text
stringlengths 11
513
|
|---|
வசந்தகுமரன் குழுத்தலைவர் மேல்நிலை – இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகக் குழு அலகு 1 உயிர்க்கோளம் பாடம் 1 தாவரங்கள் , விலங்குகள் மற்றும் மனிதர்கள் கற்றல் நோக்கங்கள் 1. மாணவர்கள் உயிர்க்கோளத்தின் கூறுகளை கற்றுத் தெளிதல். 2. மாணவர்கள் உயிர்க்கோளத்தில் தாவரங்கள் விலங்குகள் மற்றும் மனிதர்களிடையே உள்ள தொடர்புகளை அறிதல். உயிர்ப்புவியியல் நமது உலகின் கூறுகளை இருவகைப்படுத்தலாம். ஒன்று உயிரினக் கூறுகள் ; மற்றொன்று உயிரற்றக் கூறுகள். இவ்விரு கூறுகளில் பல இயற்தொகுதிகள் காணப்படுகின்றன. உயிரினக் கூறுகளில் ஏழு இயற்தொகுதிகளும்
|
உயிரற்றக் கூறுகளில் நான்கு இயற்தொகுதிகளும் அடங்கியுள்ளன. உயிரின உலகில் , ஒரு தனித்த உயிரினம் , அதன் சுற்றுச் சூழலுடன் தொடர்பு கொண்டு ஏற்படுத்தும் பல்வேறு இடைச்செயல்களை நாம் ' உயிர்ப் புவியியல் ' வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம். உலகில் உயிரினங்கள் தோன்றி சுமார் 1000 மில்லியன் ( 100 கோடி ) ஆண்டுகளாயின. முதல் உயிரினங்கள் கடலில் உருவாயின. காலப்போக்கில் ஏறத்தாழ மூன்று மில்லியன் ( 3X109 ) தாவரங்கள் , விலங்குகள் மற்றும் நுண்ணுயிர்கள் என உயிரினங்கள் பெருகின. தற்சமயம் 1.0 மில்லியன் விலங்கினங்களும் , 0.5 மில்லியன் தாவர
|
இனங்களும் கண்டுப்பிடிக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர வகைப்படுத்தப்படாத பல உயிரினங்களும் புவியில் உள்ளன. இவ்வுயிரினங்கள் புவியின் மேற்பரப்பில் சீரற்றுப் பரவியுள்ளன. ஒவ்வொரு இயற்தொகுதியும் அதற்குரிய தாவரம் அல்லது விலங்கின அமைப்புகளைக் கொண்டு காணப்படுகின்றது. இந்த உயிர்த் தொகுதிகள் இல்லாவிடில் , புவி ஒரு வெற்றுக் கோளாகத்தான் இருக்கும். உயிர்க்கோளமும் அதன் தன்மையும் நிலம் , நீர் மற்றும் காற்றுக் கோளங்கள் மூன்றும் புவியின் இயற்சூழ்நிலைகளாகும். இவை திட , திரவ மற்றும் வாயுக்களால் ஆனவையாகும். இவற்றை
|
உயிரற்ற தொகுதிகள் எனவும் கூறலாம். இந்தக் கோளங்களைத் தவிர நான்காவதாக தாவரங்கள் , விலங்கினங்கள் வாழும் கோளம் ஒன்றும் உள்ளது. இது ‘ உயிர்க் கோளம் ’ எனப்படுகின்றது. இதனை உயிரினத் தொகுதி எனவும் கூறலாம். இந்த உயிரினத் தொகுதிக்கும் , உயிரற்ற தொகுதிக்கும் இடையில் பல்வேறு இடைச்செயல்கள் காணப்படுகின்றன. இந்த இடைச்செயல்களினால் பல சூழ்நிலை மாற்றங்கள் புவியில் நிகழ்கின்றன. புவியியலில் மிக முக்கிய கருத்தாகக் கருதப்படுவது ‘ இடம் ’ ஆகும். அந்த இடத்தின் அதி முக்கியச் சிறப்பு அங்கு வாழும் “ மக்கள் ” ஆவர். எனவே எல்லா
|
இயற்தொகுதிகளையும் விட , மனித இயற்தொகுதியானது சிறப்பும் , மதிப்பும் நிறைந்தது. இது தலையாய ஒன்றானதால் , கூம்பு வடிவ அமைப்பில் முதலாவதாகக் குறிக்கப்பட்டுள்ளது ( படம் 1.1 ). அனைத்து இயற்தொகுதிக் கூறுகளும் படத்தில் கீழிருந்து மேலாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் முதல் நான்கு ( 1- 4 ) தொகுதிகளான உயிரற்ற தொகுதிகள் பற்றி இயற்புவியியல் வாயிலாக நாம் படித்து அறியலாம். தாவரம் மற்றும் பசுந்திரள் ( Plants and Green Potential ) நமது புவியில் காணப்படும் மில்லியன் கணக்கான தாவர இனங்கள் தான் ஏனைய உயிரினங்கள் வாழ வகைசெய்கின்றன.
|
பல மில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோன்றிய தாவர வாழ்க்கையினால் வளிமண்டலத்தில் நாம் உயிர்வாழக் காரணமான உயிர்க்காற்று தோன்றியது. ஒரு தாவர இனத்தை அழிப்பது , 30 விலங்கினங்களை அழிப்பதற்குச் சமம் எனத் தாவரவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். எண்ணிக்கையற்ற இந்தத் தாவர இனங்கள் , சுற்றுச் சூழலுக்கு ஏற்பத் தங்களை மாற்றிக் கொள்கின்றன. எடுத்துக்காட்டாக , பாலைவனத்தில் இருந்து தூந்திரப் பிரதேசம் வரை செழிப்பான தாவர வகைகள் காணப்படுகின்றன. இயற்தொகுதிகள் மனித இயற்தொகுதிகள் சமூகத் தொகுதிகள் இயற்கைத் தொகுதிகள் மனிதர்கள் விலங்குகள்
|
தாவரங்கள் சுய நிர்வாகத் தொகுதிகள் உயிரின உலகம் கட்டுப்பாட்டுத் தொகுதிகள் செயல்முறை தொகுதிகள் தொடர்நிலைத் தொகுதிகள் அமைப்புத் தொகுதிகள் உயிரற்ற உலகம் படம் 1.1 புவியின் இயற்தொகுதிகள் காடுகளின் சூழ்வாழிடங்கள் ஊசியிலைக்காட்டு சூழ்வாழிடங்கள் வடகோளார்த்தத்தில் தூந்திரப் பகுதிகளை அடுத்து காணப்படுவது ஊசியிலைக் காடுகளைக் கொண்ட ‘ டைகா ’ எனப்படும் சூழ்வாழிடமாகும். இந்தச் சூழ்வாழிடமானது வடஅமெரிக்கா மற்றும் யுரேஷியாவின் குறுக்கே மிக அகன்று வியாப்பித்துள்ளது. குறுகிய கோடைக்காலமும் , நீண்ட குளிர்க்காலமும் இப்பகுதியின்
|
காலநிலையாகும். நான்கிலிருந்து ஐந்து மாதங்கள் வரைதான் இங்குள்ள தாவர வளர்ச்சிக்குத் தேவையான வெப்பநிலை காணப்படும். கோடை காலத்தில் குறைந்த அளவு மழைப் பொழிவே காணப்படும். இங்கு அமிலச்சத்து நிறைந்த ‘ பாட்சால்’வகை மண் காணப்படுகின்றது. ஊசி போன்ற இலையுடன் கூம்பு வடிவம் கொண்ட பசுமையான மரங்கள் இந்தச் சூழ்வாழிடத்தின் சிறப்பாகும். ஒரே இனத்தைச் சேர்ந்த மரங்களின் தொகுப்புகள் இங்கு அதிகமாக உள்ளன. இப்பிரதேசத்தில் அதிக உணவும் பாதுகாப்பும் கிடைப்பதால் , அதிகமான தாவரங்களும் விலங்குகளும் செரிந்து காணப்படுகின்றன. கரிபு மான்கள் ,
|
எலிகள் போன்றவை அதிகம் காணப்படுகின்றன. நரிகள் , மின்ஸ்க்குகள் மக்களால் வளர்க்கப்படுகின்றன. மரங்கொத்திகள் , கிராஸ்பீக் ( Grosbeak ) போன்ற பலவகைப் பறவையினங்கள் இங்கு உயிர் வாழ்கின்றன. பறவை இனங்கள் வசந்த காலத்தில் தென் பிரதேசங்களிலிருந்து இங்கு வந்து தங்கிவிட்டு குளிர்கால ஆரம்பத்தில் வெளியேறி விடுகின்றன. ஆனால் விலங்குகள் கடும் குளிரைத் தாங்கக் கூடிய உரோமங்களைப் பெற்றுள்ளன. இங்கு வாழும் ரெட்கிராஸ்பில் ( Redcross Bill ) எனும் பறவை உறுதியான ஓட்டிலிருந்து விதைகளை எடுக்கக்கூடிய அலகினைப் பெற்றுள்ளது. இங்கு காணப்படும்
|
கடினமான காலநிலையில் மனிதன் இயல்பாக வாழ இயலவில்லை. மேலும். இப்பகுதி உலகின் மற்ற பகுதிகளிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. எனவே , இங்கு ஆயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர்கள் கொண்ட பரப்பு மனித சமுதாயம் காணப்படாத காலியிடங்களாக உள்ளன. இங்குள்ள பழங்குடிகள் வேட்டையாடுதலையும் மீன் பிடித்தலையுமே முக்கியத் தொழில்களாகக் கொண்டுள்ளனர். மிதவெப்ப மண்டல இலையுதிர் காட்டு சூழ்வாழிடம் இந்தச் சூழ்வாழிடம் மத்திய அட்சங்களில் , கண்டங்களின் மேற்கு மற்றும் கிழக்கு விளிம்புகளில் காணப்படுகின்றது. இந்தச் சூழ்வாழிடம் இரண்டு கோளங்களிலும்
|
காணப்படுகிறது. ஆனால் வட கோளார்த்தத்தில் அதிக பரப்பில் காணப்படுகிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கிழக்குப்பகுதி , மேற்கு ஐரோப்பா , தெற்கு சிலி , தென்கிழக்கு ஆஸ்திரேலியா , டாஸ்மேனியா மற்றும் நியுசிலாந்து ஆகிய நாடுகளிலும் காணப்படுகின்றது. இப்பகுதியில் குளிர்க்காலம் மிதவெப்பத்துடனும் , கோடைக்காலம் வெப்பம் தணிந்தும் காணப்படும். ஆண்டு மழையளவு சீராகவும் , அதிகமாகவும் உள்ளது. இங்கு பழுப்பு நிறக்காட்டுமண் காணப்படுகின்றது. இங்குள்ள காடுகளில் உயரமான மரங்கள் வளர்கின்றன. இவை ஜனவரி – பிப்ரவரி மாதங்களில் தங்கள் இலைகளை
|
உதிர்த்து விடுகின்றன. இதனால் இவ்வகைக்காடுகள் இலையுதிர்க் காடுகள் எனப்படுகின்றன. இங்கு வளரும் ஓக் , மேப்பில் , பீச் மரங்கள் அகன்ற இலைகளையும் , தடித்த தண்டினையும் கொண்டிருக்கின்றன. ஐரோப்பியப் பிரதேசத்தில் மான்கள் , கரடிகள் , எருதுகள் , ஓநாய்கள் , நரிகள் , பன்றிகள் , காட்டுப் பூனைகள் மற்றும் பல சிறிய விலங்கினங்கள் காணப்படுகின்றன. அமெரிக்க இலையுதிர்க் காடுகளில் மான் , கரடி , சிறுத்தை , செந்நரி , அணில் ஆகிய விலங்கினங்கள் வாழ்கின்றன. இவ்விலங்குகள் யாவும் குளிர்காலத்தில் குளிரைத் தவிர்ப்பதற்காக உறங்கச் சென்று
|
விடுகின்றன. எனவே இவை குளிர்காலத்திற்கான உணவினை குளிர்காலம் துவங்கும் முன்னரே சேகரித்து வைத்துக் கொள்கின்றன. வடகோளார்த்தத்தில் இருப்பது போல் தென்கோளார்த்தத்தில் இலையுதிர் காட்டு பிரதேசம் குறிப்பிடத்தக்க வகையில் பரவலாக இல்லை. சிலியிலுள்ள காடுகளில் பீச் மரங்களே அதிகம் காணப்படுகின்றன. ஆஸ்திரேலியா , நியூசிலாந்து ஆகிய நாடுகளில் தனித்தன்மை வாய்ந்த தாவரங்களும் விலங்குகளும் காணப்படுகின்றன. இந்தச் சூழ்வாழிடத்தில் மத்தியதரைக்கடல் பிரதேசத்தைத் தவிர ஏனைய காடுகள் பெரிதும் மனிதனால் மாற்றப்பட்டு வருகின்றன. யுரேஷியாவின்
|
இந்தச் சூழ்வாழிடம் மனிதனின் குடியிருப்புகளுக்கு இலக்காக இருக்கின்றது. இங்கு நிலவும் சூழ்நிலை மனித வாழ்க்கைக்குப் பெரிதும் சாதகமாக உள்ளது. எனவே , அதிக மக்கள் இங்கு வாழ்கின்றனர். இவர்கள் மீன் பிடித்தல் , சுரங்கத்தொழில் , மரம் வெட்டுதல் , உற்பத்தித் தொழில் ஆகியவைகளில் ஈடுபட்டுள்ளனர். தற்காலத்தில் இக்காட்டுப் பிரதேசங்கள் மனிதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு குடியிருப்புகளாகவும் பால்பண்ணைப் பகுதிகளாகவும் மாறி வருகின்றன. உங்களுக்குத் தெரியுமா ? | உலகின் முக்கிய சூழ்வாழிடங்கள் 1 ) டைகா சூழ்வாழிடங்கள் உலக நிலப்பரப்பில் 11
|
% கொண்டது ; வடதுணை துருவப் பகுதிகளில் காணப்படுகின்றன. ( 2 ) மிதவெப்ப சூழ்வாழிடங்கள் உலக நிரப்பரப்பில் 9 % கொண்டது ; ஊசியிலை மரங்களும். இலையுதிர் மரங்களும் கலந்து காணப்படுகின்றன. சவானா சூழ்வாழிடங்கள் உலக நிலப்பரப்பில் 11 % கொண்டது ; புல்வெளிகளுடன் மரங்களும் கலந்து காணப்படுகின்றன. பாலை சூழ் வாழிடங்கள் உலக நிலப்பரப்பில் 25 % கொண்டது. 5 ) அயனச் சூழ்வாழிடங்கள் உலக நிலப்பரப்பில் 20 % கொண்டது. அயன மண்டல சூழ்வாழிடங்கள் அயன மண்டல சூழ் வாழிடத்தில் புவியிடைக் கோட்டு மழைக்காடுகளும் , அயன மண்டல இலையுதிர்காடுகளும்
|
அடங்கும். அயன மண்டல மழைக்காடுகள் அமேசான் , காங்கோ பள்ளத்தாக்குகள் , கிழக்கிந்தியத் தீவுகள் , இந்தியா மற்றும் மியான்மர் பகுதிகளில் காணப்படுகின்றன. அதிக வெப்பமும் அதிக மழையும் உள்ள புவியிடைக்கோட்டுப் பகுதிகளில் தாவர வளர்ச்சி வெகுவாகக் காணப்படுகின்றது. இக்காடுகள்தான் வளிமண்டலத்திற்கு பெரும் பங்கு உயிர்காற்றினைத் தருகின்றன. இக்காடுகளில் மரங்கள் , புதர்ச்செடிகள் , கொடிகள் , ஒட்டுண்ணிகள் , சாறுண்ணிகள் போன்ற நூறாயிரம் வகையானத் தாவரங்கள் காணப்படுகின்றன. இங்குள்ள அதிக வெப்பம் , அதிக மழைக்கேற்றவாறு தாவரங்களின்
|
அமைப்புகள் காணப்படுகின்றன. சூரிய ஒளியைப் பெறுவதற்காக மரங்கள் உயரமாக வளர்கின்றன. அதிக நீராவிப் போக்கிற்காக இலைகள் அகன்றும் , அகன்ற இலைத்துளைகளோடும் உள்ளன. மரத்தண்டுகள் விழுதுகளால் தாங்கப்படுகின்றன. அயனமண்டல மழைக்காடுகள் அடர்த்தியாக இருப்பதால் சதுப்பு நிலங்களைக் கொண்டிருக்கின்றன. இங்கு வாழும் ஊர்வன மற்றும் பிற விலங்குகள் அச்சூழலுக்கேற்ற தன்மைகளைக் கொண்டிருக்கின்றன. காடுகளின் ஊடே நடமாடுதல் கடினமாக இருப்பதால் பெரிய விலங்கினங்கள் , காடுகளின் விளிம்புப் பகுதிகளில் வாழ்கின்றன. அடர்ந்த காட்டுப் பகுதியில் அதிகமான
|
பூச்சிகளும் , உரோமமற்ற விலங்கினங்களும் காணப்படுகின்றன. மேலும் இவை இலைகளையும் , பழங்களையும் உண்டு வாழ்கின்றன. எடுத்துக்காட்டாக , கொரில்லாக்கள் , குரங்குகள் ஆகியவையும் இவைகளை உண்டு வாழும் சிறுத்தைப் புலிகளும் இச்சதுப்பு நிலக்காட்டில் காணப்படுகின்றன. தென்கிழக்கிந்திய மற்றும் கிழக்கிந்தியத் தீவுகளான மலேசியா , பிலிப்பைன்ஸ் போன்ற பகுதிகளில் காடுகள் அழிக்கப்பட்டு தோட்டப் பயிர்கள் வளர்க்கப்படுகின்றன. மலேசியாவில் இரப்பரும் , ஆப்பிரிக்கா , தென் அமெரிக்காவில் கோகோவும் பயிரிடப்படுகின்றன. புல்வெளிப்பகுதிகளின்
|
சூழ்வாழிடங்கள் மிதவெப்ப மண்டலப் புல்வெளி சூழ்வாழிடம் மத்திய அட்சங்களில் கண்டங்களின் உட்பகுதியில் இப்புல்வெளிகள் காணப்படுகின்றன. வட அமெரிக்காவில் பெரிய சமவெளிகள் , யுரேஷியாவிலுள்ள ஸ்டெப்பி புல்வெளிகள் , மஞ்சூரியச் சமவெளி , அர்ஜன்டினாவின் பாம்பாஸ் , ஆப்பிரிக்காவிலுள்ள வெல்டு , ஆஸ்திரேலியாவிலுள்ள டௌன்ஸ் ஆகியவை இந்த சூழ்வாழிடத்தில் அடங்கும். இப்பகுதிகளில் , பல மாதங்களுக்கு உறைநிலைக்குக் கீழ் வெப்பநிலை காணப்படுகின்றது. குளிர்க்காலத்தில் அதிக குளிரும். கோடைக்காலத்தில் அதிக வெப்பமும் கொண்ட காலநிலையை உடையது. தென்
|
கோளார்த்தத்தில் குளிர் சிறிது மிதமாக இருக்கும். அர்ஜன்டைனாவின் பாம்பாஸ் தவிர ஏனைய பகுதிகளில் ஆண்டு மழையளவு மிகவும் குறைவு. இங்கு காணப்படும் மண்ணிற்கும் புல்வெளிகளுக்கும் மிக நெருங்கிய தொடர்புகள் உள்ளன. இங்கு கறுப்பு நிறத்துடன் தாவரச் சத்து மிகுந்த வளமிக்க மண் காணப்படுகின்றது. புல்வெளிப் பிரதேசத்தில் மேய்ச்சல் விலங்குகள் அதிகம் காணப்படுகின்றன. அணில் , ஓநாய் , நரி ஆகிய விலங்குகளும் சிறுத்தைப்புலி போன்ற வனவிலங்குகளும் , பல்வேறு பூச்சி இனங்களும் வாழ்கின்றன. ஆஸ்திரேலியாவில் கங்காரு , தென் ஆப்பிரிக்காவில்
|
வரிக்குதிரை , யுரேஷியாவில் காட்டுக்குதிரை , வடஅமெரிக்காவில் காட்டெருமை ஆகிய விலங்கினங்கள் குறிப்பிடத்தக்கவை. இவ்வகைப் புல்வெளிகள் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இப்பிரதேசத்தில் இயற்கைச் சூழ்வாழிடங்கள் காலப்போக்கில் மாற்றப்பட்டு , மனிதனால் உருவாக்கப்பட்ட சூழ்வாழிடங்கள் வளர்ச்சியடைந்துள்ளன. இப்புல்வெளிகளில் முதலில் பழங்குடியினர் நாடோடி வாழ்க்கையை மேற்கொண்டு இருந்தனர். பின்னர் ஐரோப்பியர்கள் இப்புல்வெளிகளை கால்நடைப் பண்ணைகளாகவும் , மேய்ச்சல் நிலங்களாகவும் பெரிய அளவில் வளர்ச்சியடையச் செய்தனர். வளம்
|
மிக்க கறுப்புநிற புல்வெளி மண்ணில் ( செர்னோசம் ) மேய்ச்சலுக்குப் பதிலாகப் பயிர்ச்சாகுபடியினை பெரிய அளவில் பின்பற்றினர். காலப் போக்கில் பயிர் நிலங்களில் தொழில்மயமாதல் ஏற்பட்டது. அயனப்பகுதி புல்வெளிச் சூழ்வாழிடங்கள் இதனை சவானா புல்வெளி நிலம் எனவும் அழைக்கலாம். ஆப்பிரிக்கச் சவானா ஆஸ்திரேலியச் சவானா , தென் அமெரிக்காவின் காம்பாஸ் ஆகியவைகள் இந்தப் புல்வெளி சூழ்வாழிடங்களில் அடங்கும். வருடம் முழுவதும் வெப்பநிலை அதிகமாகவும் கோடைக்கால மழைப்பொழிவும் கொண்ட காலநிலை இங்கே நிலவுகின்றது. இங்கு மூன்று பருவக் காலங்கள்
|
காணப்படுகின்றன. அவை குளிர்ந்த வறண்ட காலம் , வெப்ப வறண்டகாலம் மற்றும் மிதவெப்ப மழைக்காலம் ஆகும். இங்கு மணல் கலந்த வறண்ட சரளைமண் காணப்படுகிறது. ஆப்பிரிக்க சவானா புல்வெளியில் , பலவகையான வன விலங்குகள் காணப்படுகின்றன. குறிப்பாக , ஆப்பிரிக்க யானைகள் , காண்டாமிருகங்கள் , நீர்யானைகள் , சிங்கங்கள் ஆகியவைகள் காணப்படுகின்றன. மனித நடவடிக்கைகளின் தாக்கம் இந்தச் சூழ்வாழிடத்தில் அதிகமாகக் காணப்படுகின்றது. பழங்குடியினரான புதர் மனிதர்களும் கிர்கிஸ் இனத்தவரும் பெரிய அளவில் வேட்டையாடுகின்றனர். வேட்டையாடும் தொழிலை நாகரீக
|
மனிதர்களும் மேற்கொண்டு வந்ததால் யானையைப் போன்ற பெரிய விலங்கினங்கள் அழியும் நிலைக்கு வந்து விட்டன. இப்புல்வெளிகளில் , மாற்றிடப் பயிர்முறையில் தினைவகை , வேர்க்கடலை , மிளகு ஆகியவைகள் விளைவிக்கபடுகின்றன. கிழக்கு ஆப்பிரிக்காவில் தோட்டப்பயிர்கள் ஐரோப்பியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டு : காப்பி , பருத்தி மற்றும் புகையிலை. பாலைவனச் சூழ்வாழிடங்கள் பாலைவனம் மழையளவோடு நெருங்கிய தொடர்புடையது. மழை பற்றாக்குறை பகுதிகள் பாலைவனங்களாகும். பொதுவாக 250 மி.மீட்டருக்கும் குறைவான மழைபெறும் பகுதிகளில்
|
பாலைவனங்கள் பல வகைப்படும். ஈரப்பதத்தை அடிப்படையாகக் கொண்டு முழுப்பாலைவனம் , அரைப்பாலைவனம் எனவும் , வெப்பப் பாலைவனம் , குளிர் பாலைவனம் எனவும் பிரிக்கலாம். எல்லாப் பாலைவனங்களுக்கும் அடிப்படையான பண்புகள் ஒன்றேதான். அது வருடம் முழுவதும் பற்றாக்குறை மழையே ஆகும் ( படம் 1.3 ) குளிர்ப் பாலைவன சூழ்வாழிடங்கள் வட கோளார்த்தத்தில் துருவத்தைச் சுற்றியும் தொடர்ச்சியாகவும் இந்த சூழ்வாழிடங்கள் காணப்படுகின்றன. வட அமெரிக்காவில் அலாஸ்கா முதல் லாபரடார் வரையிலும் , கிரின்லாந்தின் தென் விளிம்பு வரையிலும் பரவியுள்ளது. யுரேஷியாவில்
|
ஸ்காந்துநேவியாவின் வடக்குப் பகுதியிலிருந்து சைபீரியாவின் கிழக்குமுனை வரையிலும் இவை வியாபித்துள்ளன. தென் கோளார்த்தத்தில் தூந்திர சூழ்வாழிடத்திற்கு மாறாக கடலால் சூழப்பட்டுள்ள நிலை உள்ளது. தூந்திரப் பகுதியில் மலைகளும் , உயர்நிலங்களும் இருப்பினும் மென்சரிவு கொண்ட சமவெளிகளும் இங்கு காணப்படுகின்றன. இவை நீண்ட குளிர்பருவத்தில் ஏறக்குறைய ஏழு மாதங்கள் பனியினால் மூடப்பட்டிருக்கும். பல வாரங்கள் அல்லது பல மாதங்களுக்கு சூரிய ஒளியே கிடைக்காது. இதனால் அதிக அழுத்தம் , அதிக குளிர் கொண்ட வறண்ட குளிர் காலநிலை காணப்படுகின்றது.
|
ஆண்டு மழைப்பொழிவு மிகக் குறைவாக இருக்கின்றது. இங்கு குளிர்க்காலத்தில் மண் உறைந்த நிலையில் காணப்படும். சூரிய வெப்பம் பெறும் காலங்களில் மேற்பரப்பு உருகத் தொடங்கும். இவ்வாறு உருகும் நீர் மண்ணிற்குள் இறங்குவதில்லை. இதனால் மேற்பரப்பில் நீர் தேங்கி ஏரிகளாகக் காணப்படுகின்றன. தூந்திரத் தாவரம் இடத்திற்கிடம் மாறுபடுகின்றன. கோடைக்கால நிலக் காட்சியாகப் புற்கள் , லிச்சன்கள். பாசிகள் மற்றும் சிறு தாவரங்கள் காணப்படுகின்றன. தாவர இனங்கள் குறைவாக இருப்பினும் விலங்கினங்களின் வகைகள் குறிப்பிடத் தக்க அளவில் காணப்படுகின்றன.
|
பெரும்பாலான விலங்கினங்கள் தாவர உண்ணிகளாகவும். இடம் பெயரும் தன்மை உடையவைகளாகவும் இருக்கின்றன. கஸ்தூரி மான் , ரெயின்டீர் ( Reindeer ) தோலில் வாசனையுள்ள மஸ்கு எருமைகள் , துருவ முயல்கள் , துருவ நரிகள் ஆகியவை குளிர்ப் பாலைவன விலங்கினங்களாகும். லெமிங் எனப்படும் எலி வகைகள் ஆண்டு முழுவதும் இப்பிரதேசத்தில் வாழ்கின்றன. துருவ நரிகளும் , முயல்களும் குளிர்க்காலத்தில் தங்கள் நிறத்தை வெண்மையாக மாற்றிக் கொள்கின்றன. மஸ்க் எருதுகள் நீண்ட பழுப்புநிற ரோமங்களைக் கொண்ட தோலினைக் கொண்டிருக்கும். லெமிங் எலிகளின் வாழ்க்கை அமைப்பு
|
வினோதமானது. அவை மூன்றாண்டுகளில் போதுமான அளவு இனப்பெருக்கம் செய்துவிட்டு , பின்னர் கூட்டமாகச் சேர்ந்து கடலை நோக்கிப் பயணம் செய்யும். இரவு நேரங்களிலேயே இப்பயணம் தொடரும். கடலை அடைந்தபின் சாகும்வரை கடலில் நீந்திச் சென்று உயிர்விடும். இப்பகுதிகளில் மனிதனின் வாழ்க்கைக்கு ஏற்ற சார்புக் கூறுகள் மிகவும் குறைவாக இருக்கின்றன. வட அமெரிக்காவில் எஸ்கிமோக்கள் மிகக் குறைந்த அளவிலேயே வசிக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் தங்கள் உணவிற்கு கடல் சூழ்வாழிடத்தையே நம்பி வாழ்கின்றனர். யுரேஷியாவில் வாழும் லாப்ஸ் மக்கள் இடம் பெயருதலை
|
ஒருசில பகுதிகளில் கட்டுப்படுத்தியிருந்தாலும் அவர்கள் குளிர்காலத்தில் தெற்கு நோக்கி இடம் பெயருகின்றனர். இவர்கள் தாங்கள் வளர்க்கும் ரெயின்டீர் மூலமே பால் , இறைச்சி , தோலாடை போன்றவற்றைப் பெறுகின்றனர். அயனப் பாலைவனங்கள் முக்கியமான அயனப் பாலைவனப் பகுதி சகாராவும் அதன் தொடர்ச்சியும் ஆகும். அரேபியப் பாலைவனம் , தார்பாலைவனம் , கலகாரி , மேற்கு ஆஸ்திரேலியப் பாலைவனம் அடகாமா மற்றும் கலிபோர்னியா பாலைவனம் ஆகியவை மற்ற அயனப் பாலைவனங்களாகும். இங்குள்ள தாவரங்கள் வறட்சியைத் தாங்கக் கூடியனவாக உள்ளன. அதற்கேற்ற வடிவமைப்புகளைக்
|
கொண்டு இருக்கின்றன. குறுகிய இலைகள் , பச்சையம் உள்ள தண்டுப்பகுதி , பரவி ஆழமாகச் செல்லும் வேர்கள் பிற உயிரினங்களிடமிருந்து காத்துக் கொள்வதற்காக சுனைகள் சிறு முட்கள் போன்றவற்றைக் கொண்டு இருக்கின்றன. மேலும் நிலத்தடி நீரின் குறைவினால் நெருங்கி வளராமல் பரவித் தனித்தனியாகக் காணப்படுகின்றன. பாலைவனங்களில் தாவரங்களைப் போலவே விலங்கினங்களும் மிகக் குறைவு. இவை வறட்சியையும் வெப்பத்தையும் தாங்கக் கூடிய தன்மைகளைக் கொண்டிருக்கின்றன. இங்கு ஒட்டகம் , மலை ஆடு மற்றும் ஒரு சில சிறு விலங்குகளும் வாழ்கின்றன. எடுத்துக்காட்டாக ,
|
ஒட்டகம் நீர் கிடைக்கும் நேரத்தில் அதிக நீரினைக் குடித்துக் கொள்ளும். இது நீர் கிடைக்காத பல நாட்களுக்கு நீரினைத் தேக்கி வைத்துக் கொள்ளக் கூடிய தன்மையைப் பெற்றுள்ளது. ஒரு சில எலிகள் வறட்சியான உணவை உண்டு வாழக் கூடியனவாக உள்ளன. ஒரு சில சிறு விலங்கினங்கள் பகலில் தன் வலைக்குள் தங்கியிருந்துவிட்டு , இரவில் மட்டும் வெளியில் வந்து உணவினைத் தேடும். இவை தங்களின் வலைக்குள் தங்குவதன் மூலம் பகல்நேர வெப்பத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்கின்றன. சிறு பூச்சி வகைகள் தங்கள் உடம்பின் மீது மெழுகுப் பூச்சினைக் கொண்டிருப்பதின்
|
மூலம் சூரிய வெப்பத்திலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்கின்றன. பாலைவனப் பகுதிகளில் மிகவும் குறைவான மக்களே வசிக்கின்றனர். அவர்கள் நிலையாக ஓரிடத்தில் தங்காமல் நாடோடி வாழ்க்கையையே மேற்கொண்டுள்ளனர். இப்பாலைவனப் பழங்குடிகளை நாம் இன்றும் சில இடங்களில் காணலாம். உயர்நில சூழ்வாழிடங்கள் மேலே குறிப்பிட்ட சூழ்வாழிடங்களைத் தவிர , உயர்நிலங்களில் உயரங்களுக்கேற்றவாறு வெப்பநிலை மாறுபடுவதால் சூழ்வாழிடங்களும் மாறுபடுகின்றன. வட அமெரிக்காவில் ராக்கீஸ் , தென் அமெரிக்காவில் ஆண்டீஸ் , ஐரோப்பாவில் ஆல்ப்ஸ் , ஆசியாவில் இமயமலை ஆகிய மலைப்
|
பகுதிகளில் அங்கு நிலவும் காலநிலைக்கு ஏற்ப மேலே குறிப்பிட்டுள்ள சூழ்வாழிடங்கள் அனைத்தும் காணப்படுகின்றன. காடுகளில் அறுவடை செய்யப்படும் பொருட்கள் காடுகளிலிருந்து கிடைக்கும் பொருட்கள் பணப்பயிர்களின் தன்மையைக் கொண்டிருப்பதினால் உலகளவில் காட்டுப் பொருட்களின் வியாபாரம் வேகமாக வளர்ந்து வருகின்றது. ஜப்பான் மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் மிகப்பெரிய அளவில் மரங்களை இறக்குமதி செய்கின்றன. மரத்தொழில் இவ்வாறு வளர்ந்து கொண்டே சென்றால் ஒரு வருடத்தில் வெட்டப்படும் மரங்களின் அளவு 3 பில்லியனில் இருந்து 6 பில்லியன் வரை
|
அதிகரிக்கும் என வல்லுநர்கள் கருதுகின்றனர். வளர்ச்சியடைந்த நாடுகளில் வருடத்திற்கு 200 மில்லியன் டன் மரக்கூழ் தயாரிக்கப்படுகின்றது. வளர்ந்துவரும் நாடுகளில் படிப்பறிவு பெருகி வருவதினால் இந்நாடுகளிலும் காகிதங்களின் பயன்பாடு அதிகரித்து வருகின்றது. பிரேசில் , இந்தியா ஆகிய நாடுகளில் காகிதப் பயன்பாட்டின் அளவு தற்சமயம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. தொழிற்சாலைக்கு கடினவகை மரங்கள் தேவைப்படுவதினால் அவைகள் பெரும்பாலும் அயன மண்டலக் காடுகளிலிருந்து பெறப்படுகின்றது. பெரும்பாலும் தென்கிழக்காசிய காடுகளில் இருந்து பெரிய அளவில்
|
மரத்துண்டுகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நாடுகளில் மரம் வெட்டும் தொழிலால் பாதிக்கு மேற்பட்ட மரங்கள் அழிக்கப்பட்டு விட்டன. இவ்வழிவினைத் தடுப்பதற்காக அந்நாடுகளின் அரசாங்கங்கள் சமீப காலத்தில் தான் அதன் முக்கியத்துவம் உணர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. சுருங்கும் காடுகள் ஒவ்வொரு வருடமும் 12 மில்லியன் ஹெக்டேர் காடுகள் புவியின் பரப்பிலிருந்து மனிதன் பயன்பாட்டிற்காக அழிக்கப்படுகின்றன. இவ்வாறாக அழிக்கப்படும் காடுகளின் மொத்தப்பரப்பின் அளவு ஐக்கிய அரசின் நிலப்பரப்பிற்கு சமமானது எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
|
வேகமாக அழிக்கப்பட்டு வரும் மலைக் காடுகளினால் இயற்தொகுதியின் செயல் முறையிலும் மாறுதல்கள் ஏற்படுகின்றன. மக்களின் தேவைகளுக்காக அழிக்கப்படும் ஒரு தாவர இயற்தொகுதி 10 ஆண்டுகளில் மீண்டும் புத்துயிர் பெற வாய்ப்புகள் உண்டு. மனிதனால் அழிக்கப்பட்ட நிலப்பரப்பின் இயற்தொகுதி மனித நடவடிக்கைகளினால் ( வேளாண் தொழில் , குடியிருப்பு ) முழுமையாக மாற்றப்படுகின்றது. நீர்ப்பிரிமேடு ( நீர்ப் பயன்பாட்டுப்பகுதி ) உள்ள பகுதிகளில் தாவர இயற்தொகுப்பு அழிக்கப்படுமாயின் பலவித பிரச்சனைகள் உருவாகும். இப்பகுதிகளில் காடுகள் இருக்கும் வரையில்
|
அவ்விடங்களில் உற்பத்தியாகும் ஆறுகளில் ஓடும் நீர் தூய்மையாகவும் தெளிவாகவும் காணப்படும். காடுகளை அழிப்பதானால் ஆறுகளின் தாழ்பகுதிகளில் வெள்ளப் பெருக்கமும் , தொடர்ந்து வறட்சியும் ஏற்படக்கூடும். மேலும் சரிவுகளில் ஏற்படும் மண் அரிப்பினால் ஆற்றுப் படுகைகளில் படிவுகள் படிகின்றன. இவ்வாறான படிவுகளினால் மீன் வகைகளும் , நீர்மின்சக்தி உற்பத்தி செய்யும் அணைக்கட்டுகளும் பெரிதும் பாதிப்புக் குள்ளாகின்றன. பிரச்சனைகள் அயன மண்டலக் காடுகளில் அழிப்பினால் காலநிலையும் பெரிய தாக்கத்திற்குட்படுகின்றது. அமேசான் பகுதியில் காணப்படும்
|
தாவர இயற்தொகுதி சூரியக் கதிர்வீச்சின் மொத்த அளவில் பெரும் பங்கினைத் தானே ஈர்த்துக் கொள்கின்றது. இத்தாவரத் தொகுதி அழிக்கப்படுவதினால் அப்பரப்பு வெப்பமடைந்து புவி கதிர்வீச்சினால் வளிமண்டலமும் அதிக வெப்பமடையும். வளிமண்டலம் சமநிலை பாதிப்பிற்கு உட்படும். புவி வெப்பமயமாதலுக்கு இதுவும் காரணமாக இருக்கின்றது. காடுகளின் மேலாண்மை அயன மற்றும் மிதவெப்ப மண்டலக் காடுகளின் இயற்தொகுதிகள் மாறுபட்ட உயிரினங்களைக் கொண்டுள்ளன. இதனால் மேலாண்மை முறைகளும் மாறுபடுகின்றன. தாவர இயற்தொகுதிகளைப் பாதுகாக்க கீழ்கண்ட முறைகள்
|
கையாளப்படுகின்றன. அ. நீர்பிரிமேடுகளைப் புதுப்பித்தல் ஆ. சமுதாயக் காடுகள் மற்றும் நிலைநிறுத்தும் தொகுதி அ. நீர்ப்பிரிமேடுகளின் புத்துயிர்ப்பு உலகின் பல நாடுகள் காடுகளின் மதிப்பை உணரத் தொடங்கியுள்ளன. எனவே , நீர்ப்பிரிமேடுகள் உள்ள உயர்நிலங்களில் தாவர உயிர்த்தொகுதி புத்துயிர் செய்யப்படுகின்றது. ஆனால் , இத்தகைய திட்டங்கள் உலகத்தில் ஒரு சிறிய அளவில்தான் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் , எதிர்காலத்தில் இத்தகைய உத்திகள் வியாபித்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆ. சமுதாயக் காடுகள் உலகளவில் , இத்தகைய
|
சமுதாயக் காடுகள் பல நாடுகளினால் வரவேற்கப்பட்டுள்ளன. எரிபொருள் பயன்பாட்டிற்காக மரங்கள் வளர்க்க மக்களை அந்நாட்டு அரசாங்கங்கள் ஊக்குவிக்கின்றன. இந்தியாவில் பல மாநிலங்கள் , பள்ளிக் குழந்தைகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி இத்தகைய திட்டத்தின் கீழ் மரங்களை வளர்க்கின்றனர். நிலை நிறுத்தும் தொகுதி வேளாண் காடுகள் , நிலை நிறுத்தும் தொகுதியாக செயல்படுகின்றன. இம்முறையில் , மரங்களும் பயிர்களும் அடுத்தடுத்து காணப்படுகின்றன. இதனால் பயனற்ற காட்டு நிலங்களும் எல்லையோர மரங்களும் உணவுப் பயிர்களின் உற்பத்திக்கு
|
பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பிட்ட மரவகைகள் வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்தம் செய்கின்றது. இதனால் தரம் குறைந்த காட்டு நிலங்கள் பயிர் பயன்பாட்டிற்கு ஏதுவான நிலங்களாக மாறுகின்றன. கடல் இயற்தொகுதிகள் சூரிய குடும்பத்திலுள்ள கோள்களுள் நாம் வாழும் புவியில் மட்டும் அதிக அளவு நீர் காணப்படுகின்றது. புவியிலுள்ள மொத்த நீரில் 97 % கடல்களில் தான் உள்ளது. இக்கடல்கள் அனைத்தும் ஒரு வெப்பத் தேக்கமாகக் காணப்படுகின்றன. எனவே , கடல்பகுதிகள் கோடைக் காலத்தில் அதிக வெப்பத்தையும் , குளிர்க்காலத்தில் மிகுந்த குளிரையும்
|
கொண்டுள்ளன. புவியை வந்தடையும் சூரிய வெப்பம் , சுமார் நான்கில் ஒரு பங்கு கடல் நீரை நீராவியாக்க உதவுகின்றது. கடல் நீரின் வெப்ப அளவு , கடலின் மேற்பரப்பில் இடத்திற்கு இடம் வேறுபடுகின்றது. வெப்ப அளவு புவியிடைக்கோட்டுப் பகுதிகளில் அதிகமாகவும் , துருவங்களை நோக்கிச் செல்லச் செல்ல குறைவாகவும் காணப்படுகின்றது. கடல் நீரில் தாதுப்பொருட்கள் மற்றும் உவர்ப்பியம் மிகுந்துள்ளன. உவர்ப்பியத்தின் அளவும் இடத்திற்கிடம் வேறுபடுகின்றது. உவர்ப்பியத்தின் அளவு கடலில் கலக்கும் நன்னீரின் சேர்க்கை , ஆவியாதல் விகிதம் ஆகியவற்றைப் பொறுத்து
|
மாறுபடும். அலைகள் , ஓதங்கள் மற்றும் நீரோட்டங்கள் ஆகியன கடல் நீரில் காணப்படும் அசைவுகள் ஆகும். கடல் நீரோட்டங்கள் , அவை செல்லும் கடற்கரைப் பகுதிகளில் வெப்பநிலை , ஈரப்பதம் , மழைப்பொழிவு ஆகியவற்றை மாற்றி அமைக்கின்றன. குளிர்நீரோட்டங்கள் , துருவம் மற்றும் துணைத்துருவப் பகுதிகளிலிருந்து பிளாங்டன் என்ற நுண்ணுயிரிகளைக் கொண்டு வருகின்றன. கண்டத்திட்டுப் பகுதிகளில் , வெப்ப , குளிர் நீரோட்டங்களின் சந்திப்பு , கடல் உயிரினங்கள் வாழ உதவுகின்றன. உயிரினங்கள் முதல் முதலில் கடல் பகுதிகளில் தான் தோன்றின என்பதை நீங்கள்
|
அறிவீர்கள். இங்கு காணப்படும் தாவரங்களைத் தாவர வர்க்கம் என்றும் விலங்கினங்களை விலங்கின வர்க்கம் என்றும் அழைக்கின்றோம். இவை கடற்கரை ஓரங்கள் , தீவுகள் மற்றும் ஆழமான பகுதிகளில் வளர்கின்றன. கடல் வாழ் இயற்தொகுதிகளில் , மனித இனத்திற்கும் கடல்வாழ் உயிரினங்களுக்கும் அதிமுக்கியமானதாக நான்கு இயற்தொகுதிகள் காணப்படுகின்றன. அவையாவன : 1 ) உவர்ச்சேற்று நிலம் , 2 ) சதுப்புநிலம் , 3 ) கழிமுகம் மற்றும் 4 ) முருகைப் பாறைகள். மிதவெப்ப மண்டல ஒத நிலங்கள் , உவர்சேற்று நிலமாகவும் , அயன மண்டல ஒத நிலங்கள் சதுப்பு நிலமாகவும்
|
மாறுகின்றன. இத்தகைய நிலங்களில் கடல்வாழ் புற்கள் மற்றும் பூக்களுடன் கூடிய தாவரங்கள் காணப்படுகின்றன. இத்தாவரங்களை கூடு மீன்களும் இறால்களும் உணவாக எடுத்துக்கொள்கின்றன. இவை மித வெப்ப மண்டல உயிரிகளான வாத்து , நாரைகளுக்கு குளிர்காலத்தில் சேமித்து வைக்கப்பட்ட உணவாக உள்ளன. மேலும் , இத்தாவரங்கள் கழிவுகளுக்கு வடிகட்டியாகவும் , கடலோர அரிப்புகளைத் தடுக்கும் காரணியாகவும் உள்ளது. கழிமுகங்களில் வண்டல் மண்ணில் ஆற்று நீரும் , கடல் நீரும் கலப்பதால் , நண்டு , சிப்பிகள் , இறால் மற்றும் பல கூடு மீன்களும் உயிர்வாழ ஏற்ற சூழ்நிலை
|
காணப்படுகின்றது. எனவே கழிமுகங்கள் கடல்வாழ் உயிரிகளுக்கு சாதகமான வாழ்விடங்களாக அமைகின்றன. மேற்கூறிய கடல் இயற்தொகுதிகளில் முருகைப் பாறைகள் என்பவை ஒன்று. பல்வேறு விதமான உயிரிகள் இவற்றுடன் காணப்படுகின்றன. இவைகள் உலகிலேயே மிகப்பழமையான இயற்தொகுதிகளாகும். உயிரினத் தோற்றத்தின் துவக்க காலத்திலிருந்து இன்று வரை அழியாது வாழ்ந்து வரும் இயற்தொகுதியாக முருகைப் பாறைகள் உள்ளன. முருகைப் பாறைகள் வளர்வதற்கு முன்னர் வேதிப்பொருட்கள் உருவாகித் தங்களின் அமைவிட ஆக்கிரமிப்பை விரிவாக்குகின்றன. உருமாறும் வேதிப்பொருட்களின் பண்புகளினால்
|
ஏனைய உயிரினங்கள் இவ்வமைவிடங்களை ஆக்கிரமிக்க முடிவதில்லை. நோய்க் கிருமிகளை எதிர்க்கும் மருந்துகள் தயாரிக்க , மனிதர்கள் மட்டுமே , இவ்வேதிப்பொருட்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பூமி என் விளையாட்டுத் தோழன் இங்கே மனிதனின் பாதங்கள் தேய்த்து நெருக்கிய நடைபாதை காட்டும் மண் என் மனதைக் கவரும் என் நகரில் பாதைகள் பல விளையாட்டு மெருகூட்டலில் திருமணத்தின் ஆசீர்வாதப் பூக்களாய் சிதறிக் கிடக்கும் கூழாங்கற்கள் என் மனத்திடங்கள் இவை மனிதத்தில் இடைவெளிகள் தாழ்மையானவை பெயர் கூட இல்லாதவை என் குழந்தைப் பருவத்தின் நினைவு
|
காட்டும் புழுதிப் புணர்ச்சிகள் என் பாதங்கள் கீழ் உலவும் நெஞ்ச உணர்வுகள் பூமி என் விளையாட்டு தோழன் வருங்காலத்தின் ஓர் இனிமை வளையம் இதய இணையம். முருகைகள் இவைகள் கடல்வாழ் உயிரிகளில் , தொகுதியாக கூட்டமைப்போடு வாழ்கின்ற இனங்களில் ஒன்றாகும். மிகச் சிறியனவாகிய முருகைகள் கூடுகளில் வாழக் கூடியவை. இக்கூடுகள் சுண்ணாம்பினால் ஆனவை. இச்சுண்ணாம்பு இவைகளுக்கு கடல் நீரிலிருந்து பெறப்படுகின்றது. இவை ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு நெருக்கமாகவும் கூட்டம் கூட்டமாகவும் வாழ்பவை. ஒட்டிக் கொள்வதற்கான பசைத்தன்மை , முருகைகளால்
|
உருவாக்கப்படுகின்றன. முருகைகள் அயன மண்டலக் கடல் பகுதிகளில் மட்டுமே வாழக்கூடியவை. இங்கு கடல்நீரின் வெப்பம் 20 ° செல்சியஸுக்கு குறைவாக இருப்பின் இவை வாழ முடியாது. எனவே உயர் அட்சக் கடல் பகுதிகளில் இவை பெரும்பாலும் காணப்படுவதில்லை. சுமார் 30 ° வட அட்சம் முதல் 30 ° தென் அட்சம் வரையான கடல்பகுதிகளில் மட்டுமே இவை வாழ்கின்றன. இம்முருகைகளுக்கு தேவையான உணவும். வெப்பமும் கடல் நீரோட்டங்களால் கிடைக்கின்றன. தாவரங்களைப் போன்றே இவற்றிற்கும் சூரிய வெளிச்சம் தேவைப்படுகின்றது. எனவே , கடல் நீருக்கடியில் எவ்வளவு ஆழம் வரை சூரிய
|
ஒளிக்கதிர்கள் ஊடுருவுகின்றனவோ , அதற்கும் அங்குள்ள வெப்பநிலைக்கும் ஏற்றவாறு முருகைகள் உயிருடன் வாழ்கின்றன. முருகைகள் கடல்நீரில் வளர்வதற்கு கடல் அலைகள் தடையாக உள்ளன. எனவே தான் முருகைகள் கடற்கரையை ஒட்டித் தொற்றிக் கொண்டு வாழ்பவையாக விளங்குகின்றன. இவைகள் தொற்றிக்கொள்ள வசதியாக அலை அரிமேடைகள் ( Wave cut Platform ) காணப்படுகின்றன. பொதுவாக முருகைகள் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவை 1 ) கடலோர முருகைப்பாறை ( fringing reef ) 2 ) அரண் முருகைப்பாறை ( barrier reef ) 3 ) வட்டவடிவ முருகைத்திட்டு ( Atoll ) தென் இந்திய கடல்
|
பகுதிகளில் கடலோர முருகைகள் காணப்படுகின்றன. அரபிக்கடலில் உள்ள இலட்சத்தீவுகள் கடலோர முருகைகளால் சூழப்பட்டுள்ளன. உண்மையில் , இத்தீவுகள் முழுமையும் முருகைகளால் உருவானவை. கரீபியன் கடல்பகுதிகளில் கூட கடலோர முருகைப் பாறைகள் அதிகமாக காணப்படுகின்றன. ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரையை ஒட்டி பல்லாயிரக்கணக்கான கி.மீ. தூரத்திற்கு அரண் முருகைப் பாறைகள் காணப்படுகின்றன. இவைகள் சுற்றுலா மையங்களாகவும் பொழுது போக்கு இடங்களாகவும் இருக்கின்றன. இத்தகைய முருகைப் பாறைகளைச் சார்ந்து வாழ்கின்ற அரியவகை உயிரினங்களின் அழகினை கண்டு
|
ரசிப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் பெருவாரியாக வருகின்றனர். இதற்காகவே இவ்விடங்களில் நீரில் மூழ்கிப் பார்ப்பதற்கு தேவையான வசதிகள் செய்யப்பெற்றுள்ளன. வட்ட வடிவ முருகைத் திட்டுக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக தீவுகளைச் சுற்றி முருகைகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பாகும். இதன் நடுவே ஆழம் குறைந்த ஒரு உப்பங்கழியும் காணப்படும். இம்மாதிரியான உப்பங்கழியில் நீர்மட்டம் குறையும்போது முருகைகள் வெளியில் தெரிகின்றன. மேற்கண்டவற்றைத் தவிர கடல் வாழ் உயிரினங்களைப் பொதுவாக மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவையாவன : 1 ) பிளாங்டன் , 2 )
|
நெக்டான் மற்றும் 3 ) பெந்தாஸ் கடலில் மிதக்கக்கூடிய மிக நுண்ணிய கடல்வாழ் உயிரினங்களை பிளாங்டன் என்கிறோம். கடலில் ஏற்படும் அசைவுகளுக்கு ஏற்ப இவை நீரோட்டங்கள் , ஓதங்கள் ஏற்படும் போது இடம் பெயருகின்றன. ஈரணு ( டயாட்டம் ) என்பவை இவ்வினத்தைச் சேர்ந்த ஒரு செல் பிராணியாகும். கடல் நீரில் நீந்தக் கூடிய உயிரிகளை நெக்டான்கள் என்றழைக்கின்றனர். மீன்கள் , திமிங்கலங்கள் , நீர்நாய்கள் , சீல்கள் ஆகியவைகள் இவ்வினத்தைச் சார்ந்தவைகளாகும். கடல் வாழ் மிருகங்களில் பெரும்பாலனவை தங்கள் உணவிற்காகவும் இனப் பெருக்கத்திற்காகவும் இடம்
|
பெயர்கின்றன. குட்டிப்போட்டு பால்கொடுக்கும் பிராணியான சீல்கள் அதிகமாக இங்கும் அங்கும் திரிந்து கொண்டிருக்கும். சிலவகைத் திமிங்கலங்கள் கூட குளிர் நீரிலிருந்து வெப்ப நீருக்கு இடம் பெயருகின்றன. கடற்மேற்பரப்பில் காணப்படும் தாவர இன கடற்பாசிகள் ஆல்கே ( Algae ) என்று அழைக்கப்படுகின்றன. கடலடிப்பரப்பில் காணப்படும் உயிரினத் தொகுதிகள் பெந்தாஸ் எனப்படும். இவற்றில் நகரக் கூடியவை , நகராதவை என இரண்டு வகைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக , பெருங்கடல் நண்டு , நத்தை , நட்சத்திர மீன்கள் , புழுக்கள் போன்றவை நகரும் தன்மையைச்
|
சார்ந்ததாகும். கடல் செடிகள் , கோரைப்புல் போன்ற கடற்பாசி வகைத் தாவரங்களும் முருகைப் பாறைகள் , சிப்பிகள் , கடல்நுரை போன்றவைகள் நகரா உயிரினங்களைச் சார்ந்ததாகும். மேற்கூறிய கடல்வாழ் உயிர்த் தொகுதிகள் அனைத்தும் மனித வாழ்க்கைக்கும் பல வகைகளில் பயன்படுகின்றன. இவைகள் சிறந்த நுகர் பொருட்களான அழகுச் சாதனங்கள் ஷாம்பு , சாயப்பொருட்கள் , உயவு எண்ணெய் மற்றும் வர்ணங்கள் தயாரிக்க “ கடல்வாழ் உயிரிகள் ” பல வழிகளில் பயன்படுகின்றன. இவ்வுயிர்த் தொகுதிகள் வாழ்கின்ற பேராழிகள் மனிதச் செயல்பாடுகளினால் பல்வேறு வகையில் மாசடைந்து
|
வருகின்றது. நகர மையங்கள் , தொழிலகங்கள் , அணுகதிரியக்க நிலையங்கள் , எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளினால் பேராழிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. எனவே , கடல்வாழ் உயிரினங்கள் அழிவிற்கும் காரணமாக இருக்கின்றன. இம்மாசுகளை கட்டுப்படுத்தாவிடில் தற்சமயம் உயிரினங்கள் வாழும் கடலாக இருக்கின்ற நிலை மாறி அழியும் நிலை ஏற்படலாம். கற்றல் அடைவுகள் மாணவர்கள் , புவியில் உள்ள தாவரங்கள் , விலங்குகள் மற்றும் மனிதர்கள் இவைகளுக்குள் ஏற்படுகின்ற இடைச்செயல்களைப் பற்றி ஆராய்ந்து உணர்ந்தனர்.
|
பயிற்சிகள் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் 6. உயிர்க்கோளத்தில் வாழும் தாவரங்கள் , விலங்கினங்கள் சமுதாயம் ஆ ) இயற்தொகுதிகள் ஈ ) உயிர்தொகுதி அ ) சூழ்வாழிடங்கள் இ ) சூழியல் அ ) பிளாங்டன் இ ) பெந்தாஸ் என்கிறோம். என்ற இனத்தைச் சார்ந்த நீந்தக் கூடிய உயிரினம் ஆகும். சூழ்வாழிடம் என்று அழைக்கப்படுகின்றன. புல்வெளிச் சூழ்வாழிடம் ஆகும் உலகிலேயே மிகப் பழமையான இயற்தொகுதி. கடலடிப் பரப்பில் உள்ள தாவர சூழ்வாழிடம் ஆ ) நெக்டான் ஈ ) முருகைகள் புவியிடைக் கோட்டு மழைக்காடுகள் அயனமன்டல இலையுதிர்க்காடுகள் சேர்ந்த தொகுப்பு அ )
|
காடுகளின் சூழ்வாழிடங்கள் ஆ ) பாலைவன சூழ்வாழிடங்கள் இ ) டைகா சூழ்வாழிடங்கள் ஈ ) சவானா சூழ்வாழிடங்கள் 9. வட கோளார்த்தத்தில் துருவத்தைச் அ ) அயனக் கடல்கள் இ ) மிதவெப்பப்பகுதிகள் 10. மித வெப்பமண்டல ஒத நிலங்கள் அ ) உவர் சேற்று நிலம் இ ) சதுப்புநிலம் III. மிகச் சுருக்கமாக விடை தருக 11. சூழ்வாழிடங்கள் 12. நெக்டான் 13. பெந்தாஸ் 14. முருகைப் பாறைகள் 15. கழிமுகம் சுற்றி தொடர்ச்சியாக காணப்படும் சூழ்வாழிடம் ஆ ) குளிர்ப்பாலைவனம் ஈ ) புல்வெளிகள் ஆ ) புல்வெளிகள் ஈ ) பயன்படாத நிலம் IV. ஒரு பத்தியில் விடை தருக 16. உவர்
|
சேற்று நிலம் 17. சதுப்பு நிலம் 18. மிதவெப்ப மண்டல புல்வெளி சூழ்வாழிடம் 19. குளிர்ப்பாலைவன சூழ்வாழிடம் 20. அயன மண்டலச் சூழ்வாழிடம் விரிவான விடையளி 21. காடுகளின் சூழ்வாழிடங்களை வகைப்படுத்தி அவற்றில் ஏதேனும் ஒன்றினைப் பற்றி விவரி. 22. காடுகளில் அறுவடைச் செய்யப்படும் பொருட்கள் மற்றும் காடுகள் மேலாண்மைப் பற்றி விவரி. 23. முருகைகள் என்றால் என்ன ? அவை வாழும் சூழ்நிலை மற்றும் அவற்றின் வகையினை விவரி. VI. செய்முறைப் பயற்சி 24. சூழலில் காணப்படும் உயிர்த்தொகுதிகள் பற்றி கலந்துரையாடுக. 25. உயிர்த்தொகுதிகளின் வகைகளை
|
வரிசைப்படுத்தி வரை படத்தாளில் அட்டவணைப் படுத்துக. 26. பல்வேறு வகையான கடல்வாழ் உயிரினங்களின் படங்களைச் சேகரித்து ஒட்டி வாழும் கடல் தொகுதியை உருவாக்குக. 27. புல்வெளி பகுதிகளில் உயிர்த்தொகுதிகளை நிலவரைப்படத்தில் வரைந்து வண்ணமிட்டுக் காட்டுக. 28. கடற்கரைப் பகுதிகளுக்கு களப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள மாதிரிகளைச் சேகரித்து , பள்ளியில் வாழும் கடலைச் சித்தரிக்கும் கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்க. அலகு 1 உயிர்க்கோளம் பாடம் 2 மனிதத் திறன்பாடு கற்றலின் நோக்கங்கள் 1. மாணவர்கள் உலகிலுள்ள மனிதத் திறன்பாட்டினை அறிந்துக்
|
கொள்ளுதல் 2. மனிதப் பரிணாமம் , நாகரீகம் , வளர்ச்சி , பரவல் , அடர்த்தி , அமைப்பு , வயது , பாலின பிரமிட்டின் எதிர்கால கணிப்பு மற்றும் மனித திறன்பாட்டுடன் தொடர்புடைய முழு விவரங்களையும் அறிந்து கொள்ளுதல். மனிதர்களின் பரிணாம வளர்ச்சி ( Human Evolution ) மனிதர்கள் உலகில் தோன்றி , காலப்போக்கில் அறிவார்ந்த மனிதர்களாய் மாறி , படிபடியாக நாகரீகத்தில் வளர்ச்சியடைந்த விவரங்கள் அனைத்தும் , மனிதப் பரிணாம புதிய ஆராய்ச்சிகளின் விளைவாக தற்போதைய காலத்தில் கிடைத்துள்ளன. மனிதன் முதன் முதல் ஆப்பிரிக்காவில் அடர்ந்த காட்டுப்
|
பகுதியில் 4 மில்லியன் வருடங்களுக்கு முன் ஒரே பிரிவாகத் தோன்றினான் என்ற கருத்து நிலவுகின்றது. இங்கு வாழ்ந்த அறிவார்ந்த மனிதன் கற்களால் ஆன கருவிகளைப் பயன்படுத்தினான் என்றும் தெரிய வந்துள்ளது. மாறாக , அதே காலக் கட்டத்தில் , ஆசியாவில் ஒரு மாறுபட்ட மனித இனத்தவர் வாழ்ந்து வந்தனர் என்பதும் ஆராய்ச்சியின் விளைவாக கிடைத்துள்ள செய்தியாகும். எப்படியெனில் , 200,000 ஆண்டுகளுக்கு முன்னரே , அறிவார்ந்த மனிதர்கள் இப்பகுதியில் வாழ்ந்து வந்தது பல ஆதாரங்கள் வாயிலாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதலாவது ஆதாரமாக , இந்தோனேஷியாவில்
|
காணப்பட்ட மனிதர்களின் எலும்பு படிமங்கள் ஆகும். இரண்டாவதாக , சீனாவில் கண்டெடுக்கப்பட்ட ஆசிய இனத்தைச் சார்ந்த மண்டை ஓடு ஆகும். இது மட்டுமல்லாது , இந்த அறிவார்ந்த மனிதர்கள் மூங்கிலாலான கருவிகளைப் பயன்படுத்தினர் என்பதும் தெளிவாகிறது. எனவே இவ்வினத்தவர்களாகிய ஆப்பிரிக்க , ஆசிய அறிவார்ந்த மனிதர்கள் , தங்கள் பூர்வீகப் பிறப்பிடங்களிலிருந்து வெளியேறி போராட்டமான வாழ்க்கையை மேற்கொண்டு , அறிவுத்திறன் , தொழில்திறன் கொண்ட இன்றைய மனித இனத்துக்கு முன்னோடியாக விளங்குகின்றனர். மனித நாகரீகங்கள் ( Human Civilisations ) மனித
|
நாகரீக வளர்ச்சி வரலாற்று காலத்தினை , நமக்கு கிடைத்துள்ள செய்திகளின் அடிப்படையில் பல்வேறு நிலைகளாகப் பிரிக்கலாம். முதல் நிலையாக , இரண்டு மில்லியன் ஆண்டு காலமாக , மக்கள் இயற்கையை சார்ந்து வாழ்ந்ததாகக் கணிக்கப்படுகின்றது. அடுத்த கட்டமாக , கடந்த 10,000 ஆண்டு காலமாக நடைப்பெற்றுள்ள பிரமிக்கத்தக்க நாகரீக மாற்றங்கள் என கருதப்படுகிறது. அடுத்து , அதைவிடச் சிறப்பாக போற்றப்படுவது சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய நாகரீக காலமாகும். வேளாண் தொழிலில் விதை விதைக்கக் கற்ற மனிதன் , அத்தொழிலுக்காக ஓரிடத்தில் நிலையாகக்
|
குடியமர ஆரம்பித்தான். அப்பொழுதே , ஆற்றங்கரை தொட்டில்களில் நாகரீகத்திற்கான விதைகளை விதைத்து வளர்க்கலாயினான். இதன் பயனாக , ஆற்றுங்கரைச் சமவெளிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் தோன்றின. எடுத்துக்காட்டாக , நாகரீகச் சிகரமான , சிந்து சமவெளியில் காணப்பட்ட மொகஞ்சதாரோ , ஹரப்பா என்ற இரட்டை நகரங்களில் 30,000 த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்தனர். காலப்போக்கில் நாகரீகங்கள் வளர்ந்த போது மக்கள் தங்கள் இடங்களைவிட்டு வெளியேறி பரந்த இடங்களை நோக்கி பயணித்தனர். அவ்வாறு மத்திய ஆசியாவிலிருந்து வெளியேறிய மக்கள் ரோமானிய மற்றும்
|
சீன நாகரீகத்தை மாற்றியமைத்தனர். நாளடைவில் வேளாண் தொழிலினால் கிராமங்கள் சிறப்புற்றன. உற்பத்தி வளர்ச்சி உபரிக்கு வழிகோலியது. உபரியினால் வாணிகமும் பிற தொழில்களும் வளர்ந்தன. மதங்கள் தோன்றின. நகரங்கள் பெரு நகரங்களாயின. அறிவியலும் நுட்பமும் வளர்ச்சியடைந்தன. மக்கள் தொகை பெருகியது. எதிர்மறை நிகழ்ச்சிகளாக , புரட்சிகள் ஏற்பட்டன. அநாகரீக நடத்தைகளும் தலை தூக்கின. அன்பு வாழ்க்கை அவல வாழ்க்கையாக மாறியது. அதிகாரம் , அடக்குமுறை வாடிக்கையாயின , பொருளாதார , சமுதாயப் பாகுபாடுகள் பெருகின. பெண் சமுதாயப் பாகுபாடு ஏற்பட்டது.
|
இடைக்காலத்தில் அடிமை வாணிகம் , மக்களின் கட்டாய இடமாற்றம் , மக்களின் சிதறல் என உலகளவில் நிகழ்ச்சிகள் அதன் தாக்கங்களுடன் ஏற்படலாயின. கிரேக்கர்கள் , ரோமர்கள் , சீனர்களால் தத்துவமும் அறிவியலும் வளர்ந்தன. வானவியல் அரேபியர்களால் வளர்க்கப்பட்டது. இவ்விதமாக , நாகரீக வாழ்க்கையில் புதுமைகளும் , செழுமையும் ஏற்பட்டது. நாகரீகங்களின் முன்னேற்றம் ( Progress in Civilisations ) ஐரோப்பியர்கள் கடல் பயணங்களில் ஆர்வம் கொண்டவர்கள். எனவே பதினாராம் , பதினேழாம் நூற்றாண்டுகளில் கொலம்பஸ் , வாஸ்கோ - டா - காமா , மெகல்லன் போன்றவர்கள்
|
புதிய கடல் வழிகளைக் கண்டுபிடித்து கடற்பயணங்களை தொடர்ந்தனர். வீரர்கள் , வணிகர்கள் , குருக்கள் , நிர்வாக வல்லுநர்கள் பலரும் இவர்களுடன் கடற்பயணம் மேற்கொண்டனர். இதனால் , அறிவுப் புரட்சி ஏற்பட்டது. புவி , கோள வடிவம் கொண்டது என்பது மெய்ப்பிக்கப்பட்டது. நாடுகள் ஆதிக்க நாடுகளாகவும் , வல்லரசுகளாகவும் உருவெடுத்தன. பல நாடுகள் அடிமைப்பட்டு சுதந்திரத்தை இழந்து தத்தளித்து கொண்டிருந்தன. பின்னர் விழிப்புணர்ச்சி ஏற்பட்டு சுதந்திர போராட்டம் தொடர்ந்தது. ஆதிக்க நாடுகள் அடக்கு முறையையும் அடிமை நாடுகள் அஹிம்சை போராட்டங்களையும்
|
மேற்கொண்டன. உலகப் போர்களும் , சுதந்திரப் போர்களும் நிகழ்ந்தன. இதனால் சமுதாய , கலாச்சார , பொருளாதார சீர்குலைவும் பின்னடைவும் ஏற்பட்டன. எனினும் , தென் அமெரிக்க நாடுகள். அமெரிக்க ஐக்கிய நாடுகள் , ஆசிய நாடுகள் , ஆப்பிரிக்க நாடுகள் யாவும் ஒன்றன்பின் ஒன்றாக சுதந்திரம் பெற்றன. ஆயினும் காலனி ஆதிக்கங்கள் ஆங்காங்கே இன்றும் நடைபெறுகின்றன. உலகம் கிழக்கு , மேற்கு , தெற்கு , வடக்கு எனப் பிரிக்கப்பட்டு வேற்றுமைகளுடன் காணப்படுகின்றது. பஞ்சம் , வறுமை ஆகியன அரசியல் காரணிகளால் தடுக்க முடியாத ஒன்றாக உள்ளன. ‘ ஒன்றே உலகம் ’ , ‘
|
நமது பொதுவான எதிர்காலம் ’ , ‘ ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு ' என்பன போன்ற கொள்கைகளும் , கருத்துகளும் உணரப்படும் போது , மனித நேயம் , சகோதர உணர்ச்சி போன்றவைகள் உலகினை முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்வனவாகி வெளிப்படுகின்றன. தற்போது ஜெர்மனி இணைதல் , சோவியத் யூனியன் விலகுதல் நிகழ்வுகள் இதனை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. நாகரீக முன்னேற்றம் ஒருபுறம் ஏற்பட்டாலும் மறுபுறம் தீவிரவாதம் அல்லது இராணுவவாதம் , அடிப்படைவாதம் ஆகிய அநாகரீகமான செயல்களும் பெருகிக் கொண்டே வருகிறது.
|
மக்கள் தொகை வளர்ச்சி , பரவல் மற்றும் அடர்த்தி ( Growth , Distribution and Density ) இன்றைய மனிதர்களின் முன்னேற்றத்திற்கு காரணமாக அமைவது , பரிணாம மாற்றங்கள் , அறிவு வளர்ச்சி மற்றும் கலாச்சார முன்னேற்றம் ஆகியனவாகும். இவை மனிதர்களை " அறிவுச் சான்றோர்களாக " மாற்றியமைத்துள்ளன. கடந்த நூற்றாண்டுகளின் தொழில் மற்றும் அறிவியல் திறன் வளர்ச்சியே மக்கள் பெருக்கத்திற்கு ஊக்கமளிப்பதாக இருந்தது. அண்மைக் காலத்தில் மக்கள் தொகை வெடிப்பு மனித முன்னேற்றத்திற்கு ஒரு மிகப்பெரிய தடையாக உள்ளது. இருபதாம் , இருபத்தோறாம்
|
நூற்றாண்டுகளில் மக்கள் தொகை வளர்ச்சி ஒரு பெரும் சிக்கலாக இருந்து வருகின்றது. எனினும் , " மனித வளமே வளங்களுக்கெல்லாம் தலையாய வளமாகத் திகழ்கின்றது " என்ற கூற்று இன்றைய காலக் கட்டத்தில் பொருந்துமா ? என்பதையும் , மக்கள் தொகை வளர்ச்சி , சமுதாய - பொருளாதார முன்னேற்றத்திற்கு எவ்வாறு தடையாக உள்ளது என்பதையும் இனி விவரமாகக் காண்போம் ( படம் 2.1 ) உலகின் இன்றைய மக்கள் தொகை ஏறத்தாழ 6,300 மில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. மக்கள்தொகைப் பரவலை கூர்ந்து கவனிப்போமேயாகில் , பல இடங்களில் அதிகமான மக்கள் தொகையையும் , சில
|
இடங்களில் குறைவான மக்கள் தொகையையும் கொண்டுள்ளது தெரியவரும். இவ்வாறு உலகில் மக்கள் தொகை சீரற்று பரவிக் கிடக்க இரண்டு முக்கிய காரணிகள் உள்ளன. அவையாவன : 1. நிலத்தோற்றம் மற்றும் 2. காலநிலை என்பவையாகும். தற்போதைய மக்கள் தொகை வளர்ச்சி விழுக்காடு 1.3. இது நமது கணிப்புக்கு குறைவாக தென்பட்டாலும் மக்கள் தொகை வெடிப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது. இன்றைய மக்கள் தொகை வளர்ச்சியை கீழே தகவல் பெட்டியில் காணும் பிரெஞ்சு விடுகதை மூலம் இலகுவாகப் புரிந்து கொள்ளலாம். உங்களுக்குத் தெரியுமா ? விடுகதை : இரட்டிப்பு ஒரு தாமரைக் குளம் ,
|
அதில் ஒரு தாமரை மலர்ந்தது. அடுத்த நாள் இரட்டிப்பாயிற்று இருபத்தொன்பதாம் நாள் அந்தக் குளத்தின் ஒருபாதி தாமரைகளால் நிறைந்திருந்தது எனில் , என்று அக்குளம் முழுமையாகத் தாமரைகளால் நிறைந்திருக்கும் ? முப்பதாவது நாள் விடுகதையில் கூறப்பட்டுள்ள குளத்து தாமரைகளைப் போலவே மக்கள் தொகை இரட்டிப்பாகி வருகிறது. காலப்போக்கில் , இரட்டிப்பு விகிதம் அதிகரித்தாலும் ஆண்டுகளின் இடைவெளி மிக மிகச் சிறியதாகிக் கொண்டே வருகின்றது. மக்கட் தொகையின் வளர்ச்சித் தன்மை ( Nature of Population Growth ) கி.பி. முதல் நூற்றாண்டில் உலகின் மக்கள்
|
தொகை 300 மில்லியனுக்கும் குறைவாக இருந்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் 600 மில்லியனாகப் பெருகியது. 1820 ஆம் ஆண்டில் 1,000 மில்லியனாக வளர்ந்தது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் 2,000 மில்லியனாக அதிகரித்தது. 1960 ஆம் ஆண்டில் 3,000 மில்லியனாக வளர்ந்தது. 21 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் 6,000 மில்லியனுக்கு மேல் உள்ளது. மேற்கொடுக்கப்பட்டுள்ள புள்ளி விவரத்தில் , மக்கள் தொகை எவ்வாறு துரிதமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது எனத் தெளிவாக விளங்குகின்றது. முன்னொரு காலத்தில் 1700 ஆண்டுகளுக்கு ஒருமுறை இரட்டிப்பாகிய மக்கள்
|
தொகை , தற்பொழுது 30 வருடங்களிலேயே இரட்டிப்பாகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது எனக் கூறினால் மிகையாகாது. உங்களுக்குத் தெரியுமா ? உலகின் மக்கள் தொகை எவ்வளவு வேகமாக வளர்கின்றது ? உலகின் தற்போதைய வளர்ச்சி வீதம் சுமார் 1.3 சதவீதம் என்பது 54 ஆண்டுகளில் இரட்டிப்பாவதை குறிக்கின்றது. இவ்வளர்ச்சி வீதம் தொடர்ந்தால் , இப்பொழுது சுமார் 6 பில்லியனாக உள்ள உலக மக்கள் தொகை 2054 ஆம் ஆண்டு 12 பில்லியனாக இரட்டிப்பாகும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. 35 வருடங்களின் இரட்டிப்பான உலக வளர்ச்சி வீதம் , 1960 இல் 2 சதவீதம் உயர்ந்து
|
சிகரத்தை எட்டியது. உலகின் தற்போதைய ஆண்டு சராசரி வளர்ச்சி சுமார் 1.3 சதவீதம் ஆகும். இது மிக குறைவாகக் காணப்படினும் , உண்மையிலேயே , இது மிக அதிகமான மக்கள் தொகை வளர்ச்சியாகும். உலகம் முழுவதும் இந்த வளர்ச்சி வீதம் சீரற்று காணப்படுகின்றது. வளர்ச்சியடைந்த நாடுகளில் தற்போது 1000 மில்லியன் மக்களும் , வளரும் நாடுகளில் 4000 மில்லியன் மக்களும் உள்ளனர். இந்த வளர்ச்சி நிலை இவ்வாறாகவே தொடர்ந்தால் , வளர்ச்சியடைந்த நாடுகள் 2000 மில்லியனுக்கும் குறைவான மக்கள் தொகையையும் , வளரும் நாடுகள் 30 ஆண்டுகளில் தற்போதைய மக்கள் தொகையின்
|
இரட்டிப்பையும் எட்டும். மக்கள் தொகை வளர்ச்சியை நிர்ணயிப்பவை ( Determinants of Population growth ) கடந்த 400 ஆண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சியில் அடிப்படை மாற்றங்கள் ஏற்பட்டது. வேளாண் மற்றும் தொழிற்புரட்சி இங்கிலாந்தில் ஏற்பட்டதன் விளைவாக. உலகமெங்கும் பொருளாதார , தொழில் துறை மற்றும் அறிவியல் துறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டது. வளர்ச்சியடைந்த பொருளாதார முன்னேற்றம் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஆதரவு அளித்தது. தவிர , மருத்துவத் துறை முன்னேற்றம் , நலவாழ்வு , வெள்ளத்தடுப்பு , தீவிபத்து பாதுகாப்பு ஆகிய நடவடிக்கைகள் ,
|
மக்கள்தொகையில் இயற்கையாக ஏற்படும் இழப்பினைப் பெருமளவில் தடுத்து நிறுத்த உதவியது. ஆகையால் பிறப்பு வீதம் அதிகரித்து இறப்பு வீதம் குறைந்தது , எனவே மக்கள் தொகை வளர்ச்சி வீதம் உயரலாயிற்று. மனிதப் பணித்திறன் ( Working Potential ) மனித வாழ்க்கைத் தரத்தை உயர்த்த , மிகப்பெரிய வளமாகிய மனித வளம் மிக மிக அவசியம் என்றாலும் , இது கட்டுக்கடங்காமல் பெருகும் பொழுது , வாழ்க்கைத்தரம் உயர வாய்ப்பில்லை. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் வாழ்வில் நலம்பெற பணித்திறன் அவசியம் தேவை. அவ்வாறே எந்த ஒரு நாட்டிலும் மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு
|
ஈடாகப் பணித்திறன் மிகமிக அவசிமான ஒன்றாக உள்ளது. எனவே , இயற்கை வளங்களோடு மனிதப் பணித்திறன் மிக அத்தியாவசியமான ஒரு வளமாகக் கருதப்படுகின்றது. எனினும் இப்பணித்திறனை வெளிக்கொணர்ந்து பயன்படுத்துவதென்பது ஒரு சுலபமான காரியமல்ல. ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு , ஒவ்வொருவரின் தனிபணித்திறனும் தேவையெனினும் , இது போதுமானது அல்ல. நாட்டவர் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவதே , மனித அறிவின் விருத்திக்கும். நாட்டின் முன்னேற்ற முயற்சிக்கும் வழிகோலுவதாக அமையும். எடுத்துக்காட்டாக , 15 வயது முதல் 64 வயது வரையுள்ள பணித்திறனுடைய 2.6
|
மில்லியன் மக்கள் ஒன்று சேர்ந்து வேலை செய்யும்பொழுது வெளிப்படும் உழைப்புத்திறன் , 200 மில்லியன் கிலோ வாட்ஸ் மின்சக்திக்கு நிகரானது என நம்பப்படுகிறது. இவ்வாறிருக்க , ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு , கூட்டு முயற்சியோடு கூட தனி நபரின் முயற்சியும் மிக மிக அவசியமான தொன்றாக இருக்கின்றது. ஆகவே , ஒரு நாட்டின் முழுமையான பணித்திறனை வடித்தெடுக்க , தகுந்த நுட்பத்திறன் தேவைக்குரியதாகும். குறிப்பாக வளரும் நாடுகளில் மனிதவளம் ஏராளமாக இருப்பினும் , பற்றாக்குறை அதிகமாக இருப்பதால் , மனிதத் திறனை முழுமையாக வெளிக் கொணர்ந்து
|
பயன்படுத்த மிகக் குறைவான வாய்ப்புகளே உள்ளன. சில சமயங்களில் , உலகின் பல நாடுகளில் காணப்படும் சமுதாயப் புறக்கணிப்பு , வன்முறைகள் , காழ்ப்புணர்ச்சிகள் , பெண்கள் மற்றும் வயது வந்தோர் வேலையின்றி இருக்கும் நிலை போன்றவற்றால் பணித்திறன் முழுமையாகப் பயன்படுத்தப் படவில்லை. ஆகையால் , எங்கெல்லாம் மனிதப் பணித்திறன் முழுமையாகப் பயன்படுத்தப்படுகிறதோ , அந்நாடு வாழ்க்கைத்தரத்தில் முன்னேறி , வளர்ச்சியடைந்த நாடுகளோடு கைக்கோர்த்துச் செல்ல இயலும். நலவாழ்வின் அடிப்டைத் தேவைகள் ( Basic Necessities of a Healthy Life ) மனிதர்களின்
|
தரமான வாழ்விற்குச் சத்துணவு , குறைந்த குழந்தை இறப்பு விகிதம் , உயர்ந்த ஆரம்பப் பள்ளிச் சேர்க்கை , கல்வி , வீட்டுவசதி , மேம்பாடான சமுதாயப் பாதுகாப்பு , வாழும் உரிமை , அரசியல் சுதந்திரம் , வேலைவாய்ப்பு , ஆயுள் நீடிப்பு ஆகியவைகள் தேவைப்படுகின்றன. மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்பொழுது , தேவைகளும் அதிகரிக்கின்றன. ஆகையால் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்ய மனிதர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக , உலக மக்கள் தொகையில் முதலிடம் வகிக்கும் சீன மக்கள் , மனிதப் பரிணாம வளர்ச்சி புவியின் மிகச்
|
சிறப்பான நிகழ்ச்சி என்று உறுதிபட எண்ணினாலும் அதற்கு இணையாக சீனர்களின் எண்ணிக்கைப் பெருக்கம் , அதிக ஏழைச் சீனர்களை உருவாக்கும் என்பதை புரிந்துக் கொண்டு மக்கள் தொகையைக் குறைக்க பல சரியான வழிமுறைகளைப் பின்பற்றி , மக்கள் எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்கலாயினர். இதனால் உலகளவில் பாராட்டும் பெற்றனர். ஒருபுறம் தனிமனிதனின் உரிமை பறிக்கப்பட்டது போலிருந்தாலும் அது தனிமனிதனின் சிறப்பான வாழ்க்கைக்கு அடிகோலும் என்பதே மறுக்கமுடியாத உண்மை என ஒத்துக்கொள்ளப்பட்டது. இந்தியாவும் மற்ற நாடுகளும் நீண்ட காலமாகவே மக்கள் தொகையை
|
குறைப்பதற்கான வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றன , என்றாலும் வெற்றி முழுமையாகக் கிடைக்கவில்லை. அமைப்பு , கூட்டமைப்பு மற்றும் மக்கள் தொகை வெடிப்பு ( Structure Composition and Population explosion ) மனித வளமென்பது பணித்திறனுடைய மக்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். வளமான , தரமான வாழ்க்கைக்கு அதிக எண்ணிக்கையுள்ள மக்களின் பணித்திறன் மிக மிக அவசியமான தொன்றாகும். ஒரு நாட்டின் பணித்திறன் வயது - பாலின பிரமிட்டின் வடிவத்தைக் கொண்டு கணிக்கப்படுகின்றது. மனிதப் பணித்திறனை வயதின் அடிப்படையில் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
|
1. குழந்தைகள் - பணித்திறனற்ற வயதுப் பிரிவினர் ( 0–14 வயது ) 2. வயது வந்தோர் - பணித்திறனுடைய பிரிவினர் ( 15-64 வயது ) 3. முதியவர்கள் – பணித்திறனற்ற பிரிவினர் ( 65 வயதுக்கு மேல் ) உலகில் இன்று , பல மில்லியன் குழந்தைகள் , தொழிலாளர்களாக பலதரப்பட்ட நிறுவனங்களில் பிழைப்புக்காக பணிபுரிகின்றனர். இவர்கள் வருவாய் பெற்றும் பணிபுரியும் சுதந்திர உரிமை இல்லாதவர்கள். அவ்வாறே , வாழ்க்கை வசதிகளை இழந்துள்ள முதியவர்களும் , உயிர்வாழ பல்வேறு வேதனைகளை அனுபவித்து வருகின்றனர். வயது மற்றும் பாலினத்தை அடிப்படையாகக் கொண்டு மக்கள்
|
தொகையின் பிரமிடுகள் வரையப்பட்டுள்ளன. மக்கள் தொகையின் பாலினப் பரவல் வலது இடது பாதியில் பிரமிட்டில் குறிக்கப்பட்டுள்ளது. பொதுவான வயது - பாலின பிரமிடு கூம்பு வடிவம் கொண்டது. இது அகல அடிப்பகுதியையும் , குறுகிய உச்சிப்பகுதியையும் உடையது. இந்தப் பிரமிடு சில குறிப்பிட்ட கருத்துக்களை எடுத்துச் சொல்வதாக அமைந்துள்ளது. 1. இத்தகைய பிரமிடுகளைக் கொண்டிருக்கும் நாடுகளில் 0-14 வயதுடைய குழந்தைகள் அதிக எண்ணிக்கையிலும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் குறைந்த எண்ணிக்கையிலும் காணப்படுவர். ஏனைய பிரிவினருடன் ஒப்பிடும் பொழுது
|
15-64 வயதுடைய பொருளாதாரத்தில் பங்கு கொள்ளும் மக்கள் தொகை எண்ணிக்கை மிகக் குறைவு. குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் , பொருளாதாரத்தில் பங்கு கொள்ளும் வயதினரைச் சார்ந்து வாழ்பவர்கள். ஏனெனில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்பவர்களாகவும் முதியவர்களில் பெரும்பாலோர் பணித்திறனற்றவர்களாகவும் , ஓய்வூதியம் பெறுபவர்களாகவும் இருப்பர். எனவே , இவர்களால் நாட்டு மேம்பாட்டுப் பணிகளில் ஓரளவே பங்கு பெற இயலும். இவர்களில் பெரும்பாலோர் பொருள் ஈட்டும் பணிகளைச் செய்ய இயலாத நிலையிலும் இருப்பர். இவ்விரு பிரிவினரும்
|
இனப்பெருக்கத்திலும் பங்கு பெறாதவர்கள். 3. இடைப்பட்ட வயதினரே ( 15–49 ) பெரும்பாலும் பொருள் ஈட்டும் செயல்களில் ஈடுபட்டிருப்பர். இப்பிரிவினரிடம் திருமணத்திற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதால் வருங்காலத்தில் இனப்பெருக்கத்திற்கான திறன் கொண்டவர்களாக இருப்பர். இதனால் இனப் பெருக்கப் பிரிவினராகவும் மாறுகின்றனர். பணித்திறனுக்கும் , எண்ணிக்கையை கூட்டுவர். மேலும் 10-14 வயதுடைய குழந்தைகள் 15-30 வயதுக்குச் செல்லும்போது பணிபுரிபவர்களாக மாறுகின்றனர். பொதுவாக , பிரமீடுகளில் 0-15 வயதுடைய குழந்தைகள் எண்ணிக்கையை காட்டும் அடிதளம்
|
அகன்று இருப்பின் , எதிர்காலத்தில் மக்கள் தொகை அதிக வளர்ச்சியடையக் கூடும் என்பதனைக் குறிக்கும். முன்னேறும் வயதுப் பிரமிடு ( Progressive Age Structure ) – 55 சதவீதம் - 35 சதவீதம் – 10 சதவீதம் 0-14 குழந்தைகள் 15-64 வயதுவந்தோர் 65 - க்கு மேல் - முதியவர் இப்பிரமிட்டில் பிறப்பு , இறப்பு மிகுதியாகக் காணப்படும். இத்தோற்றத்தைக் குறிக்கும் , பிரமிடுகளைக் கொண்ட நாடுகளில் பணித்திறனற்றவர்களை பராமரிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. பணித்திறனற்றவர்களின் அடிப்படைத் தேவைகளை சந்திக்காவிடில் சமுதாயச் சீர்கேடு ஏற்படும்.
|
பொருளாதாரத்தில் வீழ்ச்சியும் ஏற்பட வாய்ப்புண்டு. உயர்ந்த இறப்பு விகிதம் , சமுதாய பாதுகாப்பின்மை காணப்படும். 1-6 வயது கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ வசதி , பராமரிப்பின்மை போன்ற காரணங்களால் அதிக சிசு இறப்பு ஏற்படும். தவிர அடுத்த மூன்று பிரிவினர் , 7–10 , 11–14 , 15–19 வயதினர். உடல் ஊனத்தாலும் , பலவித சுகாதாரக் கேடுகளினாலும் மிக அதிகமாக தாக்கப்படுகின்றனர். மேலும் போதுமான மருத்துவ நலச் சேவகர்கள் இல்லாமை ( சுகாதாரமின்மை ) , தடுப்பு ஊசி மற்றும் மருந்துகள் பயன்படுத்தாமை ஆகியனவும் குழந்தைகள் இறப்பிற்கு காரணமாகின்றன.
|
எடுத்துக்காட்டாக , ஆப்பிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளின் வறுமை , சத்துணவின்மை போன்ற பிரச்சனைகளினால் அல்லலுறுகின்றன. பின்னடையும் வயது பிரமிடு ( Regressive Age Structure ) 0-14 வயது குழந்தைகள் – 30 சதவீதம் 15–64 வயது வந்தோர் 55 சதவீதம் 65 க்கு மேல் முதியோர் – 15 சதவீதம் இவ்வகை பிரமிடுகளில் பிறப்பு , இறப்பு வீதங்கள் குறைவாக இருக்கும். பணித்திறனுடையவர்கள் அதிகமாக இருப்பதால் பொருளாதார ரீதியாக நாடுகள் முன்னேற்றமடைந்திருக்கும். பணித்திறனற்ற குழந்தைகள் , முதியோரின் தேவைகள் எளிதாக , சீராக பூர்த்தி
|
செய்யப்படும். வளர்ந்து விட்ட நாடுகளில் இவ்வகையான நிலை இருப்பதால் அங்கு இவ்வகை பிரமிடுகளின் தோற்றம் காணப்படுகின்றது. ஆனால் குறைவாக உள்ள குழந்தைகள் வயது வந்தோர் நிலையை எட்டும் பொழுது பொருளாதார நிலையில் தாழ்வு காணப்படும். அதே நேரத்தில் வயது வந்தோர் முதியவராகும் பொழுது அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பினால் நாட்டில் பிரச்சனைகள் உருவாகக் கூடும். எனினும் , இங்கு எல்லாப் பிரிவினருக்கும் சத்துணவும் , மருத்துவமும் நன்கு கிடைக்கின்றன. கல்வி , சமுதாய விழிப்புணர்ச்சி , உயர்தர வாழ்க்கை இவற்றில் கவனிப்பு அளிக்கப்படுகிறது.
|
பிறப்பு விகிதம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. ஆனாலும் தொழில் வளர்ச்சி துரித வாழ்க்கைக்கு வழி கோலுவதால் முதியோருக்கு தனிக்கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டு , பாதுகாப்பு இருந்தாலும் அதிகமான முதியவர்கள் மனநோயாளிகளாகவும் , “ புதிய இறப்பு ” எனப்படும் புற்று நோய் மற்றும் “ இருதய நோய்கள் ” என்னும் நோய்களுக்காளானவர்களாகவும் இருக்கின்றனர். எடுத்துக்காட்டாக , ஏறக்குறைய ஒரு மில்லியன் ஐரோப்பியர்கள் மனநோய்க் காப்பகத்தில் உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இடைப்பட்ட வயது அமைப்பு ( Intermediate age structure ) இவ்வகை
|
பிரமிடுகள் இந்தியா , சீனா போன்ற நாடுகளில் காணக்கிடைக்கின்றன. இங்கு ஒருகால கட்டத்தில் முன்னேறிய அமைப்பு பிரமிடுகள் இருந்து , எதிர்காலத்தில் பின்னடையும் அமைப்பாக மாறும் நிலை ஏற்படலாம். இது வடிவம் மற்றும் பண்புகளில் மாறுபடும் தன்மை கொண்டது. மேற்கூறிய பிரமிடுகள் பொதுவான விதிகளினடிப்படையில் வரையப்பட்டவை. ஆனால் சில சமயங்களில் நாட்டின் , சமுதாய – பொருளாதார நிலைகளுக்கேற்ப பண்புகள் மாறுபடும். அவையாவன : 1. வளரும் நாடுகளில் ஏறக்குறைய 10 வயதிலேயே குழந்தைகள் பணித்திறன் உடையவர்களாக மாறுகின்றனர். ஆனால் வளர்ந்து விட்ட
|
நாடுகளில் 16 வயது அடைந்தும் , இருப்பதில்லை. உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பணித்திறனைப் பெற்றிருப்பினும் பணியில் சேருவதில்லை. ஆனால் , இளவயதில் மாணவப் பருவத்தினர் பகுதி நேரப் பணியாளர்களாக இருக்கின்றனர். இதன் வழியாக குறிப்பிட்ட அளவு பொருளாதார வளர்ச்சிக்கும் உதவுகின்றனர். பணித்திறன்கொண்டவர்களாக 2. வளர்ந்து விட்ட நாடுகளில் முதியவர்கள் , ஓய்வு பெறும் சலுகையினால் திறனற்றவர்களாக மாறுகின்றனர். ஆனால் வளரும் நாடுகளில் இத்தகையச் சலுகைகள் மிகக் குறைவாக இருப்பதினால் , 60 - க்கும் மேற்பட்ட வயதினரும் பணித்திறன் உடையவர்களாக
|
இருக்கின்றனர். எனவே , பொருளாதார உயர்விற்காக பணி செய்வது வாழ்வில் அவசியமாகின்றது. 3. இடப் பெயர்வுகள் மற்றும் மனித நகர்வுகள் பிரமிடுகளின் வடிவங்களை மாற்றக்கூடும். இடைப்பட்ட வயதினர் ( 15–45 ) பல காரணங்களுக்காக , தாங்கள் பிறந்த அல்லது வாழ்ந்த இடங்களிலிருந்து இடப்பெயர்ச்சி செய்கின்றனர். எனவே , ஒரு நாட்டில் குடிபுகும் மக்களின் எண்ணிக்கை அதிகமிருப்பின் , பிரமிடுகளில் இவ்வயது அமைப்பு சிறிது வெளி நோக்கி குவிந்தும் வெளியேறும் எண்ணிக்கை அதிகமிருப்பின் சிறிது உள்நோக்கிக் குவிந்தும் காணப்படும். 4. மக்கள் தொகை
|
வளர்ச்சியும் பிரமிடுகளின் வடிவங்களில் மாறுதல்களை உருவாக்கும். சரியும் வளர்ச்சி விகிதம் மூத்த மக்களின் எண்ணிக்கையையும் , உயரும் வளர்ச்சி விகிதம் குழந்தைகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்கச் செய்கின்றன. மேற்கூறப்பட்ட பண்புகள் ஒரு நாட்டின் அதிக அல்லது குறைந்த மக்கள் தொகை விகிதத்தை பொறுத்துக் காணப்படும். மக்கள்தொகை வளர்ச்சி வீதம் , எண்ணிக்கை ஆகியவற்றை கணக்கிட்டு , கட்டுப்படுத்தி அவற்றினடிப்படையில் நாட்டினை நலம்பெறச் செய்யும் தகவல்களை அறிந்து கொள்ள பிரமிடுகள் உதவுகின்றன. எனவே , பிரமிடுகளின் வடிவத்தைக் கொண்டு ஒரு
|
நாட்டின் தற்போதைய , எதிர்கால பணித்திறன்களை அறிந்துக் கொள்ளலாம். முற்காலத்திலிருந்தே , வரையறுக்கப்பட்ட மக்கள்தொகை அவசியம் எனக் கருதப்பட்டது. எனினும் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பல்வேறு கருத்துக்கள் காணப்பட்டன. இச்சூழ்நிலையில் தாமஸ் ராபர்ட் மால்தஸ் என்பவரால் 19 ஆம் நூற்றாண்டில் மக்கள் தொகை கோட்பாடு ஒன்று வெளியிடப்பட்டது. இவர் தொழிற் புரட்சிக்குப்பின் மக்கள் தொகை வளர்ச்சியடைந்ததையும் , அதனால் ஏற்படக்கூடிய பொருளாதார , சமுதாய மாற்றங்களையும் கருத்தில் கொண்டு இக்கோட்பாட்டை வெளியிட்டார். இதன்படி ,
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.