text
stringlengths 11
513
|
|---|
தினமும் கொஞ்சம் அதிகமாக சாப்பிட வேண்டியிருக்கிறது. அதற்கும் கொஞ்ச காலமாக வீட்டில் வழியில்லாமல் போய்விட்டது. ராத்திரி விளையாடும்போது அவள் என்னை அடித்ததும் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு வீரமாகிப் போய் அடிக்கலாம் என்றால் அம்மா சோத்து பாத்திரத்தையெல்லாம் கழுவி வைத்திருக்கிறது. பெரியப்பா வீட்டுக்குப் போய் அரிசியும் பருப்பும் வாங்கும் நாளிலிருந்து இப்படித்தான் வீட்டில் மறுசோறு சாப்பிட முடியாமல் போய்விடுகிறது. தினமும் ஒரு படி அரிசி என்று கணக்கு வைத்துதான் கொடுக்கிறார் பெரியப்பா. அம்மா எப்படியோ கெஞ்சிக்
|
கூத்தாடி தினமும் என்னை பெரியப்பா வீட்டிற்கு காலையில் அனுப்பி விடுகிறது. நானும் சாந்தி அக்கா தையல் பீரியடில் பின்னிய சிவப்பும் வெள்ளையும் கலந்த வயர் பைக்குள் ஒரு மஞ்சள் துணிப்பையை எடுத்து வைத்துக்கொண்டு அடுத்த தெருவில் இருக்கும் பெரியப்பா வீட்டுக்குப் போகிறேன். பெரியம்மா நான் போவதற்கு முன்பே அரிசி பருப்பு காய் எல்லாவற்றையும் ரெடியாக வைத்திருக்கும். முன்னெல்லாம் சாப்பாட்டுச் செலவுக்கு மாதம் ஒரு முறை என்று பணமாகத்தான் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். பாதி மாதத்திலேயே பணத்தை செலவழித்துவிட்டு சாப்பாட்டுக்கு
|
வழியில்லை என்று அவர்கள் வீட்டுப் பக்கம் போய் நின்றதும் , இப்படி தினமும் அரிசியாக கொடுப்பதை வழக்கமாக்கிவிட்டார்கள். பெரியம்மா அரிசியைத் துணிப்பையில் கொட்டி வயர்பைக்குள் வைக்கும். காகிதத்திலிருக்கும் பருப்பு , காய்கறிகளை மேலாக்க போட்டு “ சூதானமா கொண்டு போ செந்திலு ". இந்த வார்த்தையை பெரியம்மா தினமும் சொல்வதைப் போல பெரியப்பாவும் ஒரு விசயத்தை தினமும் சொல்லிக்கொண்டிருந்தார். “ உங்கப்பா கடைப்பக்கம் வரமாட்டாராமா ? வேலை பார்த்தா கிரீடம் இறங்கிப் போகும் , ரெண்டு பொம்பளப் பிள்ளைக வளர்ந்து கல்யாணத்துக்கு நிக்கப்
|
போகுதுக , இவரு சாமிய கட்டிக்கிட்டு அழுகுறாரு. வயலை வித்தாச்சு , வடக்குத்தெரு வீட்டை வித்தாச்சு இன்னும் எதை விக்கப் போறாரோ ? விக்கிறதுக்கு இன்னும் என்னயிருக்கு , உங்க அத்தகாரிகதான் சொத்தில பங்கு வேணுமின்னு எல்லாத்தையும் கோர்ட்டுல கொண்டு நிறுத்திட்டாளுகளே " எங்கப்பா காலையில் கந்தசஷ்டி கவசத்தை பயபக்தியுடன் சொல்வதைப் போல , பெரியப்பாவும் சிரத்தையுடன் இதை என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். “ சின்னப்பையன் அவங்கிட்ட போய்த் தெனமும் இதையே சொல்லிக்கிட்டிருந்தா நல்லாவாயிருக்கு " என்று சொல்லும் பெரியம்மாவை , " எல்லாம் உன்
|
தங்கச்சியை சொல்லணும் புருசன வீட்டுக்குள்ள பொத்தி பொத்தி வச்சிகிட்டு , புருசனை லட்சணமா வேலைக்கு போகச் சொல்ல துப்பில்ல " என்று பெரியப்பா பேசிக்கொண்டிருக்கும்போதே அவர்கள் வீட்டின் நீளமான படியைத் தாண்டி குறுக்குச் சந்து வழியாக எங்க வீட்டின் பின்பக்கம் நுழைந்து வீட்டுக்குள் வந்திருப்பேன். 553 ஊரில் எங்கள் வீட்டைகோவில் வீடு " என்றுதான் கூப்பிடுவார்கள். துட்டு பெருத்திருந்த காலத்தில் என்னோட தாத்தா வீட்டோடு சிவன் கோயிலை கட்டி வைத்திருந்தார். கோவில் வாசல் வடக்குத் தெருவிலும் வீட்டு வாசல் கிழக்குத் தெருவிலும்
|
இருக்கும். இப்படி இரண்டு தெருக்களைக் கொண்ட ஒரு செவ்வக வடிவமைப்பில் இருந்தது எங்கள் வீடு. வீட்டின் நடுவில் நான்கு பக்கமும் ஓடுகள் மேய்ந்த முற்றம் இருந்தது. முற்றத்தின் மேற்கு பக்கம் இரண்டு அறைகளும் , முற்றத்தின் கிழக்குப் பக்கம் இரண்டு அறைகளும் இருந்தன. ஒவ்வொரு அறைக்கு முன்னால் வராண்டாவைப் போன்று கொஞ்சம் இடம் காலியாக இருக்கும். ஒவ்வொரு முற்றமும் தனித்தனி வீடு போலிருக்கும். தெற்கு முற்றத்தினை தொடர்ந்து ஒரு படுக்கை அறையும் , ஒரு நீண்ட வராண்டாவும் , தானியங்களை அடைத்து வைக்க மரத்தால் ஆன சேந்தியும் , அதனைத்தாண்டி
|
கடைசியாக சமையலறையும் இருக்கும். வடக்கு முற்றம் அறைகளற்று வாசலைக் கொண்டிருந்தது. இதிலிருந்து இருபதடி தூரத்தில் சிவன் கோவிலும் கிணறும் இருந்தது. சிவன்தான் பிரதான கடவுள் என்றாலும் பிள்ளையார் , நந்தி , முருகன் எல்லாமே சேர்ந்திருந்தது. வீட்டு கோவில் என்பதால் எப்போதாவது வரும் ஒன்றிரண்டு ஊர்க்காரர்களைத் தவிர யாரும் எங்கள் கோவிலுக்கு வருவதில்லை. வீட்டில் கோவில் கட்டியிருந்ததுதான் எங்களின் எல்லா துன்பத்திற்கும் காரணம் என்று ஊர்க்காரர்கள் பேசிக்கொண்டார்கள். எங்கள் கோவிலில் நந்தி மட்டும் எனக்கு விருப்பமானதாக இருந்தது.
|
வீட்டில் அப்பா இல்லாத நேரத்தில் அம்மா வீட்டுக்குள் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போது யாருக்கும் தெரியாமல் நந்தியில் சவாரி செய்வேன். அப்பாவோடு பூஜை செய்துகொண்டிருக்கும் போது " என் மேல் சவாரி செஞ்சதை உங்கப்பாகிட்ட சொல்லிடவா " என்பதைப் போல் நந்தி பார்ப்பதாகத் தோன்றும். பார்வையை நந்தி பக்கத்திலிருந்து திருப்பிக் கொள்வேன். அதுமட்டும் அப்பாவுக்கு தெரிந்தால் என்னைக் கொன்றே விடுவார். சாப்பிடுவது தூங்குவதைப் போல தினமும் திருவாசகமும் கந்தசஷ்டி கவசமும் படிக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாகயிருந்தது. அண்ணன் எட்டாம்
|
வகுப்பு போனதிலிருந்து " பள்ளிக்கூடத்தில நெறையா படிக்கச் சொல்றாங்க ” என்று காலையில் புத்தகத்தை தூக்கி உட்காந்து கொள்கிறான். இன்னும் இரண்டு முழுபரீட்சை லீவு முடிந்தால்தான் நான் திருவாசகத்திலிருந்தும் கந்தசஷ்டி கவசத்திலிருந்தும் விடுபட முடியும். ஆனால் தமிழ்ப் பாடத்தில் நான் தான் முதல் மதிப்பெண் வாங்கினேன். திருக்குறளை அப்பா தினமும் தலைகீழாக மனப்பாடம் பண்ண வைத்துவிட்டார். நாங்கள் சாப்பிடும்போதே அப்பாவும் எங்களோடு சேர்ந்து சாப்பிட்டு , வேலைக்கு போகிறவரைப் போல நாங்கள் கிளம்பும்போது அவரும் வெளியே கிளம்பிவிடுவார்.
|
அப்புறம் அனுப்பானடியிலிருக்கிற அத்தனை வீட்டுப் பிரச்னைகளுக்கும் சோனையா கோவிலில் இருக்கும் புங்கைமரத்தடியில் உட்கார்ந்து பஞ்சாயத்து பேச ஆரம்பித்து விடுவார். அந்தக் கூட்டத்தில் இவர் வயதுள்ளவர்கள் கொஞ்ச பேர்தான் இருப்பார்கள் வேலை வெட்டி செய்து ஓய்ந்து போய் வீட்டில் பொழுதைக் கழிக்க முடியாமல் இருக்கும் கிழடுகள் அந்தக் கூட்டத்தில் அதிகமாக இருக்கும். ராத்திரி கூட்டத்தில் வேலைக்குப் போய்விட்டு வீடு திரும்பியிருக்கும் இவர் வயதுக்குக் கீழே உள்ள 554 இளைஞர்களோடு தெப்பக்குளத்துப் படிக்கட்டில் உட்கார்ந்து கதைப்
|
பேசிக்கொண்டிருப்பார். வாரத்திற்கு இரண்டு நாள் இவர் வக்கிலைப் போய் பார்க்கும் நாளில் ஏதோ மிகப்பெரும் பிரச்னை முடிக்கப்படாமல் கெட்டுப்போய் கிடப்பில் கிடக்கிறது என்பதைப் போல ராத்திரி பதினொரு மணிவரை அவசரமாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். அப்பா பேசிப் பேசி ஓய்ந்து கொண்டிருந்தார். பீடி , சிகரெட் , சீட்டு இப்படி எந்த கெட்ட பழக்கமும் இல்லை. நிறையப் பேசுவார். நிறைய டீ சாப்பிடுவார். அதுவும் ஓசி டீ என்ற பேச்சுக்கே இடமில்லை. நான் எப்படிப்பட்ட குடும்பத்து ஆளு ஒருத்தன்கிட்ட ஓசி டீ குடிக்கிறதா என்று குடும்பப் பெருமை பேசி
|
அடுத்தவனுக்க்கு டீ வாங்கித் தருவாரே தவிர அவர் யாரிடமும் ஓசி டீ குடிக்கமாட்டார். பெரியப்பாவிற்குத் தெரியாமல் பெரியம்மா கொடுக்கும் சில்லறைப் பணத்தை வீட்டு மேற்செலவுக்குப் போக மிச்சத்தை அம்மா அப்பாவுக்கு கொடுக்கும். அப்பா வீட்டுக்கு லேட்டாக வரும் ராத்திரிகளில் நாங்கள் முற்றத்தில் பாயை விரித்து வரிசையாகப் படுத்திருப்போம். அப்போதெல்லாம் யாருடையதோ போல அம்மா தன்னுடைய கதையை எங்களிடம் சொல்லும். அம்மாவின் ஜாக்கெட் பின்னை நோண்டியபடி வயிற்றுச் சூட்டின் வெதுவெதுப்பில் படுத்தபடி கதையைக் கேட்டுக் கொண்டிருப்பேன். அம்மாவின்
|
ஜாக்கெட் பின்னை நோண்டும் பழக்கம் வெகு நாட்களாக என்னைவிட்டுப் போகவில்லை. அக்காக்களும் அண்ணனும் என்னை ஓயாமல் கிண்டல் செய்த பின்புதான் அதனைக் கைவிட்டேன். அம்மாவிடம் கதை கேட்டுக்கொண்டே அதற்கு இணையாக கற்பனையிலும் மூழ்கிவிடுவேன். செல்வி அக்கா , சாந்தி அக்கா , சீனி அண்ணன் எல்லோரும் கதையைக் கேட்டுக்கொண்டிருந்தாலும் அம்மா என்னைப் பார்த்துதான் கதையைச் சொல்லிக் கொண்டிருக்கும். " என்னடா செந்திலு கதையை கேக்குறியா ” என்று என் கற்பனையை அறிந்ததுபோல அவ்வப்போது கடிவாளத்தைப் போட்டு கதையைத் தொடர்ந்து சொல்லும். உலகத்தில் மிக
|
சுவாரசியமானதும் நெகிழ்வானதும் எங்கம்மா வாழ்ந்த கதைதான் என்று நினைத்துக்கொள்வேன். வாழ்க்கையைச் சொல்லி தீர்ந்துபோன அம்மா ஒரே கதையை வேறு வேறு வடிவங்களில் மாற்றிச் சொல்லும். ராஜா ராணி கதை சொல்லும்போதும் முதல்ல ராணி சந்தோசமாக இருப்பாள் அப்புறம் ராணியோட வாழ்க்கை அலைபுரண்டு சோகமாயிடும். இல்லையென்றால் கொடுமைப்பட்டு வேலைக்காரியாக இருக்கும் இளவரசி ஏஞ்சலாக மாறிவிடுவாள். அம்மா சொல்லும் எல்லாக் கதைகளும் சந்தோசமும் துக்கமும் சேர்ந்ததாகத்தான் இருக்கும். முன்பு சொன்ன கதையின் ஜாடையில் இன்னொரு கதை இல்லாமல் இருந்தாலும்
|
அம்மாவைத்தான் எல்லாக் கதைகளிலும் கதாநாயகியாக நினைத்துக்கொள்வேன். எங்கள் வீட்டில் வறுமை இருந்தாலும் அம்மாவும் நாங்களும் நண்பர்களைப் போல் விளையாடிக்கொண்டிருந்தோம். எது வாங்கிச் சாப்பிட்டாலும் அம்மாவுக்கும் சேர்த்து ஐந்து 555 பங்காக்கி சாப்பிடுவோம். நான் என்னோட பங்கைச் சீக்கிரம் சாப்பிட்டு விடுவேன். அம்மா எப்போதும் தன் பங்கை கடைசியில்தான் சாப்பிடும். அது எனக்கு கொடுப்பதற்காகத்தான். “ சீக்கிரம் சாப்பிடும்மா. இவன் உன் பங்கை பிடுங்கிக்குவான் " என்று அண்ணன் என் பங்கு இருக்கும் கையை பிடித்துக்கொள்வான். “ சின்ன பையன்
|
அவனுக்கு ஆசையா இருக்கும்ல , இனிமேல் நான் சாப்பிட்டு என்ன ஆகப்போகுது " என்று தன் பங்கில் பாதியை அம்மா கொடுத்துவிடும். எனக்கு விவரம் தெரியத் தெரிய என் பங்கை கடைசியாக சாப்பிட்டேன். திருடன் போலீஸ் விளையாட்டு , தாயம் , ஒளிந்து விளையாடுவது என்று விளையாடித் தீர்க்காத தனது இளமைக் காலத்தையெல்லாம் அம்மா சரிக்குச் சமமாக எங்களோடு பகிர்ந்து கொண்டது. கையில் பணம் புழங்கவில்லை என்றாலும் வீட்டில் இருந்த பல பொருள்கள் நாங்கள் வசதிபடைத்தவர்கள் என்பதை எங்களையறியாமல் எங்களுக்குள் ஞாபகப்படுத்திக்கொண்டே இருந்தது. சுவருக்குள்
|
புதைந்து இருக்கும் மர அலமாரிகள் , நீளமான சமையலறை முற்றத்து பெரிய மரத்தூண்கள் , இப்போது காலியாகக் கிடக்கும் தானிய சேந்தி இன்னும் இன்னும்... சிதிலமடைந்து கரையான் ஏறிக்கிடந்த மரச்சாமான்கள் ஏழ்மையை மீறிய ஒரு கர்வத்தை ஏற்படுத்தியிருந்தது. புங்கைமரத்தடியில் விளையாடும்போது உடன் விளையாடும் சிநேகிதர்கள் சாப்பிடக் கொடுக்கும் பண்டங்களை வாங்க மறுத்து நாங்கள் அறியாத எங்கள் வீட்டின் பழைய செழுமையை அவர்களுக்கு உணர்த்தினோம். ஆனால் இந்துமதி காக்காகடி கடித்துக் கொடுக்கும் தின்பண்டங்களை வாங்காமல் இருக்க முடியவில்லை. எங்கள்
|
வீட்டில் இருக்கும் பழங்காலத்துப் பொருள்களில் எனக்குப் பிடித்தமானது வெண்கல அன்னபட்சி விளக்குதான். பம்பரம் மாதிரியான குடுவை அமைப்பில் இருக்கும் நடுப்பகுதி. கீழ்பகுதியில் இருக்கும் திரிபோட்ட விளக்கு நடுப்பகுதியோடு திருகு போட்டு இணைந்திருக்கும். வெண்கலத்தின் அன்னபட்சி உருவம் செய்யப்பட்டு அது குடுவையின் மேல்பகுதியில் அழகுக்காக பொருத்தப்பட்டிருக்கும். இதுவும் நடுப்பகுதியோடு திருகு போட்டு இணைந்திருக்கும். அன்ன பட்சியையும் , விளக்கையும் நடுப்பகுதியிலிருந்து தனித்தனியே கழற்றி எடுத்துவிடலாம். விளக்குப் பகுதியைத்
|
திருகி எடுத்துக் குடுவையில் எண்ணைய் ஊற்றி , பின் விளக்கை மாட்டினால் , குடுவையிலிருந்து எண்ணைய் வழிந்து விளக்கில் விழும். அன்னப்பட்சிக்கு மேலே கொக்கியை அரை அடி நீளத்திற்கு செயின் போல செய்து முற்றத்துச் சுவரில் மாட்டியிருப்பார்கள். குடுவையில் ஒரு படி எண்ணைய் நிறையுமாம். கார்த்திகை மாதங்களில் நாளெல்லாம் விளக்கு எரிந்து கொண்டிருக்குமாம். எங்களுக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து குடுவை முழுமையாக நிறைந்ததில்லை. விளக்கின் கீழ்ப்பகுதியில் மட்டும் எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றினோம். குடுவை முழுவதும் எண்ணெய் ஊற்றி
|
விளக்கேற்ற வேண்டுமென்று செல்வி அக்காவும் , சாந்தி அக்காவும் தீராத ஆசை கொண்டிருந்தார்கள். 556 வீட்டில் யாரும் இல்லாத நாட்களில் எங்களுக்கு விளையாட ஏதாவது பழங்காலத்துப் பொருள்கள் ஒளிந்து கிடக்கின்றதா என்று வீட்டை நானும் அண்ணனும் சல்லடை போட்டுத் தேடிக்கொண்டிருப்போம். அப்படித்தான் தானிய சேந்திக்குப் போகும் மெச்சு படிக்குக் கீழே தூசி படிந்து கிடந்த பழைய தொட்டில் , துருப்பிடித்த இரும்புச் சாமான்களை வெளியே எடுத்துவிட்டு அங்கே தேடியபோது மரப்பலகை ஒன்று தரையோடு தரையாக சேர்ந்திருந்தது. மரப்பலகையை தனியே எடுத்துப்
|
பார்த்தால் சதுரமான குழி ஒன்று தரைக்கு அடியில் ஓடியது. யாருக்கும் தெரியாத வீட்டின் பாதாள அறையை கண்டுபிடித்துவிட்டதாக நானும் அண்ணனும் குதியாட்டம் போட்டோம். இருண்ட குழி ஆழமாகி உள்ளே இழுத்துக்கொண்டால் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே அப்பா வரும் அரவம் கேட்க எல்லாவற்றையும் பழையபடி மூடிவிட்டோம். ராத்திரி வீட்டில் எல்லோரும் தூங்கிய பின் நானும் அண்ணனும் குசுகுசுவென்று இதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தோம். ஆளரவமற்ற இன்னொருநாள் அண்ணன் பேட்டரிலைட்டை உள்ளே அடிக்க நான் குழிக்குள் இறங்கினேன். அது என்
|
உயரத்திற்கும் கொஞ்சம் குறைவாகவே இருந்தது. அந்த குழிக்குள் ஒரு பழங்காலத்து இரும்பு பெட்டி புதைக்கப்பட்டிருந்தது. அதை முழுவதுமாக துழாவித் தேடினேன். ஒரு பித்தளை செம்பு , குழந்தைக்கு பால் புகட்டும் சங்கு , களிமண்ணில் செய்யப்பட்ட ஏதோ சாமியின் உருவம் தவிர காலியாகத்தான் கிடந்தது பெட்டி. ஏமாற்றம் பொங்க பித்தளைச் செம்பை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியேறினேன். கடகடவென்று செம்புக்குள் ஏதோ சத்தம் வந்தது. செம்பை கவிழ்த்துப் பார்த்தால் பழைய தாயத்து , பழைய நாணயம் , அப்புறம் முடிந்த துணி ஒன்றும் இருந்தது. முடிச்சை அவிழ்த்துப்
|
பார்த்தால் சரஸ்வதி படம் போட்ட ஒரு வெள்ளிக்காசும் ஒரு தங்கக்காசு மின்னிக் கொண்டிருந்தது. ஓடிப்போய் அம்மாவிடம் கொடுத்தோம். எல்லாச் சொத்தும் திரும்பி வந்ததைப் போல அம்மா சந்தோசப்பட்டது. தங்கக்காசும் கிடைத்தபின் எல்லோருக்கும் தெரியும்படியே வீட்டை நோண்ட ஆர்மபித்தோம். அதற்குபின் ஒரு பித்தளைக்காசு கூட எங்கள் கைக்குச் சிக்கவில்லை. ஆனால் அம்மா மறுபடியும் தாத்தாவின் செல்வச் செழிப்பைப் பற்றி கதை சொல்ல அது ஆதாரமாய் அமைந்துவிட்டது. அப்போதெல்லாம் தாத்தாவிடம் பெட்டி பெட்டியாக வெள்ளிக்காசு இருக்குமாம். மாதம் ஒரு முறை பௌர்ணமி
|
வெளிச்சத்தில் வெள்ளிக்காசையெல்லாம் காயப்போடுவாராம். பளீரென்று மின்னும் நிலா வெளிச்சம் பட்டால் வெள்ளி கறுத்துப்போகாமல் பளபளவென்று அப்படியே இருக்குமாம். அம்மா இப்படி கதை சொல்லியே தன்னைத்தானே திருப்திப்படுத்திக்கொண்டது. நல்லா படிக்காமச் சொத்தை நம்பி இருந்ததாலதானே எந்த வேலைக்கும் போக முடியாமப் போச்சு , படிக்காததால கோர்ட்டு கேஸுன்னு ஏமாந்து போயாச்சு. நாங்களாவது படித்து பேங்க் ஆபிஸர் , கலெக்டர் , டாக்டர் என்று பெரிய வேலையில் இருக்க வேண்டுமென்று அப்பா ஆசைப்பட்டார். சர்வாதிகாரியைப் போல வீட்டில் அமர்ந்துகொண்டு எங்களை
|
அட்டம் பிசகவிடாமல் படிக்கச் சொல்லுவார். எப்போதும் புத்தகமும் கையுமாக இருக்க வேண்டும் என்று வெறி கொண்டு அடக்கினார். அக்காக்களை சமையலறை பக்கம் கூட எட்டிப் பார்க்க விடமாட்டார். வீட்டுக்குத் தேவையான தண்ணீரையும் கிணத்திலிருந்து அவரே எடுத்தார். எங்களுக்கு கிடைத்த 557 குறைந்தபட்ச வீட்டு வாடகையிலும் , ஒத்தி கிடைத்த வரன்கட்டை வயலை அம்மா அப்படி இப்படி என்று பணத்தைச் சேர்த்து வைத்து திருப்பி அதை வாரத்திற்கு விட்டதில் கிடைத்த நெல்லும் எங்களின் வருச சாப்பாட்டுக்குச் சரியாகப் போய்விட்டது. சாந்தி அக்கா எம்.எஸ்.சி. முதல்
|
வருசம் படித்துக் கொண்டிருந்தது. அது காலேஜுக்கு போய்க்கொண்டே பிள்ளைகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்தது. சின்ன அக்கா பி.ஏ. மூன்றாம் வருசமும் , சீனி அண்ணன் பி.எஸ்.ஸியும் படித்துக் கொண்டிருந்தார்கள். அப்பா இப்போதெல்லாம் பேச்சையும் டீயையும் குறைத்துக்கொண்டார். குடும்பத்துப் பெருமைகளையெல்லாம் பிள்ளைகளின் படிப்பில் மீட்டெடுத்துவிடலாம் என்று அவர் மனதில் புது நம்பிக்கை விட்டிருந்தது. அக்கா படிப்பிற்குத் தேவையான புத்தகங்களை விலைக்கி வாங்க முடியாதென்பதால் அப்பா மதுரையில் இருக்கும் சென்ட்ரல் நூலகத்திலும் , யுனிவர்சிட்டி
|
நூலகத்திலும் உறுப்பினரானார். அக்காக்கள் , அண்ணன் எழுதிக் கொடுக்கும் புத்தகங்களை பகலெல்லாம் நூலகத்தில் தேடி அலைந்தார். தேவையான பக்கங்களை ஜெராக்ஸ் எடுத்து வைத்துக்கொண்டு அவர்கள் படித்தார்கள். சொத்தில்லாம , வேலைக்கு போகாம பிள்ளைகளப் படிக்க வைச்சிட்டாருப்பாஎன்று ஊர்க்காரர்கள் அப்பாவை பெருமையாகச் சொன்னார்கள். “ வீட்ல கஞ்சிக்கில்ல , அதுல் பிள்ளைகளுக்கு படிப்பு என்ன வேண்டி கிடக்குன்னு " பெரியப்பா பொறுமிக் கொண்டிருந்தார். நான் இப்போது பேண்ட் போட்டு ப்ளஸ் ஒன் போய்க்கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் பெரியப்பா வீட்டுக்குப்
|
பையை எடுத்துப் போவதில்லை. ஆனால் அக்கா கல்லூரியில் ஏதாவது ஃபங்ஷன் என்றால் பெரியம்மா மகள் சுமதி அக்காவிடம் போய் நல்ல பூப் போட்ட சேலை வாங்கி வா என்று அனுப்பி விடுகிறது. “ நல்ல சேலையை குடுடி " என்று பெரியம்மா சொல்வதைக் காதில் வாங்காமல் , சிறிதும் விருப்பமின்றி தன்னிடம் இருக்கும் மிக மோசமான சேலையைத் தூக்கிக் கொடுக்கும் சுமதி அக்கா. அதுவே சாந்தி அக்காவிற்கு சந்தோசமாகத்தான் இருக்கும். எப்போதும் கட்டும் மூன்று சேலையைத் தவிர்த்து , இன்னொரு சேலை கட்டிக்கொண்டு போவதே திருப்தி தந்தது , அக்கா முகம் சந்தோசமாகிவிடும்.
|
அக்காவிற்கு எந்தச் சேலையைக் கட்டினாலும் அழகாக இருப்பது வேறு சுமதி அக்காவிற்கு எரிச்சலாக இருந்தது. படிப்புச் செலவு கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருந்தது. ஆனால் அவருடைய சந்தோசமெல்லாம் மிகப்பக்கத்தில் இருந்தது. இன்னும் ஒன்றிரண்டு வருடங்களில் எல்லாம் சம்பாதிக்கப் போகிறார்கள் என்பதே அவர் வாழ்வதற்கான புது உத்வேகமாக இருந்தது. பிள்ளைகள் படிப்பை முடிக்கும் நேரத்தில் காரியத்தை கெடுத்து விடக்கூடாதென்று அவர் ஒரு போதும் செய்யத் துணியாத காரியத்தைச் செய்தார். ஏற்கனவே நாங்கள் வாடகைக்கு விட்டிருந்த தெற்கு தெரு வீட்டில்
|
இருந்து கொண்டு இந்த வீட்டை வாடகைக்கு விடலாமென்று அம்மா சொன்ன போதெல்லாம் ,எங்கப்பா வாழ்ந்த பூர்வீக வீட்ல வேறெவனும் காலடி எடுத்து வைக்கிறதா ? என் உயிரே போனாலும் அதைச் செய்யமாட்டேன்என்றவர் எங்கள் கோவில் வீட்டு முற்றத்தை 558 வாடகைக்கு விட முடிவு செய்தார். இரண்டு சமையலறையைக் கட்டி இரண்டு குடும்பங்களை வாடகைக்கு அமர்த்தினார். ஒவ்வொரு வீட்டுக்கும் நானுறு , நானுறு என்று எந்நூறு கிடைத்தது. வீட்டின் நிதிநிலைமைக்கு அது உதவியாகத்தானிருந்தது. ஆனால் நாங்கள் எங்கள் முற்றத்தை இழந்திருந்தோம். அதற்குப் பின் எங்கள் முற்றத்து
|
விளையாட்டுகளும் பேச்சுக்களும் அம்மா சொல்லும் கதைகளும் எங்களை விட்டுப் போயிருந்தது. தெற்கு முற்றத்தினைத் தாண்டியிருக்கும் பகுதியில் நாங்கள் குடியிருந்தோம். செல்வி அக்காவும் சாந்தி அக்காவும் அறையினுள் போய் ஓயாமல் படித்துக்கொண்டிருந்தார்கள். அண்ணன் வராண்டாவில் உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்தான். எல்லோரும் தனித்தனி தீவுகளாக படிப்பில் மூழ்கிவிட்டார்கள். நான் நன்றாகப் படிக்கவில்லை உருப்படாமல் போகப் போகிறேன் என்று அப்பா வழக்கம்போல என்னைத் திட்டிக் கொண்டிருந்தார். வாடகைக்கு விடப்பட்ட மேற்கு பக்க முற்றத்தில் ஒரு
|
கணவன் , மனைவி அவர்களின் குழந்தை மூவரும் குடியிருந்தனர். ராத்திரியில் குழந்தையின் அழுகை முற்றம் முழுதும் நிரம்பி கனத்துக் கிடந்தது. பகல் முழுக்க முற்றத்தில் எப்போதும் ஆட்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள். அப்பளம் போடும் சிறுகம்பெனிக்கு கிழக்கு முற்றத்தினை வாடகைக்கு விட்டிருந்தோம். சாயம் மங்கிய சேலையும் உடைந்து கொண்டிருக்கும் கண்ணாடி வளையல்களை அணிந்திருந்த பெண்களும் , சேலை கட்டும் பருவம் வந்தும் தாவணி உடுத்தியிருந்த பெண்களும் செல்வி அக்காவையும் சாந்தி அக்காவையும் ஞாபகமூட்டி கலக்கமடையச் செய்தார்கள். அவர்களும்
|
எங்களைப் போல் சிரிப்பை மறந்தவர்களாகவோ அல்லது முற்றத்தை இழந்தவர்களாகவோ இருக்கலாம். ஏக்கங்களின் பெருமூச்சுகளை சுமந்திருக்கும் முற்றத்தினை நான் முழுவதுமாக துறக்கத் தொடங்கினேன். முற்றத்து ஓடு நனைந்து கிடக்கும் ஐப்பசி மாத மழைக்காலத்தில் , என்னோடு எப்போதும் சண்டைபோடும் இந்துமதியை அவங்க மாமாவிற்கு கல்யாணம் பண்ணிக்கொடுத்தார்கள். அவளும் நானும் ஒரே வயதில் இருந்தோம். அவள் கல்யாணம் பண்ணிப்போனதும் நான் என்னை ஒரு இளைஞனைப் போல உணர்ந்தேன். எனக்கான காதலியை நான் கண்டுபிடிக்கவில்லை என்றாலும் காதல் உணர்வு மனதிற்குள்
|
துருத்திக்கொண்டு நின்றது. வறுமையை மீறி ஒரு சந்தோசம் புதிதாய் வேர் கொண்டிருந்தது. தண்ணீரில்லாமல் வற்றிக் கிடக்கும் காலங்களில் நண்பர்களோடு சேர்ந்து தெப்பக்குளத்திற்குள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டும் , தண்ணீர் நிறைந்திருக்கும் காலங்களில் படிக்கட்டில் உட்கார்ந்து கதை பேசிக்கொண்டும் இருந்தபோது எங்கள் வீட்டுக்கு ஒரு சாம்பல் பூனை வந்தது. எங்கள் பக்கத்து வீட்டுக்கு குடிவந்திருந்த சாம்வேல் பாதிரியார் வீட்டு பூனைதான் அது. சாயங்கால வேலையில் ஜெபக் கூட்டம் நடந்தது அந்த வீட்டில். ஜெபக்கூட்டம் நடக்கும் போது உருகி உருகி
|
மன்னிப்பு கேட்கும் வயிறு கனத்த மனிதரின் கால்களுக்கிடையே பூனை ஓடி அவரை 559 ரத்தம் பரிய பிராண்டி விட்டது. பாதிரியாருக்கு கோபம் பொத்துக்கொண்டுவர சாம்பல் பூனையை கையிலிருந்த ஜெபக்கட்டையால் அடித்து விலகி ஓடச் செய்தார். பூனை பெருங்கத்தலாக தன் எதிர்ப்பை தெரிவித்துவிட்டு எங்கள் வீட்டு மதில்களில் நடக்க ஆரம்பித்தது. பாதிரியாரின் ஜெபக்கூட்டதிலிருந்து தப்பி வந்த பூனைக்கு அப்பாவின் கந்தசஷ்டி கவசம் பாடாய்படுத்தியது. முற்றத்தின் ஆள் நடமாட்டம் பூனைக்கு மிகவும் வேதனையைத் தந்து சுதந்திரமற்ற ஒரு இருப்பிடத்தில்
|
அல்லாடிக்கொண்டிருந்தது. வீட்டில் கிடந்த சிதிலமடைந்த பொருள்களால் விடு பூச்சி பல்லி பாம்பு பூரான் எலிகளின் வசிப்பிடமாகிப் போனது. முற்றத்தில் அப்பளக் கம்பெனிக்காரர்கள் தினம் ஒரு பாம்பை அடித்துக் கொன்றார்கள். நான் படுத்திருந்த பாய்க்கு கீழே பாம்பை பார்த்தபின் வீடெல்லாம் பாம்பாகி எங்கள் காலடியில் ஊர்வதாகத் தோன்றியது. வெளியாட்களை வீட்டுக்கு குடிவைத்து வீடு சுத்தமில்லாமல் போனது சாமிக்குப் பிடிக்காமல் இப்படி பாம்பாக வீட்டில் நெளிகிறது என்று , அப்பா முற்றத்தில் குடியேறிய வாடகைக்காரர்களை வெளியேற்றினார். வீட்டில்
|
தேவையில்லாமல் கிடந்த பொருள்களையெல்லாம் தூக்கி வீசியெறிந்தார். வீட்டைச் சுத்தம் செய்யும்போது இரண்டு பாம்புகள் அப்பாவின் கைக்குச் சிக்காமல் கோவில் பக்கம் ஊர்ந்து ஒளிந்துகொண்டது. எங்கள் முற்றம் திரும்ப கிடைத்தது. ஆனால் அதில் பழைய சந்தோசம் இல்லை. அம்மா கதை சொல்வதை நிறுத்திவிட்டது. முன்புபோல் முற்றத்தில் பாய்விரித்து வரிசையாக படுத்துறங்குவதில்லை. அக்காக்கள் கல்லூரிப் படிப்பினை முடித்து விட்டு உள் அறையே கதியென்று ஏதாவது கவர்மெண்ட் பரிட்சைக்கு படித்துக்கொண்டிருந்தார்கள். நானும் கல்லூரியில் முதல் வருடம்
|
சேர்ந்துவிட்டாலும் இன்னும் மனதளவில் அன்பைத் தேடும் சிறுவனாகவே இருந்தேன். வீட்டில் எல்லோரும் என்னை ஒரு இளைஞனைப் போலவே நடத்தினார்கள். அப்பா இப்போது எதற்காகவும் கை ஓங்குவதில்லை. மடியில் சாய்த்துக்கொள்ளும் அம்மாவின் ஸ்பரிசத்தை இழந்தேன். எல்லோரும் என்னிலிருந்து தூரமாகிப் போனார்கள். பிடி நழுவிப்போன அம்மாவின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டேன். சமைக்கும்போதெல்லாம் அம்மாவுக்கு உதவிசெய்து சிநேகிதத்தை வளர்த்துக்கொண்டிருந்தேன். அம்மாவின் பார்வையில் படவென்றே ஓயாமல் தடுக்கி தடுக்கி விழுந்தேன். நான் ஒவ்வொரு முறையும் தடுக்கி
|
விழப்போகும் வேளையில்டேய் செந்திலு பாத்துடா என்று அம்மா பதறித் துடிக்கும்போது அம்மாவிற்கு என் மேல்தான் அதிக பாசம் என்று நினைத்துக்கொள்வேன். ஒரு நாளும் அம்மாவைவிட்டு பிரிந்திருக்க முடியாது என்று தோன்றியது.ஏண்டா எப்பப்பாரு அம்மாவை பயமுறுத்துறஎன்று சீனி அண்ணன் என்னைத் திட்டியது. அண்ணனும் என்னைப் போலவே அம்மாவின் மேல் யாரும் அறியாத தனிப் பிரியத்தை வைத்திருந்தது. தினம் தினம் தொடரும் தனது பால்யகால கனவினை அம்மா மறந்துவிட்டது. மகள்களின் திருமணத்தைப் பற்றி யோசிக்கும் போது பெருமலையைத் தலையில் தூக்கி வைத்திருக்கும்
|
சுமையுடன் மருகிப் போனது. சாந்தி அக்காவிற்கு மாப்பிள்ளை பார்த்தார்கள். மாப்பிள்ளை நல்ல வேலையில் இருந்தார். ஓரளவுக்கு வசதியும் இருந்தது. அக்கா படித்திருப்பதால் பத்து பவுன் நகை போட்டால் போதும் என்றார்கள். வீட்டில் ஒரு பொட்டுத் தங்கமில்லை. இந்தக் கல்யாணம் 560 நடக்குமென்று யாருக்குமே நம்பிக்கையில்லை. சாந்தி அக்கா மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தது. கட்டிக் கொள்வதற்கு நல்ல சேலைகூட இல்லை அப்புறம் நகைக்கு எங்கே போவது. இப்போது அம்மா பெரியப்பா வீட்டிற்குப் போனது. நகையோடு திரும்பி வந்து சாந்தி அக்கா கழுத்தில்
|
பத்துபவுன் பெருமானமுள்ள நகையும் மீதி நகையை செல்வி அக்கா கழுத்திலும் போட்டது. பெரியப்பாவிற்கு கோவில் கட்டி கும்பிடலாம் என்று செல்வி அக்காவும் நானும் பேசிக் கொண்டோம். எல்லாம் தெரிந்ததைப் போல சீனி அண்ணன் பேசாமல் இருந்தது. என்னைவிட அண்ணனிடம்தான் அம்மா இன்னும் ரகசியப் பகிர்வினை கொண்டிருந்தது. அம்மா வாய்திறந்து நம்மளோட நகைதாண்டா " என்றது. ஒன்றும் புரியாமல் அம்மாவையே பார்த்துக்கொண்டிருந்தேன். “ நம்ம சொத்து கோர்ட்டு கேஸுன்னு போயிட்டிருந்தப்ப பெரியப்பா ஜவுளிக்கடையிலும் பெருத்த நஷ்டமா போச்சு. தன்னோட நகைகளை குடுத்தும்
|
பணம் பத்தலன்னு அக்கா எங்கிட்ட வந்து நகையை கொடு தொழில் விருத்தியானதும் திருப்பி தந்திர்றேன்னு கேட்டுச்சு. நம்ம வீட்லயும் இருக்கிற பொருளெல்லாம் அழிஞ்சுகிட்டே போகுது அதாவது மிஞ்சட்டுமேன்னுதான் அதை கணக்குல வைக்காம விட்டுட்டேன். பெரியப்பா நகையை திருப்பி குடுக்கிறேனு சொன்னப்பல்லாம் வேணான்னுட்டேன். அதுக்கு வட்டி மாதிரிதான் தினம் தினம் சாப்பாட்டுக்கு அரிசி கொடுத்தாங்க ” என்றதும் எனக்கு கண்ணீர் மிதந்து கொண்டு அம்மாவின் மேல் கோபமாக வந்தது. ஒவ்வொரு நாளும் ஒரு பிச்சைக்காரனைப் போல அவங்க வீட்டு வாசற்படியில் வெட்கம்
|
பிய்த்து தின்னக் கூனிக் குறுகி நின்று அரிசியை வாங்கி வந்திருக்கிறேன். அதுவும் பெரியப்பா பையனுடன் கூட விளையாடும்போது நான் ஜெயித்தாலும் அவனுக்கு விட்டுக் கொடுக்க வேண்டியிருந்தது. இல்லையென்றால்நாளைக்கு எங்க வீட்டுக்கு அரிசி வாங்க வாடி எங்கப்பாகிட்ட சொல்லிக் குடுக்க விடாம செய்யிறேன்என்பான். அம்மா என்னைப் பழிவாங்கிவிட்டதாக மொட்டை மாடியில் தனிமையில் அழுதுகிடந்தேன்.டேய் இதைப் போய் பெரிய விசயமா நெனைச்சுக்கிட்டு என்று எல்லோரும் என்னை சமாதானம் செய்தார்கள். அம்மாவைத் தவிர யாரும் என் வலி அறியாதவர்களாக இருந்தார்கள்.
|
அம்மா மட்டும் என் கைகளை பிடித்துக் கெஞ்சியது. “ இது சாந்தி அக்காவிற்கு கல்யாணம் முடிந்து இரண்டு மூன்று மாதங்களிலேயே செல்வி அக்காவிற்கு கல்யாணம் முடிந்தது. அப்பா ஒத்திக்கு கிடந்த தெற்குத் தெரு வீட்டை விற்று கல்யாணச் செலவுக்கு பயன்படுத்திக்கொண்டார். அக்கா பற்றிய என் கல்யாணக் கனவில் வந்தது போல அப்பா நடந்துகொள்ளவில்லை. எல்லா வேலையும் உற்சாகமாக அவரே செய்து முடித்தார். அக்காக்களை வீட்டில் இருக்காமல் வேலைக்கு போகச் சொன்னார். சீனி அண்ணனுக்கு சிவகங்கையில் புரொஃபஸர் வேலை கிடைத்தது. நானும் அம்மாவும் அப்பாவும் வீட்டில்
|
தனித்திருந்தோம். எங்களுக்கிடையேயான பேச்சு வார்த்தை குறைந்து போயிருந்தது. மசக்கையில் மயங்கிக் கொண்டிருந்த சாம்பல் பூனை மதிலிலிருந்து இறங்கி மெச்சில் தானிய அறையில் ஒதுங்கிக் கொண்டது. ஐந்து பூனைக் குட்டிகளை பிரசவித்தது சாம்பல் பூனை. அம்மா தானிய அறையில் ஒரு வட்டியில் பாலை ஊற்றி வைத்தது. சாம்பல் பூனை குட்டிப்பூனையை வாயில் கவ்வி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லும் அழகைப் பார்த்து அம்மா மகிழ்ச்சி கொண்டது. சாம்பல் பூனை பாதிரியார் வீட்டை முழுவதுமாக மறந்து அதன் குட்டிகளுடன் 561 எங்கள் முற்றத்து
|
வெளியில் நடந்து திரிந்தது. பூனையின் பொருட்டு நானும் அம்மாவும் பழையபடி சிநேகிதமானோம். சாம்பல் பூனையையும் அதன் குட்டிகளையும் பற்றி வாய் ஓயாது அம்மா பேசிக் கொண்டிருந்தது. இரண்டு பூனைகளை நாய் கவ்விக்கொண்டு போனதும் சாம்பல் பூனை வெறிகொண்டு , என்ன செய்தும் வீட்டில் பெருகிக்கிடந்த எலிகளை துப்புரவாக வீட்டிலிருந்து அடித்துத் துரத்தியது. கறுப்பி , சிவப்பி , பொன்னி , என்று ஒவ்வொரு பூனைக்கும் ஒரு பெயர் வைத்து நானும் அம்மாவும் கூப்பிட்டோம். சாம்பல் பூனையை மட்டும் பெரிய பூனை என்றோம். “ டேய் இந்த கறுப்பிக்கு எவ்வளவு திமிரு
|
பாருடா நான் வச்ச சோறை சாப்பிடாம அப்படியே வச்சிருக்கு , கறுப்பியும் சிவப்பியும் சண்டை போட்டுச்சுடா... ” தினமும் நான் கல்லூரியிலிருந்து திரும்பும்போது இப்படி பூனைகளைப் பற்றிய கதைகளை மட்டுமே சொல்லிக்கொண்டிருந்தது அம்மா. நானும் பதிலுக்கு “ இந்த கறுப்பி அப்படியா செஞ்சுச்சு ? நான் கவனிச்சிக்கிறேன் " என்பேன். பொன்னி யாருக்கும் தெரியாமல் காணாமல் போன அன்று அம்மா சாப்பிடாமல் தூங்கியது. பிள்ளைப் பாசம் போல பூனை பாசமும் அம்மாவிற்கு ஒட்டிக் கொண்டது. சேட்டை செய்யும் சிறுவனை கண்ணெதிரிலேயே வைத்திருப்பது போல கறுப்பி
|
பின்னாடியும் சிவப்பி பின்னாடியும் அம்மா அலைந்துகொண்டிருந்தது. எங்கம்மாவின் குழந்தைகளைப் போல கறுப்பியும் , சிவப்பியும் அம்மா மடியில் படுத்துறங்கியது. கறுப்பி பாலை மட்டும் விரும்பி சாப்பிடும். மற்ற பொருள்களை மோந்து கூட பார்க்காது. சிவப்பி எது கொடுத்தாலும் சாப்பிட்டுக் கொள்ளும். சாந்தி அக்கா பிரசவத்துக்கு அம்மா போயிருந்த நேரத்தில் கறுப்பியும் ஒரு நாள் காணாமல் போனாள். அக்கா வீட்டில் இருந்த அம்மாவிடம் இதை நான் தெரியப்படுத்தவில்லை. வீட்டுக்குத் திரும்பிய அம்மா நான் கறுப்பிக்கு பால் ஊற்றாததால்தான் அது வீட்டைவிட்டு
|
ஓடிப்போனது என்று என்மேல் குறைப்பட்டுக்கொண்டது. தான் ஆசைப்படும் அனைத்தும் இப்படி பாதியிலேயே முறிந்து போகும் துரதிருஷ்டத்தை நினைத்துப் பெருங் கவலை கொண்டது அம்மா. அண்ணன் தனியாகச் சமைக்க சாப்பிடக் கஷ்டப்படுகிறது என்று அம்மா அண்ணனோடு சிவகங்கையில் ஒரு வீடெடுத்து தங்கியது. சிவப்பியை மட்டும் தன்னோடு எடுத்துப் போகலாம் என்ற ஆசை இருந்தாலும் பெரிய பூனை தனியாகக் கஷ்டப்படுமென்று அதை விட்டுப் போனது. அப்பா எனக்குத் துணையாக வீட்டில் இருந்தார். நானும் அப்பாவும் சமைத்துச் சாப்பிட்டோம். சிவப்பி ஒரு குழந்தையின் சிணுங்கலைப் போல
|
கத்திக் கொண்டு வீடெங்கு அம்மாவை தேடியலைந்து துரும்பாகிப் போனது. கடைசி செமஸ்டர் முடிந்ததும் சிவகங்கைக்கு உடனே வரச்சொல்லி அம்மாவும் அண்ணனும் கடிதம் எழுதினார்கள்.சிவப்பி எப்படியிருக்குஎன்று அம்மா விசாரித்து எழுதிய கடிதத்திற்கு , தெருவில் அடிபட்டு சிவப்பி செத்துப்போனது என்று சொல்லாமல் சிவப்பியும் எங்கேயோ போய்க் காணாமல் போனது என்றேன். அதற்குப் பின் வந்த கடிதங்களில் மீதமிருந்த பெரிய பூனையைப் பற்றி ஒரு வார்த்தையைக் கூட அம்மா குறிப்பிடவில்லை. 562 எலிகளை வேட்டையாடி ஓய்ந்த பெரிய பூனை தானிய சேந்தியில் செத்து கிடந்தது
|
பற்றியும் அதை புதைத்த அன்று என் மேல் வீசிய பூனை வாசனைப் பற்றியும் அம்மாவிடம் சொல்லவில்லை. முற்றத்து வீட்டை அடைத்து போட்டுவிட்டு நானும் அப்பாவும் சிவகங்கைக்கு போன பின்பும் அம்மா " பெரிய பூனை எப்படியிருக்குஎன்று கேட்கவில்லை. அதற்கு மேல் பூனையின் தொடர்பாக எந்த கெட்ட செய்தியையும் அம்மா அறிய விரும்பாமல் இருந்தது. அப்பாதான் போகிற போக்கில்நம்ம பெரிய பூனையும் செத்து போச்சில்லஎன்றார். அம்மா எதுவுமே காதில் விழாதது மாதிரி நடந்து கொண்டது. நானும் , அம்மாவும் , செல்வி அக்காவும் , சாந்தி அக்காவும் , சீனி அண்ணனும் சேர்ந்து
|
படுத்துறங்கிய முற்றம் இன்று பூனைகளும் இல்லாமல் யாருமற்று வெறுமையாகி தனித்துக் கிடக்கிறது என்பதை அம்மாவுக்கு எப்படிச் சொல்வது. 563 பச்சைக்கனவு - லா ச ரா முதுகு பச்சையாய்க் கன்றிப் போகக் காயும் வெய்யிலில் முற்றத்தில் உட்கார்ந்துகொண்டு நேற்றிரவு கண்ட கனவை மறுபடியும் நினைவில் எழுப்ப முயன்றான். கனவற்ற தூக்கமே என்றுமில்லை. எனினும் விடிந்ததும் அக்கனவுகள் மறந்துவிடும். ஆயினும் நேற்றிரவு கண்ட கனவு அப்படியல்ல. பச்சைக் கனவு. உடல் மேல் உரோமம் அடர்ந்தது போன்று , பசும் புற்றரை போர்த்து நின்ற நான்கு மண் குன்றுகள். அவை
|
நடுவில் தாமரை இலைகளும் கொடிகளும் நெருங்கிப் படர்ந்த ஒரு குளம் , சில்லிட்ட தண்ணீரில் காலை நனைத்துக் கொண்டு அண்ணாந்து படுத்திருந்தான். கைக்கெட்டிய தூரத்தில் பச்சைக் கத்தாழையும் அதன் பக்கத்தில் சப்பாத்திப் புதரும் , மேல் , ஒரு பச்சை வண்டு ரீங்காரித்துக் கொண்டே வந்து மோதிற்று... “ ராமா ராமா ராமா , இன்னிக்கென்ன உங்களுக்கு ? இப்போத்தான் கூடத்தில் உட்கார வைத்துவிட்டுப் போனேன். மறுபடியும் வெய்யிலிலே குந்திக் கொண்டிருக்கிறீர்களே ! உங்களுக்கென்ன நிலாக்காயறதா ? " " நிலா " என்றதும் மற்றும் ஒரு நினைவு எழுந்தது. நடு
|
நிலவில் வாசலில் கயிற்றுக் கட்டிலில் காத்துக்கொண்டு படுத்திருக்கையில் , காத்திருந்த கைப்பிடி அவன் கைமேல் விழுவதும் , தெருவின் திருப்பத்தில் நான்கு மண் குன்றுகளின் நடுவில் தேங்கிய குளத்திற்கு அழைத்துச் சென்ற எத்தனையோ முறைகளும் , பாதத்தினடியில் தெருவின் பொடி மண் பதிவதும் , பச்சையாடை காற்றில்படபடஎன்று அடித்துக்கொண்டு அவன்மேல் மோதுவதும் இப்பொழுது போலிருந்தது. " நிலவு பச்சைதானே ? " " பச்சையா ? யார் சொன்னா வெண்ணிலாயில்லையோ ? " * முழு வெள்ளையா ? " “ சுண்ணாம்பு வெள்ளையென்று சொல்ல முடியுமா ? ஒரு தினுசான வெண்பச்சை... "
|
" ஆ , அப்படிச் சொல்லு... " 564 அது வேண்டுமானால் வெண்பச்சையாகயிருக்கட்டும். ஆனால் அவன் அதை முழுப் பச்சையாய்ப் பாவிக்கச் சற்று இடங்கொடுத்தாலும் போதும். கசக்கிப் பிழிந்த இலைச்சாறு போல் , நிலவு குன்றுகளின் மீதும் , புற்றரை மீதும் , தாமரை வாவியின் மேலும் பச்சையோடு பச்சையாய் வழிவதாக நினைத்துக்கொள்வதில் ஒரு திருப்தி , அந்த நினைவில் சற்று நேரம் திளைத்துக் கொண்டிருந்துவிட்டு , " வெய்யில் எப்படி இருக்கிறது ? ” என்று கேட்டான். “ ஐயையோ , இன்னிக்கு ஏன் ஒரு தினுசாயிருக்கேள் ? வெய்யில் வெளுப்பாய்த்தானிருக்கும். உள்ளே
|
வாங்க... " " முழு வெளுப்பா ? " முழு வெளுப்பு.... " ஆம் , அவனுக்கு நினைவு தெரிந்தவரைகூட வெய்யில் வெளுப்புத்தான். அத்துடன் தகிப்பும்கூட. வெய்யிலும் பச்சையாயிருந்தால் ! சற்று நேரம் பொறுத்து அவன் எண்ணத்தை எதிரொலிப்பது போன்று , அவன் மனைவி கண்ணைப் பலமாய்ச் சிமிட்டிக் கொண்டு , " வெய்யில் பச்சையாயிருக்கும் வேளைகூட உண்டு.... " என்றாள். அவனுக்கு உள்ளூர அவாத் துடித்தது. வெய்யில் பச்சையாயிருப்பதில் தன் தலையையே நம்பியிருப்பது போல். 565 அவன் மனைவி கண்ணைச் சிமிட்டும் சிமிட்டலில் , ரப்பைகள் எகிறிவிடும்போல் துடித்தன. "
|
பச்சையான பச்சை ! இலைப்பச்சை ! நேற்று சாயங்காலந்தான் உங்கள் மச்சினன் , பதினாலு ரூபாய் போட்டு வாங்கி வந்தான் ; இதைப் போட்டுண்டு பாருங்கள் , " “ என்ன இது ? " " போட்டுக்கொள்ளுங்களேன் சொல்றேன் வெய்யிலுக்கு குளுகுளுவென்று பச்சைக் கண்ணாடி. எல்லாம் பச்சையாய்த் தெரியறதோ ? " அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை. எப்பொழுதும் போல் அந்தகாரமாய்த்தானிருந்தது. " அட ! உங்களுக்கு ஜோராயிருக்கே ! " " என்ன ? " “ மூக்குக் கண்ணாடி போட்டுக் கொண்டால் உங்களைக் குருடு என்று யார் சொல்லுவா ? " அவ்வார்த்தை சுருக்கென்று தைத்தது. உள்லதைச்
|
சொன்னாலும் , எவ்வளவு தூரம் தன்னைக் கேலி பண்ணுகிறாள் என்று புரியவில்லை. கண்ணாடியைக் கழற்றி வீசியெறிந்தான். அது கட்டாந்தரையில் பட்டுத் தெறித்து உடையும் சத்தம் இனிமையாய் ஒலித்தது. " ஐயோ பதினாலு ரூபாய் ! என்னத்தைச் சொல்லி விட்டேன் இவ்வளவு ஆத்திரம் பொங்க ! இந்த வயசிலே உங்களுக்கு இத்தனை ஆங்காரம் வேண்டாம் ! * எந்த வயதிலே ? வயதுண்டோ தனக்கு ? அவள் நெறித்த சொடுக்குகள் விரல்களினின்று சொடசொடவென்று உதிர்ந்தன. “ தன்னாலே ஒண்ணும் ஆகாவிட்டாலும் கோபம் மாத்திரம் மூக்கைப் பொத்துக்கொண்டு வருகிறது ! காலையிலே கண்ணைத் திறந்தால்
|
ராத்திரி கண் 566 மூடறவரை , சகலத்துக்கும் கை பிடித்தே கொண்டு போய் விட வேண்டியிருக்கிறது. இத்தனை சிசுருஷையின் நடுவில் இத்தனையும் போறாது போல் வேளையில் பாதி நேரம் ஊமை , வாயைத் திறந்தால் நிலா பச்சையாயிருக்கா ? வெயில் பச்சையாயிருக்கான்னு தத்துப்பித்தென்று கைக்குழந்தை மாதிரி கேள்வி... " அவள் பழிப்பதெல்லாம் அவன் காதில் விழுந்ததா என்று சந்தேகம். அவன் நினைவு சட்டென்று இன்னொரு எண்ணத்தைத் தொட்டு அதில் முனைந்துவிட்டது. ஊமையென்றதும் நினைவு , நேற்றிரவு கண்ட கனவில் ஊசிபோல் மறுபடியும் ஏறியது. மேற்கூறியவாறு , அவனாய்க்
|
கற்பித்துக் கொண்ட பட்டை வீறும் பச்சை வெய்யிலில் பசும்புற்றரையில் நீட்டிய கால் தாமரைக் குளத்தில் சில் தண்ணீரில் நனைய அண்ணாந்து படுத்திருந்தான். அவன் பக்கத்தில் அவன் உறுப்பு உறுப்பாய்த் தொட்டு உள்ளந்திரிபு அற உணர்ந்தோர் உருவம் படுத்திருந்தது. கட்டவிழ்ந்து சரிந்த பசுங் கூந்தலிலிருந்து முகத்தில் அலைமோதும் பிரி இது. அவனையே அள்ளி உண்ணும் , பசுமை நிறைந்து , தாமரைக் குளம் போன்ற கண்கள் இவை. நீங்காத மௌனம் நிறைந்து அம்மௌனத்திலேயே முழுகிப்போன வாய் இது. அகன்ற மனதில் கிளர்ந்த ஆசை , வெளியும் வர இயலாது , உள்ளும் அடங்க
|
இயலாது , முண்டிய மார்பு இது. பச்சை மேலாக்கினடியில் பட்டுப்போன்ற வயிறு இது. அவர்களிருவரின் ஆயுளின் இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே மூச்சில் அளந்துவிட முயலுவது போன்ற ஆலிங்கனத்தின் அவஸ்தை இது. …. " பச்சைக்குழந்தை ? பச்சைக்குழந்தை !!... " அவன் மனைவி அவன் கையைக் கரகரவென்று பிடித்திழுத்து , கூடத்தின் ஊஞ்சலில் உட்கார வைத்துவிட்டு உள்ளே சென்றாள். அப்படியே அவள் மெதுவாய் படுக்கையாய்ச் சாய்த்து , அவனை 567 உட்கார வைத்து அதிர்ச்சியில் ஆடும் ஊஞ்சலுடன் மனதையும் அசையவிட்டுக்கொண்டு , பச்சையைப் பற்றி எடுத்த எண்ணத்தைத் தொடர
|
முயன்றான். அவன் கண்ணிருக்கையில் கடைசியாய்க் கண்ட நிறம் பச்சை. அக்காரணம் பற்றிய அந்த வர்ணம் அவனுக்குப் பிடித்த வர்ணமாய் , மனதைக் கெட்டியாய்ப் பற்றிக் கொண்டு விட்டது. அக்குன்றுகளிடையில் குளக்கரையில் அவன் பச்சையைப் பெற்ற பார்வையிழந்ததை நினைத்தான். அப்பொழுது என்ன வயதிருக்கும் ? பத்திருக்குமா ? அவ்வளவுதான். மல்லாந்து படுத்தவண்ணம் சூரியனைச் சற்றுநேரம் நோக்கிக் கொண்டிருந்துவிட்டு பிறகு சுற்றும் முற்றும் இருப்பதைப் பச்சையாய்க் காணக் காண அவனுக்கு வியப்பாயிருக்கும். சூரிய ஜோதியில் கண்ணைத் திறந்து காண்பித்துவிட்டு
|
புத்தகத்தை எடுத்துப் பிரித்தால் எழுத்துக்கள் பச்சைப் பச்சையாய் குதிக்கும். பொடிமணல் பச்சைப் பளீரடிக்கும். அது அப்பொழுது அவனுக்கு ஆனந்தமாயிருந்தது. யாருமறியா ஒரு புது விளையாட்டைத் தான் கண்டுபிடித்ததாய் நினைத்துக்கொண்டு விட்டான். அதைத் தானே தன்னந்தனியாய் அனுபவித்தான். அப்பொழுதுதான் ஒரு மாதத்திற்கு முன் தாயை இழந்த துக்கத்தைச் சற்றேனும் மறக்க இவ்விளையாட்டு அவனுக்கு ஆறுதலாயிருந்தது. ஆயினும் அவன் கண்டு பிடித்த மூன்றாம் நாளே , மாவிளையாட்டு தானே முடிவடைந்தது. சூர்ய கோளம் தாம்பாளம் போல் சுழன்று கொண்டே விட்டு விட்டு
|
மின்னுவதை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருக்கையில் , கண் திடீரென்று இருண்டு பார்வை இழந்தது. சப்பாத்தியிலும் கத்தாழையிலும் விழுந்து எழுந்து தட்டுத்தடுமாறி உடலெல்லாம் முள்ளாய் அழுது கொண்டே வீடு வந்து சேர்ந்தது. இன்னமும் நினைவிருக்கிறது. தலைவாழை இலையில் விளக்கெண்ணெயைத் தடவி அவனை அதில் வளர விட்டிருக்கையில் , அப்பா மண்டையிலடித்துக் கொண்டே கூடத்தில் முன்னும்பின்னுமாக உலாவுவது ஞாபகமிருக்கிறது , “ மார்க்கடம் - மார்க்கடம் ! உன்னைப் பெற்றாளே உன் தாயும் ! " என்னென்ன வைத்தியமோ பண்ணியும் பார்வை மீளவில்லை. ஏற்கனவே
|
கண்ணில் கோளாறு இருந்திருக்கிறது. இனியொன்றும் இயலாது என்று பட்டணத்து வைத்தியனும் கைவிட்டுவிட்டான். செயலற்ற விழிகளைவெடுத்தவண்ணம் அவன் கூடத்துத் தூணில் சாய்ந்து கொண்டிருக்கையில் , அப்பா மண்டையில் மறுபடியும் திரும்பத் திரும்ப அடித்துக் கொண்டார். " நன்னா வந்து சேர்ந்ததையா நமக்கென்று ; என்ன பண்ணினாய் ? " " சூரியனைப் பார்த்துக் கொண்டிருந்தேன் ! " நாக்கைப் பழிக்கிறார் - “ வரா ஆத்திரத்தில் உன்னை அப்படியே தூக்கிச் சுவரில் அறைந்துவிடலாம் போலிருக்கிறது. உனக்கென்று எல்லாம் தேடி வருகிறதே ! சூரியனைப் பார்க்கிற 568
|
விளையாட்டு யார் சொல்லிக் கொடுத்தா , நம்ம சம்பந்திக்காரன்தானே ! பெண்ணைத் தள்ளி வைச்சோம் என்கிற வயிற்றெரிச்சலில் என்ன வேணுமானாலும் செய்வான் அவன் , மாப்பிள்ளையும் சரியான பித்துக்கொள்ளி - சொல்லு - நிஜத்தைச் சொல்லு - குட்டிச்சுவரே ! என்ன பாவத்தைப் பண்ணினேனோ ! " பாபம் பச்சையாயிருக்காதே ? பார்வையிழந்து முதல் பச்சையுடன் புழுங்கிப் புழுங்கி அவனுக்கே சொந்தமான தனி அனுபவத்தில் அவன் அவ்வர்ணத்திற்கே ஒரு தனி உயிர் , உரு , குணம் , உயர்வு எல்லாம் நிர்மானித்துக் கொண்டு விட்டான். அழகுப் பச்சையழகு ! எல்லோருக்கும் தெளியச் சொல்ல
|
வரவில்லை. சொன்னாலும் யாரும் சிரிப்பார்கள் , இப்பொழுது இவள் சிரிப்பது போல் , அவள் அடுப்பில் கொள்ளிக் கட்டையைச் சரியாய்த் தள்ளிவிட்டுக் கொண்டிருந்தாள். கட்டையினின்றும் சிதறும் தணல் போல் அவள் மனம் கொதித்துக்கொண்டிருந்தது. ஊஞ்சலில் அவள் கணவன் அனாதைபோல் ஒடுங்கிப் படுத்திருக்கும் நிலைமை கண்டு ஒரு பக்கம் பரிதவித்தது. வாய் மூடியவண்ணம் அவரைச் சூழ்ந்த அந்தகாரத்தில் உறைந்து போய் விடுகிறார். தூங்குகிறாரா அல்லது யோசனை பண்ணிக் கொண்டிருக்கிறாரா ? அப்படி என்ன ஒரு யோசனையோ ? ஏதோ , ஒரு சமயமில்லாவிட்டால் ஒரு சமயம் எரிச்சல்
|
வந்தாலும் அவரால் ஒரு சமயமும் ஒரு விதமான துன்பமுமில்லை. கண் அவிந்தது முதல் ஒரு விதத்தில் வளர்ச்சி நின்று விட்டது போலும். எல்லோரைப் போல , கண்ணால் உலகைக் கண்டு அதனுடன் மூப்படையும் அநுபவம் அவருக்கில்லை. அதனாலேயே அவர் கேள்விகளும் செயல்களும் சில சமயங்களில் , சமயமற்று சலிப்பை விளைவித்தன. தாழ்வாரத்திலிட்ட பிரம்பு நாற்காலியில் சாய்ந்து கொண்டு குனிந்த தலை நிமிராது யோகத்தில் ஆழ்ந்தது போல் உட்கார்ந்திருந்தார். என்ன இருக்கிறது இவ்வளவு யோசனை பண்ண ? 569 கண்ணிருந்தாலே பொழுது போக மாட்டேன்கிறது. இவருக்குப் பார்வையில்லாமல் ,
|
பேச்சுமில்லாமல் எப்படிப் பொழுது போகிறது ? மாலை முதிர்ந்து இருள் , தோட்டத்தில் வாழை மரங்களிலும் வைக்கோற்போரிலும் கிணற்றடியிலும் வழிய ஆரம்பித்தது. வானம் அப்பொழுதுதான் தூக்கம் கலைந்ததுபோல் , அதன் பல்லாயிரம் கண்கள் ஒவ்வொன்றாயும் , ஒருங்கொருங்காயும் விழித்துச் சிமிட்ட ஆரம்பித்தன. “ கலத்தில் சாதம் போட்டிருக்கிறேன் ; சாப்பிட வாங்கோ. " " ஊஹூம். " " சாப்பிடாதபடி என்ன நடந்துவிட்டது ? கண்ணாடி போனால் பீடை தொலைஞ்சது - நீங்க வாங்கோ. " " இல்லை எனக்கு வேண்டியில்லை. வற்புறுத்தாதே ; நான் மாடிக்குப் போகிறேன். " அவன்
|
படிப்படியாய்த் தொட்டு மாடியேறுவதைப் பார்த்துகொண்டிருந்தாள். ஏதேது , இந்தத் தடவை கோபம் மீறிவிட்டாப்போல் இருக்கு ! சமாதானப்படுத்த வேண்டியதுதான். மாடிக்குப் போய் ஜன்னலண்டை போட்டிருக்கும் குறிச்சியில் சாய்ந்தான். தென்றல் நெற்றி வியர்வை ஒற்றியது. " கீச் - கீச் - " இரவில் கண்ணிழந்து அவனைப்போலவே தன்னந்தனியான பறவை இடந்தேடியலைகிறது. " கீச் - கீச் - கீச் " 570 கிளி ,பச்சைக்'கிளி. அவள் மாடியேறி வரும் சத்தம் கேட்டது. மேல். எதிரே மேஜை மீது டம்ளரை வைத்தாள். ன்னது ? பால். பசும்பால் , பச்சைப்பால் , அவன் குறிச்சி கையைப்
|
பிடித்தவாறு மண்டியிட்டாற்போல் அவன் காலடியில் உட்கார்ந்தாள். அவள் விரல்கள் அவன் கைமேல் பட்டன. மெதுவாய் , “ கோபமா ? " " இல்லையே ! ” நிஜமாகவே இல்லைதான். நேற்றிரவு கண்ட கனவு எழுப்பிய நினைவுகளுக்கு அவள் என்ன செய்வாள் ? " பின்னே ஏன் ஒரு மாதிரியிருக்கேள் ? " “ நான் நேற்றிரவு ஒரு கனாக்கண்டேன். உன் மேல் கோபமில்லையென்றால் நம்பு , தப்பு என் " இல்லை என் மேல்தான். உங்களுக்கே தெரியும். " " இல்லை , ஒருத்தருக்கொருத்தர் இப்படிப் பரிமாறிக் கொள்வதற்காக நான் சொல்லவில்லை. என்னைச் சமாளிப்பது கொஞ்சம் கஷ்டம்தான். நீயும் உன்
|
தம்பியும் இப்படிக் கொஞ்சம் இடமாற்றலாய் எங்கேயாவது போய் இருந்துவிட்டு வாருங்களேன். " “ அடேயப்பா , ரொம்ப ரொம்பக் கோவம் போல இருக்கு ! எனக்குப் புகலிடம் ஏது ? உங்களுக்கே தெரியும். நானும் தம்பியும் அனாதையென்று. " 571 " அந்த ஒரே காரணத்தால் உன்னை நான் கலியாணம் பண்ணிக்கொண்டது தப்புத்தானே ! எனக்கு ஆதரவை முக்கியமாய் நினைத்து உன்னை மணந்தது உன்னை ஏமாற்றியது போல் தானே ! உனக்குத் திக்கில்லாததை என் சௌகரியத்திற்காக உபயோகித்துக் கொண்டுவிட்டேன். ஆனால் நானும் திக்கில்லாதவன்தான் , அதனால் என் காரியம் எனக்கே தெரியவில்லை. " "
|
அதெல்லாம் ஒண்ணுமில்லை , " என்றாள். குருடனைக் கலியாணம் பண்ணிக்கொள்ள திக்கென்றுதானிருந்தது. ஆயினும் அவளும் அவள் தம்பியும் மானமாய்க் காலம் தள்ளுவதே தவிப்பாயிருந்த சமயத்தில் தனக்கு இடம் அந்தஸ்து எல்லாம் கொடுத்துதவியதை மறக்க முடியுமா ? எவ்வளவு நல்லவர் ! கண்ணொன்றில்லை தவிர மற்றெதில் அவரிடம் குறை ? ஆயினும் அவள் மனதில் தோன்றியது நன்றியா அல்லது ஆசையா ? சே , என்ன சங்கடமான கேள்வியெல்லாம் கேட்கிறது இந்தக் குழந்தை ! கொஞ்ச நாழி ஜன்னலுக்கு வெளிப்பக்கமாய் முகத்தைத் திருப்பிக்கொண்டிருந்தாள். “ உனக்கு மூத்தாள் இருந்தாள் என்று
|
உனக்குத் தெரியுமோ ? " அவளுக்குத் தூக்கிவாரிப்போட்டது. தனக்கு மூத்தாளிருக்கும்படி அவருக்கு அவ்வளவு வயதாகிவிடவில்லையே ! இன்னமும் இருக்கிறாளா ? அவரைப் பற்றி அவளுக்கென்ன தெரியும் ? " எங்கள் கலியாணம் கிராமாந்தரக் கலியாணம். அவள் பிறந்த வீடு அடுத்த தெருவுதான். எனக்குக் கண் போவதற்கு முன்னாலேயே கலியாணம் நடந்துவிட்டது. என் தகப்பனார் வைதீகம். சாரதா சட்டம் அமுலுக்கு வரு முன்னர் அதைச் சபித்துக்கொண்டு நடந்த அவசரக் கலியாணம். எனக்கு அவளை என் கண்ணிருக்கையிலேயே சரியாய்க் கண்ட நினைவில்லை. எல்லாவற்றையும் மறைத்த ஓமப்புகையும்
|
வைதீகக் கூட்டமும்தான் ஞாபகமிருக்கிறது. ஆனால் கலியாணமான பிறகுதான் குட்டு வெளியாயிற்று. பெண்ணுக்குப் பேச்சுக் கொச்சையாய்க்கூட வரவில்லை. படு ஊமை. அத்துடன் படு செவிடு. குண்டு போட்டாலும் காது கேட்காது. அவள் பண்ணின பாவம் , ஏக பாப ஜன்மங்கள் ! 572 அப்பாவுக்கு சம்பந்திமேல் குரோதம் பிறந்துவிட்டது. தன் அவசரத்துக்குத் தகுந்தாப்போல் , தன்னைச் சம்பந்தி ஏமாற்றிவிட்டதாக எண்ணிக்கொண்டு விட்டார். சீர்வரிசையெல்லாம் அப்படியே திருப்பினார். பெண்ணோ , பெண் வீட்டாரோ தன் வாசல் படி மிதிக்கக்கூடாது என்று தீர்த்துச் சொல்லிவிட்டார்.
|
எங்கப்பா முரடு , கிராமத்துக்குப் பெரிய மனுஷன் என்றும் பெயர். அப்புறம் கேட்பானேன் ! எனக்கென்ன அப்போ தெரியும் ? அப்பா எனக்கு மறுமணம் செய்வதாக்கூட யோசித்துவிட்டார். ஆனால் அதற்குள் நான் என் கண்ணை அவித்துக்கொண்டது அவர் மூக்கை அறுத்தாற்போலாயிற்று. என் மாமனாரும் சந்தோஷந்தானோ என்னவோ , “ வேணும் அந்தப் பயலுக்கு , குருட்டு மாப்பிள்ளைக்கு ஊமைப் பெண் குறைந்து போயிற்றா ? " என்று பதட்டமாய்ப் பேசிவிட்டார். இரு குடும்பங்களுக்குமிடையே வைரம் முற்றிற்று. நான் - குருடர்களின் உலகம் குறுகிவிடுகிறது. நினைத்தவிடம் போகமுடியுமா ,
|
வரமுடியுமா , நாலு பேருடன் இஷ்டப்பிரகாரம் சேர முடியுமா ? எல்லோரும் எவ்வளவோ பிரியமாய் இருந்த போதிலும் அவர்களின் இரக்கம் ஏளனமாய்த்தான் படுகிறது. அவளுக்கிருப்பது எனக்கிருக்கிறதா ? ஆகவே , எப்பவும் நான் தன்னந்தனியன்தான். நான் வீட்டிலில்லாத வேளையில் , வேலையில்லாத வேளையிலும் , குளக்கரையில் உட்கார்ந்துகொண்டு கல்லை ஜலத்தில் விட்டெறிந்து கொண்டிருப்பேன். அதுதான் என் வீட்டுக்குக் கிட்ட ; அங்கு ஒருவரும் வருவதில்லை. அந்த ஜலம் ஸ்னானத்திற்கு உபயோகமில்லை. நான் எதற்கும் பயனற்றுப் போன பிறகு பதுங்குமிடம் அப்பயனற்ற குளக்கரைதான்.
|
நான் அங்கே உட்கார்ந்துகொண்டு என்னென்ன நினைத்திருப்பேன் என்று கேட்டால் எனக்கு நிச்சயமாய்ச் சொல்லத் தெரியாது. வயது ஏற ஏற கூடவே ஊறும் வேதனை இன்னதென்று நிச்சயமாய் எங்கே தெரிகிறது ? 573 ஒருநாள் பகல் பன்னிரண்டு மணிக்கு மண்டையைப் பிளக்கும் வெய்யிலில் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தேன். பின்னால் யாரோ நிற்பதுபோல் திடீரென்று தோன்றிற்று. “ யாரது ? " பதில் இல்லை. பகீரென்றது. ஆனால் பயத்தால் இல்லை. யாரது ? என் மேல் ஒரு கை பட்டது. முரட்டுத்தனமாய் அக்கையைப் பற்றி இழுத்தேன். அவள் சாயும் கனம் தாங்காது அப்படியே நான் சாய்ந்தேன்.
|
பிடித்திழுத்த வேகத்தில் நிலையிழந்து அவள் என் மேல் விழுந்தாள். ஒரு பெரும் மூர்ச்சை எங்களிருவர் நினைவையும் அடித்துச் சென்றது. எனக்கு அப்பொழுது வயது பதினெட்டா ? யாரது ? என்ன அர்த்தமற்ற கேள்வி என் கேள்வி ? அன்று முதல் நாங்கள் என்னென்ன பேசினோம் ? என்ன பேச முடியும் ? பேச என்ன இருக்கிறது ? எங்கள் பச்சை நரம்பில் துடிக்கும் ரத்தத்தின் படபடப்புத்தான் எங்கள் பாஷை. நான்தான் பச்சை பச்சையாய் சொல்கிறேனே ! எனக்கு இஷ்டமானதெல்லாம் பச்சையாய்க் காண விரும்பும் ஒரு இஷ்டத்தில் , அன்று முதல் அவளுடன் கழித்த வேளைகளெல்லாம் பச்சையாயின.
|
பச்சைப் பகல் , பச்சையிரவுகள். நான் இப்பவும் யோசிக்கிறேன் , நாங்கள் புல்லிய வேகத்திலேயே எங்கள் எலும்புகள் இருவருக்கும் ஒரே சமயத்தில் ஏன் சாவு சிந்திக்கவில்லை ? அச்சாவே நொறுங்கி புதுப்பிறப்பாயிருக்கும். அல்லது இரவிலோ பகலிலோ குறைவிலாது நடமாடும் பூச்சி பொட்டுக்கள் ஏன் பிடுங்கிக் கொல்லவில்லை ? அல்லது துர்த்தேவதைகள் , வாயிலும் மூக்கிலும் செவியிலும் ரத்தம் குபுகுபுக்க அறைந்து ஏன் எங்கள் உயிர் குடிக்கவில்லை ? விதி ! விதி !! விதி !!! இதெல்லாம் நிஜமாக நடந்திருக்க முடியுமா ? ஒரு ஒரு சமயம் என்னையே கேட்டுக் கொள்கிறேன்.
|
574 நடக்கிறதே , என்ன சொல்கிறாய் ? என்று அவள் உருவம் என் மனதில் பச்சையாய் எழுந்து அவள் ஊமை வாய் என்னைக் கேட்கிறது. குளக்கரையில் பசும் புற்றரையில் நாள் தவறாது உட்கார்ந்து உட்கார்ந்து என்னுள் ஊறிய பச்சைத்தாபமே என்னையுமறியாது மாறி மாறித் தோன்றும் குருட்டுக்கனவாயிருந்ததாலோ ? " ஓஹோ , நீ கண்டது குருட்டுக்கனவானால் நான் கண்டது ஊமைக் கனவா ? " என அவள் உரு , என் காணாத கண்கள் காண , பேசாத வாயால் என்னைக் கேட்கிறது. எல்லாமே கனவாயின் பிற நேர்ந்தனவும் கனவா ? பின் நேர்ந்த நனவின் முந்தைய இரவு இப்பொழுது என் முன் எழுகிறது.
|
சித்திரையின் சந்திரிகையாம் - ரொம்ப உசத்தியாமே ? அப்படித்தானா ? நிலவின் ஒளி கூட கண்ணு உறுத்துமோ ? ஏனெனில் என் மைமேல் இரண்டு சொட்டுக்கள் கண்ணீர் உதிர்ந்தன. என் கைகள் அவள் கண்களைத் தேடின. அவள் என் கைகளைப் பற்றித் தன் வயிற்றில் வைத்துக் கொண்டாள். அவள் பச்சை வயிறு ஏன் கொதித்ததோ ? என் மேல் சாய்ந்திருந்த அவளுடல் விம்மிக் குலுங்கிற்று. அவளைவிட நான் துர்ப்பாக்கியசாலியா ? என்னைவிட அவளா ? யாரு அறிவார் ? ஏனோ ? இன்றில்லாவிடினும் என்றேனும் நீ எனக்குச் சொல்ல வேண்டும். தூங்குவதற்கும் விழித்திருப்பதற்கும் என்ன வித்தியாசம் ?
|
எனக்கு இரண்டும் ஒன்றாயிருந்தது. எப்பவும் இருள்தான். வெய்யில் உடலில் உறைத்தால் அது பகலா ? அப்புறம் வெய்யிலாகாது. தெருக்குறட்டில் நான் கட்டிலில் படுத்துவிட்டால் அது இரவா ? இப்பொழுது நான் தூங்குவதாக அர்த்தமா ? தூக்கம் நிஜமா ? விழிப்பு நிஜமா ? தூங்குகிற சமயத்திலாவது உருவமற்ற உருக்கள் என் கண்ணுள் தோன்றி மறைகின்றன. என் பெண்டாட்டி ஏன் இன்று அழுதாள் என்ற கேள்வியே உருவமற்ற உருவாய் எனக்குத் தோன்றுகிறாற் போலிருக்கிறது. ஆகையால் நான் தூங்குகிறேனா விழித்துக் கொண்டிருக்கிறேனா என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கும் அரை
|
நினைவு நிலையில் வாசல் கதவை யாரோ தடதடவென்று அவசரமாய்த் தட்டினார்கள். “ என்ன : - " என் தகப்பனார் அலறியடித்துக்கொண்டு உள்ளிருந்து ஓடிவந்தார். 575 “ சமாசாரம் கேட்டியோ ? உன் நாட்டுப் பெண் திடீர்னு செத்துப்போயிட்டாளாம் " அப்பா மேல்துண்டு போட்டுக்கொள்ளவும் மறந்து அவசரமாய் அவர்களுடன் ஓடினார். நான் தெரியாத கண்ணைத் திறந்த வண்ணம் , கட்டிலில் அசைவற்றுப் படுத்துக் கொண்டிருந்தேன். ஒரு விஷயம் நன்றாகப் புலனாயிற்று. விடிந்து விட்டது. ஆகையால் நான் விழித்துக் கொண்டுதானிருந்தேன். என் கண்ணில் பொட்டு ஜலம் கூட இல்லை. சற்று நேரம்
|
பொறுத்து யாரோ இருவர் என்னைப் பிடித்து மாமனார் வீட்டுக்குக் கூட்டிச் சென்றனர். எப்படிப்பட்ட மாப்பிள்ளை வருகை ! கூடத்தில் பிணத்தைக் கிடத்தி இருந்தது. கையில் மண் செப்பில் அவள் குடித்தது போக பாக்கிச் சாறு எஞ்சியிருந்தது. அந்தச் செப்பைத் தொட்டேன். பிறகு அவள் உதட்டைத் தொட்டேன். பச்சையாய்த்தானிருக்க வேண்டும். வீட்டுக் கொல்லைப் புறத்தில் வைத்தியத்திற்காக வேண்டிய விஷப்பூண்டு ஏதோ பயிரிட்டிருக்கிறது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். விஷத்தை அப்படியே பொசுக்க முடியவில்லை. புது மணியக்காரர் ஊருக்குப் புதிசு. கொஞ்சம் பயந்த
|
பேர்வழி , யாருக்கும் தெரியாமல் அவரே பக்கத்தூரிலிருந்து போலீஸ் , டாக்டர் எல்லாம் அழைத்துக் கொண்டு வந்துவிட்டார். ரண வைத்தியர் பிணத்தின் வயிற்றைக் கிழித்தார். வயிற்றில் மூன்று மாதத்து சிசு. ஊரே பற்றி எரிந்தது. அப்பா நடுங்கிப் போனார். இதைத்தான் தெரிவிக்க முயன்றாளோ ? இதுதான் அவள் தெரிவிக்க முயன்றபோது எனக்குத் தெரியவில்லையோ ? ஒருவேளை தெரியாமலிருப்பதே மேலென்று உயிரை மாய்த்துக் கொண்டாளோ ? தெரிந்துதான் நான் என்ன செய்யமுடியும் ? ஏற்கனவே குருடு. இத்துடன் பெரியவர்களின் ஆசி பெறாத குழந்தை பிறந்த அவமானத்தையும்
|
சுமத்துவானேன் என்ற எண்ணமோ ? இத்தனைப் பகை நடுவில் பயிரான உறவைப் பாதுகாப்பதில் சட்டென்று சலிப்பேற்பட்டுவிட்டதோ ? நாங்கள் பாபத்தையிழைத்து விட்டோம் என்ற பயமா ? இல்லை எங்கள் ரகசியம் எங்களிருவரோடு மட்டும்தான் இருக்கவேண்டுமென்று , அது பஹிரங்கமாகுமுன் அவள் இவ்வுலகை விட்டுப் புறப்படத் தீர்மானித்துவிட்டாளோ ? இந்த உறவு உருப்படப் பிறக்கவில்லை என்று உணர்ந்தாளோ ? அந்தக் குழந்தை என்னுடையதுஎன்று நான் சொல்லியிருந்தாலோ கதை முடிந்துவிடும் புதிர் போல் , எல்லாம் வெளியாயிருக்கும். இந்த மூன்று மாதங்களும் ஊரின் பொது
|
சொத்தாயிருக்கும். அவள் நினைவு எனக்கே சொந்தமாயிருத்தல்தான் எனக்கிஷ்டம். என் சுயநலத்தால் , நான் பயந்தாங்கொள்ளியாயிருந்து விட்டுப் போகிறேன். அவள் பெயருக்கு விழுந்த களங்கம் நீங்காவிட்டாலும் பரவாயில்லை. உயிருடனிருந்த சமயத்தில் எங்கள் பாரத்தைக் 576 குறைக்க யார் என்ன செய்துவிட்டார்கள் ? செத்த பிறகு அவள் தலையில் பூச்சூடா விட்டால் பரவாயில்லை. உயிர் நிலையின் ஒரே மூச்சுப்போன்ற அம்மூன்று மாதப் பச்சைக் கனவின் மிச்சம் - நான்தான். இருந்தும் ஓரொரு சமயம் என் மனம் அக்கொலையுண்ட குழந்தைக்கு ஏங்குகிறது. அது உயிருடன் இருந்தால்
|
எனக்கு ஆறுதலாயிருக்குமோ ? இது எவ்வளவு அசட்டுத்தனமான யோசனை ? எனக்கு உடனே தெரிகிறது. அது உயிருடனிருந்தால் அவளும் உயிருடனிருக்க மாட்டாளா ? ஒன்றினின்று மற்றொன்றைப் பிரித்துச் சிந்திப்பது எவ்வளவு அர்த்தமற்று இருக்கின்றது ? அவள் போனால் அக்குழந்தையும் போக வேண்டியதுதான். இம்மனத்தின் நிலையை என்னென்று சொல்வது ? அவள் மனதில் முடங்கிக் கிடந்த பாசம் எழுந்த ஆவேசத்தில் தொண்டையை முண்டியது. குறிச்சியில் சாய்ந்தபடியே அவனை அப்படியே அணைத்துக் கொண்டாள். " நான் - நான் - ” திடீரென்று மனம் குழந்தை கனிவில் , அது மானவெட்கத்தை விட்டது.
|
“ இதுக்கென்ன நமக்கு வர வருஷம் குழந்தை பிறக்காதா ? " என்றாள். அந்த யோசனை அவள் மனதில் உறுத்தும் குறைக்கு ஆறுதலளித்தது. " ஆம். வாஸ்தவம்தான். ஆனால் பெண்ணாய்ப் பிறக்க வேண்டும். பெண்ணுக்கு நல்ல பேர் வைக்க வேண்டும்.- " “ என்ன பேர் வைப்போம் ? " என்று ஆசையின் அதிசயிப்புடன் கேட்டாள். அவன் கண்கள் ஒளியைப் பெற்றன போல் விரிந்தன. " பச்சை. " 577 அப்படியே முடிவாயிற்று. மூன்று பேரும் ஓடமரத்து நிழலில் போய் உருண்டார்கள். தொரட்டிக் கம்பு மரக்கொம்பைக் கவ்வி ஏலவட்டம் போட்டது. உதிர்ந்து கிடந்த பூக்கருகல்களைப் பொறுக்கி
|
நெறித்துக்கொண்டே பெரியவன் கேட்டான். ரீதி - பூமணி “ அப்ப இண்ணக்கி கஞ்சியில்லையாக்கும். எங்க வீட்டில ஆருருந்தா ? " சின்னவன் தொண்டையை நனைத்தான். " ஒங்கம்மா புள்ளையாட்டீட்டிருந்தாபுளிச்ச தண்ணிக்குள்ள " கூட இல்லனு கையை விரிச்சுட்டா... அவன் வீட்ல ஆளவே காணும்... " " நீ குடிச்சிட்டு வந்தயா ? " " அதெல்லாம் கேலி மயிருல்ல. கொஞ்சம் நஞ்சம் இருந்ததவும் எங்கண்ணக்காரன் உருட்டீட்டான். * " ஆரு படிக்கிறவனா ? " ஆமாமா அவன் ஒருத்தன் வந்து கெடக்கான்ல வீட்ல.. " கரிசல் புழுதியை முகர்ந்த வெள்ளாடுகள் விதறுபட்டு ஓங்கரித்தன.
|
பட்டுக்கிடந்த இலந்தைச்செடியையு கொம்பட்டி நெற்றையும் கொறிப்பதுடன் அவை அடங்குவதாயில்லை. 578 ரோட்டோரம் சில தோட்டப் பசப்புக்களைத் தவிர எட்டாக் கை வரையில் ஒரே கரிசல் விரிப்புத்தான் கருகிக் கிடந்தது. " செருப்புக் காலோட ஒரு ஓட்டம் ஓடி ஆட்டத் திருப்பீட்டு வந்துரு , எங்கயாச்சும் பெறப்புடுவோம் " " இங்க திருப்பீட்டு வந்து என்ன செய்ய. ஆட்டுக்கு வகுறு நெறஞ்சா போகும். அந்தானக்கி சில்லாங் காட்டுக்குப் போவோம். " “ அதுஞ் சரிதான். ரெண்டு கொப்புக் கொழைய வளச்சுக் குடுத்துட்டே போனாச்சுன்னா தென்னமரத்துக் கரண்டுக் கெணத்துக்குப்
|
போயிறலாம். " அவர்கள் கிளம்புகையில் மேற்கே வெயிலலையில் ஆட்டுக்கூட்டம் நீய்வதுபோலத் தெரிந்தது. “ ஏலே ஆட்டக் குளுப்பாட்டி எத்தன நாளாச்சு. காணம் வந்துரும் போலருக்கு. " " இவன் ஒருத்தன் , ஆட்டுக்குத் தண்ணி காட்றதே பெரிசாருக்கு. இதுல குளிப்பு வேற கேக்குதோ. " “ அந்தா தெக்குத் தாருல கம்மந்தட்ட சும்மாதான கெடக்குது , அதுல வுட்டாக்கூட ரெண்டு கடிக்குமே. ” " வேறு வென வேண்டாம். அவரு தன்னால ரெண்டு மாட்ட வச்சிட்டு கூளத்துக்குத் திண்டாடுறாரு , கண்டுக்கிட்டாருன்னா நொக்கப் பிதுக்கிப்பிடுவாரு. " இண்ணக்கி ஊட்டுக்கு என்னதான்
|
செய்யப் போறமோ தெரியலஎளங்குட்டி வீட்ல பாலுக்குப் பாடாப் படுத்தும். 579 “ அங்க பாரு மழ தண்ணியில்லாம மொச்சி கூடபட்டுப் போயிக் கெடக்குது. " எதிர்ப்பட்ட பனைமரத்தில் கல் வைத்துச் சதைத்து நெஞ்சில் சாறு தெறிப்பதில் நிம்மதிப்பட்டான் இன்னொருத்தன். சின்னவனுக்கு வயிறு குடைந்தது. தூரத்தில் சில உருவங்கள் கோடுகளாய் நெளிந்தன. “ ஏய் நான் ரோட்டுக்கு வடக்கு கொய்யாத் தோட்டத்துக்குப் போயிட்டு வரட்டுமா ? " " எலேய் போயும் போயும் அதுலயா கை நீட்டப் போற. அவரு ஒரு பிசினாறி. கண்டாச்சுன்னா அலறீட்டு வருவாரு கடமாங்கொளவி மாதிரி. " "
|
நாயிருந்தாக்கூட வேட்டையாடலாம். அது இன்னியேரம் எங்க நாக்கத் தள்ளீட்டுக் கெடக்கோ. " " எங்கயாச்சும் கரண்டுத் தொட்டிக்குள்ள கெடக்கும். " “ அதுல்லாம அணிலு வேட்டையாடுவமே. " " அருவாருக்குதுல்ல , ரெண்டு பனையப் பாத்து ஏறலாம். " “ சரி வெளாரு செதுக்கீட்டு வா " பெரியோடைக் கரையில் கும்மல் பனைகளில் அணில் கிடக்கும் நிழலை அருவம் பார்த்து முடிக்க ஐந்து பனை தேறியது. பெரியவன் மூன்று பனைகளில் ஏறி ஓலையோடு சேர்த்து அணில் கிடந்த பாகத்தை வெட்டி விழுத்தாட்டினான். பதமான வெட்டில் அவை கோரப்பட்டு விழுந்து செத்தன. விடலிப் பனையொன்றில்
|
ஏறிய சின்னவன் குருத்தையொட்டிக் கிடந்த அணிலை ஓலையுடன் பிடித்தே நெறித்துக்கொன்றான். இன்னொன்று இந்தச் சலசலப்புக்கு நழுவிவிட்டது. 580 சின்னவன் சுதாரித்துச் சொன்னான். “ நாலாச்சு. " ஆடுகள் ஓடை மர அடர்த்திக்குள் மறுக்கி மறுக்கி நெற்றுப் பொறுக்கித் திரிந்தன. இப்ப தீக்குச்சு வேணுமே " " நடுக்காட்ல ஆருட்டப் போயிக் கேக்குறது. " " பெறகு இதத் தூக்கீட்டே அலையவா. சூட்டாங்கறி போட்ருவோம். " “ அப்ப கொத்தப் பருத்தி கெடந்தா பெறக்கீட்டு வா. நான் ரெண்டு சீனிக்கல்லு பாத்துட்டு வாறென். சிக்கிமுக்கி தட்டுவோம். " கொஞ்ச
|
நேரத்துக்கெல்லாம் கரையோரம் தத்துக்குக்கீழ் தீமூட்டம் புகைந்தது. முகஞ் சுண்டச்சுண்ட நாலு அணில்களையும் நன்றாய் வாட்டிக் குடலெடுத்தனர். “ சூட்டோட சூடா ரெண்டு மூணு கல்லத் தீக்குள்ள போட்டு வையி. ” " நீயென்ன அப்பிடிக் கொடலெடுக்க ஈரலெல்லாம் சேத்து , அத இங்க கொண்டா. " சின்னவன் ஈரல் துண்டைக் கத்தரித்து தீயில் கருக வாட்டி வாயில் பிட்டுப் போட்டுக்கொண்டான். ஆடு எங்க போகுதுன்னு பாருலே " 581அது எங்கப் போகப்போகுது இந்த வெயில்ல. " “ நாயிருந்தாலும் இந்தக் கொடலத் திங்கும் " சுட்டெடுத்த அணில்களை சப்பையும் சதையுமாப் பிய்த்து
|
சூடேறப் போட்ட கற்களில் ஒற்றி நீருறிஞ்ச வைத்தார்கள். பிறகு மூன்று பங்காய் வைத்து கல்லாங்கூறு போட்டுப் பகிர்ந்து தின்றார்கள். கையைப் புழுதியில் துடைத்துவிட்டு அவர்கள் எழுந்து பார்த்த போது ஆடுகள் அனேகமாய் தென்னமரத்துக் கிணற்றை எட்டியிருந்தன. " இண்ணிக்கி அம்புட்டுத்தான் தொலஞ்சோம். " குடல் தெறிக்க ஓடினார்கள். ஆடுகள் அத்தனையும் தோட்டத்தில் மிளகாய்ச் செடிகளை உழப்பிக்கொண்டு போய் கினற்றைச் சுற்றித் தளிர்த்திருந்த பாலாட்டஞ் செடிகளை மொய்த்திருந்தன. தெற்கு மடக்கில் உழுதுக்கொண்டிருந்த புஞ்சைக்காரர் அவர்களுக்கு
|
முந்தியிருந்தார். அவர் கையில் சாட்டைக்கம்பு இருந்தது. அவர்கள் ஆட்டுக்கும்பலை ஓடித் திருப்பி விரட்டியதும் அவர் இரைந்தார். “ ஏலே சாதிகெட்ட சலுப்புத் தேவிடியா புள்ளீகளா , இங்க வாங்கலே. வெள்ளாமக்காடு தெரியாம அம்புட்டென்னதே பூளக் கொழுப்பு. இப்ப மூணு பேரவும் தென்னமரத்துல கெட்டித் தொலிய உரிக்கனா என்னன்னு பார். " 582 உழவு கட்டிக்குள் விழுந்தடித்து ஓடி சின்னவனைச் சாட்டையால் விளாசினார். அவன் கூப்பாடு போட்டுக்கொண்டு ஓட்டம் பிடித்தான். அதுக்குமேல் அவரால் பின் தொடர முடியவில்லை. மிச்சக் கோவத்தை கண்டனமாக்கி வைது
|
தீர்த்துக்கொண்டார். முள்ளுக் காடெல்லாம் தாண்டி வந்தபிறகும் சின்னவனுக்கு விக்கலும் விம்மலும் அடங்கவில்லை. உடம்பைச் சுற்றி புரி முறுக்கியது போல் தடிப்பு சிவந்திருந்தது. " பெலமாப் பட்ருச்சோடா ? " சின்னவன் பேசவில்லை , மூக்கை உறிஞ்சினான். “ அந்தானக்கி அவனத் தொரட்டிக் கம்புட்டு ஒரு போடு போடுவமான்னு வந்துச்சு. என்னமோ வெள்ளாமையெல்லாம் அழிஞ்சு போனது போலல்ல வாரான். இருக்கட்டும் ஒரு நாளைக்குத் தொரட்டிக்கத்திய நல்லாத் தீட்டிட்டு வந்து தென்னங் குருத்தெல்லாம் அறுத்துப் போட்டுட்டுப் போயிருறேன். " " இவன் துமுறுக்கு இன்னேரம்
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.