு விட்டதானது அனுபவத்தாலன்றி வெறும் ஏட்டுப்படிப்பால் பக்குவப்படுத்த முடியாத அவளுடைய பதின்பருவத்தின்
|
பலவீனத்தால் விளைந்தது. தானே நிர்மாணித்த கனவுலகில் தன் நண்பனோடு கூடி விளையாடிக் களித்துக்கொண்டிருந்த நேரங்களிலும் இந்தப் பாடலின் வரிகள் பின்னணியாக அவள் நாபியிலிருந்து ஒலித்தபடியே இருப்பதை நான் முதல் நாளிரவு கேட்டேன். தூங்கும் வேளைகளில் ராஜனின் பெண் முணுமுணுத்த பாடல் வரிகளை விளையாடிக் கொண்டிருந்த கனவுப்பெண் தன் செவிகளால் நுகர்ந்தவாறே இருக்கும்படியானது. திரும்பத் திரும்ப பாடப்பட்ட இந்த வரிகள்தான் பெண்மையின் இயல்பான தவிப்பைச் சிறிதுசிறிதாக ஒரு வினோதமான நோயாக மாற்றி விட்டன. தென்றலின் நீண்ட கனவொன்றில் என் முகம்
|
சிற்றசைவு. திங்களின் நெடிய ஆயுளில் என் பெண்மை ஒற்றைப் பெருமூச்சு. காற்றின் உறக்கமாய் நானில்லை யென்ப தெதனால் ஒளியின் சுவாசமாய் நானில்லையென்பது மெதனால் , அதனால் இந்த இரவென்னை மிகப் பெரிதும் வருத்துகிறது மேலும் அதனால் அகாலத்தை தன் ஆபரணமாய்ப் பூண்ட என் நண்பன் எனை விட்டு அகன்று செல்கிறான். ரோகியிடம் மலர்களுடன் 537 நோயையும் விட்டுச் செல்லும் இரக்கமற்ற உறவினன் போல. விளையாட்டுகளின் உச்சக்கட்டத்தில் தன் நண்பனைப் படுக்கையில் அனுமதிக்கும் முகமாகக் கனவுப்பெண் கண்களை மூடிக்கொண்டு தன் வழக்கமான துயில் நிலையில் உறங்கும்
|
நிஜப் பெண்ணின் மேல் சாய்ந்து கொள்ளும் போதெல்லாம் உறங்கும் பெண் நான் ரோகியல்ல நான் ரோகியல்ல என்று பயத்துடனும் ஜூர வேகத்துடன் தாறுமாறாக பிதற்றத் துவங்குவதை இதோ என் கண்முன்னே நான் மறுபடி பார்க்கிறேன். காற்றின் லகுவும் சுகந்தமும் நிலவொளியின் தேஜஸும் நிறைந்த தன் பேரழகு நண்பன் தன்னைக் கூடும் விருப்பமின்றி விலகிச் செல்லப் போகிறானென்னும் பயம் அவள் முகத்தைக் கோரமாகக் குத்திக் கிழிக்கிறது. பாடலின் கடைசி வரிகள் உறங்கும் பெண்ணின் வாயிலிருந்து கழிவுப் பொருள்களின் துர்நாற்றத்துடனும் நிறத்துடனும் பெருகி வெளியே
|
பீய்ச்சியடிப்பதையும் நான் இப்போது மறுபடி பார்க்கிறேன். என்னாலேயே அந்த அருவருப்பான காட்சியைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால் கனவுப் பெண்ணோ வெளியே உறங்கிக்கொண்டிருக்கும் நிஜப்பெண்ணின் அவஸ்தையை உணராதவளாக தன் மேனியெங்கும் பெருகி வழியும் பாடல் வரிகளின் விகாரத்தை அறியாதவளாக அதே நிர்மலமான முகத்துடன் அமைதியாக அவன் கூடுவதை எதிர்பார்த்துச் சாய்ந்திருக்கிறாள். மிகப் பரிதாபகரமானதும் பயங்கரமானதுமான காட்சி அது. அதிசயமான காட்சியுங்கூட. பருண்மையான கால் தடங்களை கனவுகளுக்குள் ஊடுருவும் வரிவடிவமாக்கிக் கொண்டும் கனவுலக நண்பனை
|
எண்ணிக் கனவுக்கு வெளியேயான பருண்மை உடலை வருத்திக்கொண்டும் இந்தச் சிறுபெண் பட்ட பாட்டைச் சொல்லும் போது என் நா தழுதழுக்கிறது. உண்மைதான். அவள் அப்போது அடைந்த விகார ரூபத்தை என்னாலேயே கண்டு தாங்கிக் கொள்ள முடியவில்லைதான். என்றால் மெல்லியதமும் புகையுருவமும் கொண்ட அந்தப் பேரழகனால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும். அவன் அவள் பாடலில் துர்நாற்றத்தைச் சகித்துக் கொள்ள முடியாமல் அவள் அலறி விழிக்கும் படியாக முகத்தில் துப்பிவிட்டு உடனே மறைந்து போய்விட்டான். இது ஒரு நாளல்ல. பல தினங்களாக நடந்து கொண்டே இருந்திருக்கிறது. தன்
|
நண்பன் விலகிப் போய் விடுவானெனும் பயத்தாலேயே அவனைப் பறிகொடுத்தும் தீவிர பயத்தால் பாதிக்கப்பட்டும் ராஜனின் பெண் தன்னைத் தன் நினைவின்றியே ஒரு வினோத நோய்க்கு ஒப்புக் கொடுத்து விட்டாள். கனவின் இந்த வகை பாதிப்பால் யதார்த்த உலகில் ஒரு அழகிய ஆண்மகனைக் கூடும் அருகதை தனக்கில்லையென்று அவள் மனது நம்ப ஆரம்பித்து விட்டது. எந்த அழகிய ஆணும் முகத்தில் காறியுமிழக் கூடிய அளவுக்கு அவள் முகம் ரோகத்தால் விகாரப்பட்டதென்று நாங்கள் மூன்றாம் நாளிரவு நட்சத்திரவாஸிகளின் கலவியை இசைத்து ஞாபகங்களின் காட்டுப் புதருக்குள் தலைமுறைக்காலமாக
|
மறைந்து கொண்டிருந்த மிருகத்தை ஸ்தூல உருவத்துடன் வெளிப்படுத்தி அவள் கண்களுக்குப் புலியாகவே காட்டிக் கொடுக்கும் வரை கனவுகள் அவள் ஒப்புதல் இன்றியே அவளுக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தன. அழகிய ஆண் உருவங்களோவெனில் முகத்தில் வழியும் உமிழ்நீரை நினைவுறுத்தி வயிற்றிலிருந்து பொங்கி எழும் ஓங்கரிப்பை உண்டு பண்ணி அவளை அச்சுறுத்திக்கொண்டிருந்தன என்று தன் கதையை முடித்த என் 538 முதிர்முப்பாட்டனாரின் துயரம் தோய்ந்த முணுமுணுப்பை பலகாத தூரம் பரந்திருந்த ஜனசமுத்திரத்தின் கடைசி மனிதனுங்கூட தெளிவாகக் கேட்டானென்கிறது கதை :
|
இருபத்திரண்டு ஆண்களை ஈடு செய்யும் வலிமையும் பேரழகும் தைரியமும் கவ்வி ஞானமும் கொண்ட ஒரு யவ்வனப் பெண் தானொரு குரூபியையோ ரோகியையோ சேர்வதற்கே தகுதியானவள் என்று நம்பும் வினோத நோய் பீடித்தலைந்த பரிதாபத்தைப் பிரபஞ்சத்தைக் கருவறையாகத் தங்கள் கனவில் கண்டு அதனுள் தங்களைப் பாதுகாப்பாகச் சுருட்டிக்கொண்டிருக்க விரும்பும் விலங்குகளின் அமைதியுறாத ஆவிகள் வெட்டப்பட்ட விருட்சங்களின் இறந்து போன காற்றைச் சுமந்தபடி அலைந்து திரியும் தெருக்களையுடைய இந்த நகரத்தைத் தவிர வேறெது உருவாகியிருக்க முடியும். 539 எச்.எம். மரி என்கிற
|
ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன் “ தமிழ் சார்... அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன். " என்றார் “ எந்த அற்புத மரி ? " என்றேன் நான். " இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய் ? எந்த அற்புத மரிங்கறீர் ? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும். " தினத்தாளை மடித்து வைத்து விட்டு , அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற , அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம் , அதன் ஆசிரியர்கள் ,
|
மாணவர்கள் , மாணவிகள் , சட்டதிட்டங்கள் , ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற ,நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ...என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். " என்னத்துக்கு சார் டி.சி ? " " என்னத்துக்கா ? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா ? அவள் ஸ்டூடண்ட்தானெங்காணும் ? " உம்ம " ஆமாம். அப்பப்போ இஷ்டப்பட்டால் , ஏதோ எனக்கு தயவு பண்ணுகிற மாதிரி கிளாசுக்கு வரும். போகும். " உம். நீரே
|
சொல்கிறீர் பாரும். " என்று சொல்லிவிட்டு இரண்டாள் சேர்ந்து தூக்க வேண்டிய வருகைப் பதிவு ரிஜிஸ்டரையும் , இன்னும் இரண்டு மூன்று ஃபைலையும் தூக்கி என் முன் போட்டார். 540 " பாரும். நீரே பாரும். போன ஆறு மாச காலத்திலே எண்ணிப் பன்னிரண்டே நாள் தான் ஸ்கூலுக்கு வந்திருக்கிறாள். வீட்டுக்கும் மாசம் ஒரு கடிதம் எழுதிப் போட்டுக் கொண்டுதான் இருக்கேன். ஒரு பூச்சி , புழு இப்படி எட்டிப் பார்த்து , அந்த கடுதாசிபோட்ட கம்மனாட்டி யாருன்னு கேட்டுச்சா ? ஊகூம். சர்தான் போடா நீயுமாச்சு உன் கடுதாசியுமாச்சுன்னு இருக்கா அவள். சரி ஏதாச்சும்
|
மெடிக்கல் சர்டிபிகேட் கேட்டு வாங்கிச்சேர்த்துக்கலாம்னா , வந்தால்ல தேவலாம். நம்ம டி.இ.ஓ மாதிரியில்ல ஸ்கூலுக்கு இஷ்டப்பட்டால் வருகிறாள். வந்தாலும் ஸ்டூடண்ட் மாதிரியா வர்றாள் ? சே... சே... சே... என் வாயாலே அத எப்படிச் சொல்றது ? ஒரு பிரஞ்சு சைக்கிள்ளே , கன்னுக்குட்டி மேலே உட்கார்ந்து வர்ற மாதிரி பாண்ட் போட்டுக் கொண்டு வர்றாள். பாண்டுங்காணும்... பாண்ட் ! என்ன மாதிரி பாண்ட்டுங்கறீர் ? அப்படியேசிக்'குன்னு பிடிச்சிக்கிட்டு , போட்டோவுக்கு சட்டம் போட்ட மாதிரி , அதது பட்பட்டுன்னு தெறிச்சுடுமோன்னு நமக்கெல்லாம் பீதியை
|
ஏற்படுத்தற மாதிரி டிரஸ் பண்ணிட்டு வர்றாள். சட்டை போடறாளே , மேலே என்னத்துகுங்காணும் இரண்டு பட்டனை அவுத்துவிட்டுட்டு வர்றது ? அது மேலே சீயான்பாம்பு மாதிரி ஒரு செயின். காத்தாடி வால் மாதிரி அது அங்கிட்டும் இங்கிட்டும் வளைஞ்சு வளைஞ்சு ஆடறது. கூட இத்தினி பசங்க படிக்கறாங்களேன்னு கொஞ்சமாச்சும் உடம்பிலே வெக்கம் வேணாம் ? இந்த இழவெடுத்த ஸ்கூல்லே ஒரு யூனிபார்ம் , ஒரு ஒழுங்கு , ஒரு மண்ணாங்கட்டி , ஒரு தெருப்புழுதி ஒன்றும் கிடையாது. எனக்கு தெரியுங்காணும்... நீர் அதையெல்லாம் ரசிச்சிருப்பீர் ! " " சார்... " " ஓய் சும்மா
|
இருங்காணும். நாப்பது வருஷம் இதுல குப்பை கொட்டியாச்சு. ஐ நோ ஹ்யூமன் சைக்காலஜி மிஸ்டல் டமிள் ! தமிழ்சார் , எனக்கு மனத்தத்துவம் தெரியும்பா. உமக்கு என்ன வயசு ? " " இருபத்தொன்பது சார் ! " " என் சர்வீஸே நாற்பது வருஷம். " " பாண்ட் , சண்டை போடக்கூடாதுன்னு விதி ஒன்னும் நம்ம ஸ்கூல்ல இல்லையே சார். " " அதுக்காக , அவுத்துப் போட்டுட்டும் போகலாம்னு விதி இருக்கா என்ன ? வயசு பதினெட்டு ஆகுதுங்காணும் அவளிக்கு ! கோட்டடிச்சு கோட்டடிச்சு இப்பத்தான் டெந்த்துக்கு வந்திருக்கிறாள். எங்க காலத்துல பதினெட்டு வயசுல இடுப்பிலே ஒண்ணு.
|
தோள்லே ஒண்ணு இருக்கும். போதாக்குறைக்கு மாங்காயைக் கடிச்சிட்டு இருப்பாளுக. போனவாட்டி , அதான் போன மாசத்திலே 541 ஒரு நாள் போனாப் போவுதுன்னு நம்ம மேலே இரக்கப்பட்டு ஸ்கூலுக்கு வந்தாளே அப்போ , அவள் ஒரு நாள்லே , ஆறு மணி நேரத்துக்குள்ளாறே - ஹார்ட்லி ஸிக்ஸ் அவர்ஸ் சார்- என்ன என்ன பண்ணி இருக்காள் தெரியுமா ? யாரோ நாலு தடிக்கழுதைகளோட - நீங்கள்ளாம் ரொம்ப கௌரவமா சொல்லிப்பேளே பிரண்ட்ஸ் அப்படீன்னு - நாலு தடிக்கழுதைங்களோட ஸ்கூல் வாசல்லே சிரிச்சு பேசிட்டு இருந்திருக்காள். நம்ம ஹிஸ்டரி மகாதேவன் இருக்கே... அது ஒரு அசடு. நம்ம
|
ஸ்கூல் வாசல்லே , நம்ம ஸ்டூடண்ட் இப்படி மிஸ்பிஹேவ் பண்ணறாளேன்னு அவ கிட்ட போய் " இப்படி எல்லாம் பண்ணக்கூடாது அற்புத மரி , உள்ள வான்னு கூப்பிட்டு இருக்கான். அவள் என்ன சொன்னாள் தெரியுமா ? " சொல்லுங்க சார் " " உங்களுக்கு பொறாமையா இருக்கா சார்ன்னு கேட்டுட்டாள். அந்தப்பசங்க முன்னால வெச்சு மனுஷன் கண்ணாலே ஜலம் விட்டுட்டு என்கிட்டே சொல்லி அழுதார். இந்த ஸ்கூல் காம்பசுக்குள்ளே நடக்கிறதுக்குதான் நீங்க பொறுப்பு. வெளியிலே நடக்கிற விவகாரத்துக்கெல்லாம் நீங்க என்னைக் கட்டுப்படுத்த முடியாது சார்னு மூஞ்சியிலே அடிச்ச மாதிரி
|
சொல்றாள். யாருகிட்டே ? இந்த நரசிம்மன்கிட்டே. ” எச்.எம்.முக்கு முகம் சிவந்து மூக்கு விடைத்தது. " இந்த அநியாயம் இத்தோடு போகலே. சாயங்காலம் , பி.டி. மாஸ்டர்கிட்டே சண்டை போட்டுக்கொண்டாள். அவன் இப்படிப் பண்ணப்படாது , இப்படி வளையணும் , இந்த மாதிரி கையை வச்சுக்கணும்னு அவளைத் தொட்டுச் சொல்லிக்கொடுத்திருக்கான். தொட்டவன் , எசகுபிசகா எங்கேயோ தொட்டுட்டான் போலிருக்கு. இவ என்ன கேட்டிருக்கா தெரியுமா ? " " என்னைத் தொட்டுப் பேசாதீங்கன்னு சொல்லியிருப்பாள். ” " மனுஷ ஜாதின்னா அப்படித்தானே சொல்லியிருக்கணும் ? இவள் என்ன சொன்னாள்
|
தெரியுமா ? " எச்.எம். தலையைக் கையில் தாங்கிப் பிடித்துக் கொண்டார். அவர் முகம் வேர்த்து விட்டிருந்தது. 542 * சார்... உங்க பொண்டாட்டியோட நீங்க படுக்கறது இல்லையான்னு கேட்டுவிட்டாள். பாவம் ! நம்ம பி.டி. பத்மநாபன் லீவு போட்டு விட்டு போய்விட்டான். முடியாதுப்பா முடியாது. நானும் நாலு பெத்தவன் , இந்த ராட்சஸ ஜென்மங்களையெல்லாம் வச்சிக்கிட்டு , இரத்தக் கொதிப்பை வாங்கிக்கிட்டு அல்லாட முடியாதுப்பா. அந்தக் கழுதையைத் தொலைச்சுத் தலைமுழுகிட வேண்டியதுதான். " " இப்போ போய் டி.சி. கொடுத்துட்டால் , அவள் எஸ்.எஸ்.எல்.சி. எழுத
|
முடியாமல் போயிடும் சார். அவள் வாழ்க்கை வீணாகப் போய்விடும். " " அந்தக் கழுதைக்கே அதைப் பத்திக் கவலை இல்லை. உமக்கெதுக்கு ? " www நமக்கெதுக்கு என்று என்னால் இருந்து விட முடியாது. அது என் சுபாவமும் இல்லை. அத்தோடு , அந்த மரி என்ற ஆட்டுக்குட்டி , ஒரு சின்னப்பெண். அப்படி என்ன பெரும் பாவங்களைப் பண்ணிவிட்டாள் ? அப்படியேதான் இருக்கட்டுமே. அதற்காக அவளைக் கல்லெறிந்து கொல்ல நான் என்ன அப்பழுக்கற்ற யோக்கியன் ? நான் சுமதியிடம் சொன்னேன். எச்.எம். மாதிரிதான் அவளும் சொன்னாள். “ உங்களுக்கெதுக்கு இந்த வம்பெல்லாம் ? நீங்க
|
சொல்றதைப் பார்த்தால் , அது ரொம்ப ராங்கி டைப் மாதிரி தெரியுது. உங்களையும் தூக்கி எறிஞ்சு ஏதாச்சும் பேசிட்டால் ?? " என்றாள். அவளை சம்மதிக்க வைத்து , அவளையும் அழைத்துக்கொண்டு மரி வீட்டுக்கு ஒரு நாள் சாயங்காலம் போனேன். என் வீட்டுக்கு ரொம்ப தூரத்தில் இல்லை அவள் வீடு. ரயில் நிலையத்துக்கு எதிரே இருந்த வரிசை வீடுகளில் , திண்ணை வைத்த , முன்பகுதி ஓடு போட்டு , பின் பகுதி ஒட்டிய பழங்காலத்து வீடு அவளுடையது. விளக்கு வைத்த நேரம். திண்ணை புழுதி படிந்து , பெருக்கி வாரப்படாமல் கிடந்தது. 543 உள்ளே விலை மதிப்புள்ள நாற்காலிகள்
|
சோபாக்கள் இருந்தன. ஆனாலும் எந்த ஒழுங்கும் இன்றிக் கல்யாண வீடு மாதிரி இரைந்து கிடந்தன. " மரி , " என்று நான் குரல் கொடுத்தேன். மூன்று முறை அழைத்தபிறகுதான் , " யாரு ? " என்று ஒரு குரல் உள்ளிருந்து வந்தது. கலைந்த தலையும் , தூங்கி எழுந்த உடைச் சுருக்கங்களோடும் , சட்டையும் கைலியுமாக வெளிப்பட்டாள் மரி. என்னைப் பார்த்ததில் ஒரு ஆச்சரியம் , வெளிப்படையாக அவள் முகத்தில் தோன்றியது. என் மனைவியைப் பார்த்ததில் அவளுக்கு இரட்டை ஆச்சரியம் இருக்க வேண்டும். " வாங்க சார்.. வாங்க , உட்காருங்க. " என்று எங்கள் இருவரையும் பொதுவாக
|
வரவேற்றுவிட்டு நாற்காலிகளை ஒழுங்குபடுத்தினாள். சோபாவில் நானும் சுமதியும் அமர்ந்தோம். எதிரே இருந்த ஒரு நாற்காலியில் அவள் அமரச் சொன்னதும் அமர்ந்தாள். " தூக்கத்தைக் கலைச்சுட்டேனாம்மா ? " என்றேன். * பரவாயில்லே சார் , " என்று வெட்கத்தோடு தலையைக் கவிழ்த்துக் கொண்டாள். முகத்தில் விழுந்த முடியை மேலே தள்ளிவிட்டுக் கொண்டாள். ” நீங்க எப்படி இங்கே.. ? " “ சும்மாத்தான். பீச்சுக்குப் போய்க்கிட்டு இருந்தோம். வழியிலே தானே உங்க வீடு. பார்த்து ரொம்ப நாளாச்சேன்னு நுழைஞ்சிட்டோம். அழையாத விருந்தாளி. உடம்பு சரியில்லையா ? " “
|
தைலம் வாசனை வருதா சார் ? லேசாத் தலைவலி. ஏதாச்சும் சாப்பிடறீங்களா சார் ? " “ எல்லாம் ஆச்சு. வீட்டிலே யாரும் இல்லையா ? " 544 " வீடா சார் இது.... ? வீடுன்னா அப்பா , அம்மா இருக்கணும். அப்பா எப்பவோ போயிட்டார். போயிட்டாருன்னா செத்துப் போயிடலே. எங்களை விட்டு விட்டு போயிட்டார். அம்மா என்னைச் சுத்தமாக விட்டுடலை. அப்பப்போ நாங்க சந்திக்கிறோம். சமயத்திலே இரண்டு நாளுக்கு ஒரு முறை நாங்க பார்த்துக்கொண்டால் அது அதிகம். அதனால்தான் இது வீடான்னேன். எனக்கு ஏதோ லாட்ஜிலே தங்கற மாதிரி தோணுது. " எனக்குச் சங்கடமாய் இருந்தது.
|
இரவுகளில் , நசுங்கிய அலுமினியப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு பிச்சைக்கு வருகிற குழந்தையைப் பார்ப்பது போல இருந்தது. சாப்பாடெல்லாம் எப்படியம்மா ? " “ பெரும்பாலும் பசி எடுக்கறப்போ , எங்க தோணுதோ அங்கே சாப்பிடுவேன். ஓட்டல்லேதான். அம்மா வீட்டிலே தங்கியிருந்தா ஏதாவது செய்வாங்க. அம்மா சமையலைக் காட்டிலும் ஓட்டலே தேவலை , நல்லாயிருக்காதுன்னு சொல்லலை. அம்மான்னு நினைச்சு சாப்பிட முடியலே. பொண்ணுன்னு நினைச்சு அவங்களும் பண்ணலை. " சுமதி என்னை முந்திக்கொண்டு கேட்டாள். * உன் அம்மாதானே அவங்க ? " " ஆமாங்க. இப்போ வேறு ஒருத்தரோட
|
அவங்க இருக்காங்க. அவரை எனக்குப் பிடிக்கலை. என்னையும் அவருக்குப் பிடிக்கலை. சரி அவங்க வாழ்க்கையை அவங்க வாழறாங்க. என் வாழ்க்கையை நான் வாழ்ந்து கொண்டு தீர்க்கிறேன். " ஓர் இறுக்கமான மௌனம் எங்கள் மேல் கவிந்தது. நான் , சாவி கொடுக்காமல் எப்போதோ நின்று போயிருந்த கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். “ மரி... ஸ்கூலுக்கு வந்தால் , ஒரு மாறுதலாக இருக்குமில்லே ? " 545 " நான் யாருக்காக சார் படிக்கணும் ? " “ உனக்காக , “ " ப்ச் ! " என்றாள் அவள். இதற்கு மேல் எதுவும் பேசக்கூடாது என்று எனக்குத் தோன்றியது. * பீச்சுக்குப்
|
போகலாம். வாயேன். * “ வரட்டுமா சார் ? ” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் , " வா. * " இதோ வந்துவிட்டேன் சார் , " என்று துள்ளிக் கொண்டு எழுந்தாள். உள்ளே ஓடினாள். நான் சுமதியைப் பார்த்தேன். " பாவங்க , " என்றாள் சுமதி. " யாருதான் பாவம் இல்லே ? இந்தப் பெண்ணை விட்டுவிட்டு எங்கேயோ இருக்கிற அந்த அம்மா பாவம் இல்லையா ? இத்தோட அப்பா பாவம் இல்லையா. எல்லோருமே ஒருவிதத்திலே பாவம்தான். ” என்றேன் நான். அப்போதுதான் பூத்த ஒரு பூ மாதிரி , மழையில் நனைந்த சாலை ஓரத்து மரம் மாதிரி , ஓடைக் கூழாங்கல் மாதிரி , வெளிப்பட்டாள் மரி.
|
பேண்ட்தான் போட்டிருந்தாள். சட்டையை டக் பண்ணியிருந்தாள். அழகாகவே இருந்தது அந்த உடை. உடம்புக்குச் சௌகரியமானதும் , பொருத்தமானதும்தானே உடை. 546 " ஸ்மார்ட் ! " என்றேன். " தேங்க்யூ சார் , " என்றாள் , பரவசமான சிரிப்பில். நான் நடுவிலும் , இரண்டு புறமும் இருவருமாக , நாங்கள் நடந்தே கொஞ்ச தூரத்தில் இருந்த கடற்கரையை அடைந்தோம். கடற்கரை சந்தோஷமாக இருந்தது. ஓடிப் பிடித்துக் கல் குதிரைகளின் மேல் உட்கார்ந்து விளையாடும் குழந்தைகள். குழந்தைகள் விளையாட்டைப் பார்த்து ரசிக்கும் பெற்றோர்கள். உலகத்துக்கு ஜீவன் சேர்க்கும் யுவர்களும்
|
யுவதிகளும். கடலைகள் , கடல் மணலில் சுகமாக வறுபட்டன. குழந்தைகள் வாழ்வில் புதிய வர்ணங்களைச் சேர்த்துப் பலூன்கள் பறந்தன. ஸ்டூல் போட்டுப் பட்டாணி சுண்டல் விற்கும் ஐயரிடம் வாங்கிச் சாப்பிட்டோம். “ கார வடை வாங்கிக் கொடுங்க சார் , " என்றாள் மரி , கொடுத்தேன். தின்றாள். " மத்தியானம் சாப்பிடல்லே சார். சோம்பேறித்தனமாக இருந்துச்சு. தூங்கிட்டேன். ” “ ராத்திரி எங்களோடுதான் நீ சாப்பிடறே , " என்றாள் சுமதி. ருக்கட்டுங்க்கா. " “ என்ன இருக்கட்டும். நீ வர்றே. " வரும்போது , சுமதியின் விரல்களில் தன் விரல்களைக் கோத்துக்கொண்டு ,
|
சற்றுப்பின் தங்கி மரி பேசிக் கொண்டு வந்தாள். நான் சற்று முன் நடந்தேன். 547 சாம்பாரும் கத்தரிக்காய் கறியும்தான். மத்தியானம் வறுத்த நெத்திலிக் கருவாடு இருந்தது. “ தூள்க்கா.... தூள் ! இந்தச் சாம்பாரும் நெத்திலிக் கருவாடும் காம்பினேஷங்க்கா , ” என்றாள் மரி. மரி இப்போதெல்லாம் காலையும் மாலையும் தவறாமல் எங்கள் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தாள். காலை இட்டிலி எங்கள் வீட்டில்தான். வருஷம் 365 நாட்களும் எங்கள் வீட்டில் இட்டிலி அல்லது தோசைதான். “ ஆட்டுக்கல்லை ஒளித்து வைத்து விட்டால் , சுமதிக்கு ஹார்ட் அட்டாக்கே
|
வந்துவிடும். மரி , " என்பேன். மரி விழுந்து புரண்டு சிரிப்பாள். சாயங்காலங்களில் எங்கள் வீட்டில்தான் அவள் வாழ்க்கை கழிந்தது. பேண்ட் போட்ட அந்தப்பெண் , சிரமப்பட்டுச் சம்மணம் போட்டு உட்கார்ந்து சுமதிக்கு வெங்காயம் நறுக்கித் தருவதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும். “ ஏம்மா... சைக்கிள்ளே ஊரைச் சுற்றுகிற பெண் நீ. இங்கே இவளுக்கு வெங்காயம் நறுக்கித் தர்றியோ ? ” என்றேன். " இதுதான் சார் த்ரில்லிங்கா இருக்கு. கண்ணிலே நீர் சுரக்கச் சுரக்க வெங்காயம் நறுக்கிறது பயங்கரமான எக்ஸ்பீரியன்ஸ். " என்றாள். ஐயோ இந்தப் பயங்கரமே ! “
|
சார் , ஒண்ணு சொல்லட்டுமா ? " பயங்கரமான " ஊகூம். ரெண்டு மூணு சொல்லு. " " சீரியஸாகக் கேட்கிறேன் , சார். நான் இங்கே வந்து போறதிலே உங்களுக்குத் தொந்தரவு இல்லையே சார் ? " “ சத்தியமாகக் கிடையாது. " 548 கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு அவள் சொன்னாள். “ ஏன் சார் - கெட்டுப் போனவள்னு எல்லோரும் சொல்கிற என்னை எதுக்கு உங்க வீட்டிலே சேர்த்து , சோறும் போடறீங்க ? " சிரிப்புத்தான் வந்தது. " பைத்தியமே ! உலகத்திலே யார் தான் கெட்டுப் போனவங்க ? யாராலுமே கெட முடியாது , தெரியுமா ? மனசுக்குள்ளே நீ கெட்டுப் போனவள்னு
|
நினைக்கிறியாக்கும் ? அதை விட்டுடு. நீயும் கெட்டவள் இல்லை , உங்க அம்மாவும் , அப்பாவும் யாருமே கெட்டவங்க இல்லே. " அவள் சொனாள் : " எங்க அம்மாவைப் பழி தீர்க்கணும்னுதான் அப்படியெல்லாம் நடந்துக்கறேன் சார். " " எனக்கும் தெரியும். " என்றேன். பத்து நாள் இருக்குமோ ? இருக்கும். ஒரு நாள் மரி என்னிடம் கேட்டாள். “ சார்.. நான் ஸ்கூலுக்கு வர்றதே இல்லைன்னு நீங்க ஏன் கேட்கவில்லை ? " நான் அவள் முகத்தைப் பார்த்தேன். இரண்டு மணிகள் உருண்டு விழத்தயாராய் இருந்தன. அவள் கண்களில் , " என்னை நீங்க கேட்டிருக்கணும் சார். ஏண்டி ஸ்கூலுக்கு
|
வரலைன்னு என்னை அறைஞ்சு கேட்கணும் சார். அப்படி யாரும் என்னைக் கேட்க இல்லேங்கறதுனாலதானே நான் இப்படி விட்டேத்தியா இருக்கேன் ? என் மேல் இப்படி யாரும் அன்பு செலுத்தினது இல்லே சார். அன்பு செலுத்தறவங்களுக்குத்தானே அதட்டிக் கேக்கவும் அதிகாரம் இருக்கு ? " 549 " உனக்கே அது தோணனும்னுதானே நான் காத்திருக்கேன். அதனாலே என்ன ? ஒன்றும் முழுகிப் போய்விடவில்லை. இன்னைக்குப்புதுசா ஆரம்பிப்போம். இன்னைக்குத்தான் டென்த் கிளாஸ்லே நீ சேர்ந்தன்னு வச்சுக்க. நாளையிலேர்ந்து நாம் ஸ்கூலுக்குப் போறோம். ” என்றேன். மரி , முகத்தை மூடிக் கொண்டு
|
விசும்பி விசும்பி அழுதாள். 550 பூனைகள் இல்லாத வீடு - சந்திரா எங்கள் தெருமுழுக்கத் தோரணம் கட்டியிருந்தார்கள். மாவிலை மணத்துக்கொண்டிருந்தது. அண்ணனும் நானும் ஒலிநாடாவின் இசையை அதிகப்படுத்திக்கொண்டிருந்தோம். ஒலி பெருத்து , தெப்பங்குளம் தாண்டி மீனாட்சி அம்மன் கோவில் வரை கேட்டிருக்கும் போலிருக்கிறது. எங்கள் தெரு முழுக்க கூட்டம் நிரம்பி வழிந்திருந்தது. நான் புதிதாய்ப் போட்டிருந்த பச்சை கலர் கோடு போட்ட வெள்ளைச் சட்டையும் , கால்களை மூழ்கிக்கொண்டிருந்த நீல பேண்ட்டுமாய் வாசலில் நின்ற கூட்டத்தை கர்வத்துடன் பார்த்தேன்.
|
அம்மாவின் பட்டுப்புடவையைப் போன்று அக்காவும் கத்தரிப்பூ நிறத்தில் பட்டுப்புடவை உடுத்தியிருந்தாள். இன்று அவள் கூந்தல் நீளமாகி சிவப்பு கலர் குஞ்சத்துடன் தொங்கிக் கொண்டிருந்தது. தலையில் நிறைய பூ வைத்திருந்தாள். தெருவில் வெள்ளை நிற அம்பாசிடர் கார் நின்றிருந்தது. நான் ஒரு மகாராஜனைப் போல வீறுநடை போட்டு படியில் இறங்கினேன். பேண்ட் பாதம் முழுதும் நிரப்பி என்னைத் தடுக்கி விழ வைத்தது. உடனே பிரபுவையும் சிவக்குமாரையும் பார்த்தேன். அவர்கள் சிரிக்கவில்லை. ஒரு கையில் பேண்ட்டை நன்றாக தூக்கிப் பிடித்தபடி காரின் முன்சீட்டில்
|
உட்கார்ந்தேன். பேன்ட்டின் நீளத்தின் குறைக்கவாவது நான் வளர வேண்டும் என்று நினைத்தேன். பிரபுவும் , சிவக்குமாரும் நாங்களும் காரில் வருகிறோம் என்றார்கள். எனக்கும் அவர்களை என் பக்கத்தில் உட்கார வைத்துக்கொள்ள ஆசைதான். அப்போது என் அண்ணன் வில்லனைப் போல் அவர்களை ஒரு முறை முறைத்து ஸ்டைலாக கார் கதவை திறக்க முயன்றான். அவனின் ஒல்லியான கைகளுக்கு கதவு அசைந்துகூட கொடுக்கவில்லை. பிரபு ஓடி வந்து ஒரு சேவகனைப் போல கதவைத் திறந்துவிட்டான். அப்பவும் அண்ணன் அவனை முறைத்தான். அவன் தள்ளிப்போய் நின்று கொண்டான். காரில்
|
உட்கார்ந்திருப்பதற்கான அனைத்து பந்தாக்களையும் செய்தேன். காரில் இருந்த கண்ணாடியில் தலையைச் சீவிக் கொண்டேன். அடம்பிடித்து அழுது தைத்த முழுக்கைச் சட்டையை அப்பாவைப் போல் மடக்கிவிட்டு அண்ணனின் அரைக்கைச் சட்டையைப் பார்த்துச் சிரித்தேன். சாந்தி அக்காவும் அவளது தோழிகளும் சிரித்தபடி காரில் பின்சீட்டில் உட்கார்ந்தார்கள். செல்வி அக்கா வழக்கம்போல் சாந்தி அக்காவுடன் சண்டை போட்டிருப்பாள் போல , அவள் காரில் ஏறாமல் பழத்தட்டை கையில் ஏந்தியபடி சித்தி , பெரியம்மா , அத்தை கோஷ்டிகளுடன் நடந்துவர தயாரானாள்.சின்னவளே இன்னைக்குமா
|
வீம்பு புடிக்கணும் நீயும் கார்ல உட்கார்ந்துக்கடிஎன்ற அம்மாவை முறைத்துவிட்டு , தட்டை படிக்கட்டில் வைத்துவிட்டு வீட்டுக்குள் ஓடிப்போய் உட்கார்ந்துகொண்டாள். செல்வி அக்காள் , சாந்தி அக்காவைப் போல் இன்று தாவணி போட்டிருந்தது 551 அழகாயிருந்தது. மேளக்காரர்கள் காருக்கு முன்னால் நின்று வாசிப்பை ஆரம்பித்தார்கள்.செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்காபாட்டு ஒலிபெருக்கியில் வாசிப்பை மீறி கேட்டுக் கொண்டிருந்தது. திடீரென்று ஒலிபெருக்கியின் சத்தம் நின்றுவிட்டது. புது வெள்ளை வேட்டியை மடக்கி கட்டியிருந்த அப்பா விடுவிடுவென்று
|
காருக்குப் பக்கத்தில் வந்தார். எல்லோரையும் இறங்கச் சொன்னார். சாந்தி அக்காவை தரதரவென்று வீட்டுக்குள் இழுத்துப் போனார். ஒலிபெருக்கி , பாட்டு , கார் , மேளம் எல்லா சந்தோசமும் போச்சு. எனக்கு அவமானம் பிய்த்துத் தின்றது. அவர் எங்களை பார்த்த ஒரு பார்வையிலேயே பிரபு , சிவக்குமாரு , கூட்டம் யாரையும் திரும்பிப் பார்க்காமல் அவர் பின்னால் ஒடுங்கிக்கொண்டு போனோம். முற்றத்திலிருந்த மர நாற்காலியில் அக்காவை உட்கார வைத்து அறிவியல் புத்தகத்தை கையில் கொடுத்தார் அப்பா. அக்காவும் அதுவரை படித்துக்கொண்டிருந்துவிட்டு சமையலறையில்
|
தண்ணீர் குடிக்கப் போனவளைப் போல இயல்பாக படிக்க வேண்டிய பக்கத்தை எடுத்துப் படித்தாள். நீர்மூழ்கிக் கப்பலின் செயல்பாடுகளை கண்ணை மூடிக்கொண்டு ஒவ்வொரு வரியாக மனப்பாடம் செய்தாள். அப்பா எங்களிடம் அதிகாரத்தைக் கட்டவிழ்க்கும் முன்னே நான் முற்றத்தின் தெற்கு மூலையிலும் அண்ணன் வடக்கு மூலையிலும் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தோம். செல்வி அக்கா கோவிலை தாண்டியிருந்த கொய்யா மரத்தருகில் நடந்தபடி படித்தாள். அம்மா , கல்யாணம் நின்று போனதில் பெரும் வருத்தம் அடைந்தவளாக சித்தி பெரியம்மாவுடன் சமையலறையில் உட்கார்ந்து அழுதாள்.
|
அப்பா வாத்தியாரைப் போல் கைகளைப் பின்னால் கட்டி எங்களையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தார். எல்லாத்துக்கும் காரணம் செல்வி அக்காதான். அவள்தான் முதலில் கோபித்துக்கொண்டு வந்தாள். மாப்பிள்ளையையும் பார்க்கவில்லை. கார் ஊர்வலமும் போச்சு. கோபத்துடன் எழுந்துபோய் அவளை என் கை ஓயுமட்டும் அடித்தேன். “ டேய் செந்திலு எந்திரிடா எதுக்கடா இப்படி கையைத் தூக்கி காத்துல அடிச்சுகிருக்க. ராத்திரி பேய்க்கதை கேட்காத. கெட்ட கெட்ட கனவா வரும்ன்னு சொன்னா கேட்குறியா ? " “ எம்மா ராத்திரி கல்யாணக்கதைதானம்மா சொன்ன " என்றேன் கண்களைக்
|
கசக்கியபடி. “ உனக்கு தெனமும் இதே வேலையாப் போச்சுடா ராத்திரி கதை கேக்கிறது. காலையில கனவு கண்டுட்டே எந்திரிக்கிறது ? சரி எந்திரி காப்பியை குடிச்சிட்டு பெரியப்பா வீட்டுக்கு போயிட்டு வா. சீக்கிரம் சோறாக்கணுமில்ல " என்ற அம்மாவிடம் “ சீனி அண்ணனை போகச் சொல்லு. தெனைக்கும் நானே போக முடியாது. பெரியப்பா முறைக்கிறாரும்மா. " “ அண்ணன் பெரிய பையனாயிட்டான்ல வெட்கப்படுறாண்டா. நீ போயிட்டு வாடா. " " நான் ஆறாவது படிக்கிறேன் அவன் எட்டாவது படிக்கிறான் அதுக்குள்ள அவன் பெரிய பையனாயிட்டானா ! நானும் டவுசர் போட்டிருக்கேன். அவனும்
|
டவுசர் போட்டிருக்கான். அவன் பேண்ட் போடட்டும் அப்பதான் பெரியவனாவான். " அம்மா என் நாடியை பிடித்து கெஞ்ச ஆரம்பித்துவிட்டது. செல்வி அக்கா அதற்குள் குளித்து முடித்து 552 யூனிபார்ம் போட்டிருந்தாள். அவள் ஆம்பளப் பையன் சட்டை போட்டிருந்தது எனக்கு எரிச்சலாக இருந்தது. இப்படி இவள் சட்டை போட்டுக்கொண்டு அலைந்தால் , ஊரில் யார்தான் என்னை ஆம்பளையாக மதிப்பார்கள். அதுவும் கூடப்படிக்கும் இந்துமதி நான் ஆம்பளப் பையன் என்பதை கொஞ்சம்கூட மதிக்காமல் சண்டை வரும்போதெல்லாம் என் மேல் உட்கார்ந்து முதுகில் குத்துகிறாள். அவளுடன் சண்டை போட
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.